- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஆபரேஷன் இன்றி சிறுநீரகக்கற்கள்

ஆபரேஷன் இல்லாமல் சிறுநீரகக் கற்களை அகற்றும் முறை

ஆபரேஷன் செய்யாமல் நவீன இயந்திரத்தின் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்ற முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

மதுரை விநாயகா லேசர் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், சிறுநீரகத்துறை நிபுணர் டாக்டர் கோபாலன் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கற்கள் உருவாவது எப்படி?

ஒருவருக்கு சிறுநீரகத்தை ஒட்டிய இடுப்பு பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத அளவு வலியிருந்தால் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகி இருக்கலாம்.

இந்த கற்கள் மூலம் பொதுவாக ஆண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒருவரின் உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும் போது, சிறுநீரின் அளவு குறைந்து அடர்த்தியாகிறது. இதுவே நாளடைவில் கற்களாக மாறுகிறது.

மேலும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்குவதாலும், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதாலும், சிறுநீர்ப் பாதையில் தொற்று போன்ற காரணத்தினாலும் சிறுநீரகக் கற்கள் உருவாக்கும்.

இந்த கல், 2 முதல் 3 சென்டி மீட்டர் அளவில் இருந்தால் அதனை மருந்து முலம் கரைத்து வெளியேற்றி விடலாம்.

அதற்கு மேல் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை முறையில் தான் வெளியேற்ற முடியும். ஆனால் இப்போது அதற்கு பதிலாக நவீன முறையில் ஆபரேஷன் செய்யாமல், எவ்வித வலியும் இல்லாமல் கற்களை வெளியேற்றுகிறோம்.

மெக்கானிக்கல் அலைகள்

இதற்காக சுமார் 30 லட்சம் மதிப்புள்ள நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் துணை கொண்டு “லித்தோ டிரிப்ஸி” என்ற முறையில் நோயாளியின் வயிற்றுப்பகுதியில் தண்ணீர் நிரப்பிய பையால் அழுத்தப்படும். இதன் முலம் “மெக்கானிக்கல் அலைகள்” அனுப்பப்படுகின்றன. இந்த அலைகள் ஒரு நிமிடத்திற்கு 60 முறை உண்டாகும்.

ஒருவரின் உடலில் உள்ள கல்லின் அளவைப் பொறுத்து ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வீதம், 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கற்களை கரைத்து விடலாம். உடலில் உள்ள கற்கள் நொறுங்குவது கம்ப்ïட்டர் திரையின் மூலம் கண்காணிக்கப்படும். நோயாளிகள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற வேண்டியதில்லை. இதற்கு, குறைந்த கட்டணமாக ரூ.4ஆயிரத்து 500 வசூலிக்கப்படுகிறது.

தடுக்கும் வழிகள்

ஒருவருடைய உடலில் கால்சியம், ஆக்சிலேட் தாது உப்புகள் அதிகரிப்பதாலும், சிட்ரேட் போன்ற தாது உப்புகள் குறைவதாலும் சிறுநீரக கல் உருவாகிறது. இந்த கல் உள்ளவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் வலி, வாந்தி, சிறுநீர் வெளியேறும் போது எரிச்சல், அடிக்கடி ரத்தம் வடிதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

இதனை தடுக்க அனைவரும் தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். இந்த கற்களை கவனிக்காமல் விட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.

மேலும் ஒருவருக்கு ஒருமுறை கற்கள் உருவானால் 80 சதவீதம் மறுபடியும் அந்த கற்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனவே கற்கள் உருவாவதை தடுக்க டாக்டரின் ஆலோசனை பெற்று, ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டு ஆரம்பத்திலேயே அதனை தடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: தினத்தந்தி