- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பள்ளிக்கூடங்களில் மாறும் பண்புகள்!

கொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் பெரிய தண்டனையாகவும்) ஒவ்வொரு மாணவனுக்கும் தண்டனையை வழங்குகிறது. அங்கேயேத் தங்கிப் படிக்கும் வசதியை (அதாவது போர்டிங் வசதியைக்) கொண்ட பள்ளியிலுள்ள மாணவர்கள் சுதந்திரத்தைப் பறிகொடுத்து விட்டு, அந்தப் பள்ளியின் கொள்கைக்கு ஏற்றவாறு தங்களுடைய அன்றாட வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த மாணவர்கள், இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் தங்களுடைய குடும்பப் பழக்க வழக்கம், கலாசாரம், பண்பாடு ஆகியவைகளைச் சட்டென்று உதறிவிட்டு பள்ளியில் பின்பற்றப்படும் கொள்கையை பட்டென்று கைப்பிடிக்கிறார்கள். கான்வென்ட் பள்ளியின் நியதிகள் ஒவ்வொரு மாணவனுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டதோடு, ஒவ்வொருவனுடைய ஆசைகள், விருப்பு-வெறுப்பு போன்ற உணர்வுகளை ஒட்டு மொத்தமாக பிடுங்கிக் கொள்கிறது. இத்தகைய பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் முகவரியைத் தொலைத்து விட்டு, முன்காலத்தில் அந்தமான் ஜெயிலில் சிறையிடப்பட்ட தலைவர்களின் வாழ்க்கையைப் போல கான்வென்ட் பள்ளியிலுள்ள ஒவ்வொரு மாணவனுடைய வாழ்க்கையும் அமைந்து விடுகிறது.

மாணவர்கள் என்றால் அங்கே குறும்புகளுக்கும் இடமுண்டு, கான்வென்ட் பள்ளி மாணவர்கள் குறும்புகளை மறந்து வாழ வேண்டும். இந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் அந்தந்த நேரத்தில் செய்ய வேண்டிய செயல்களை கட்டாயமாக செய்து தீரவேண்டும். ஏதோ சாவி கொடுத்து இயங்கும் பொம்மையைப் போல ஒவ்வொரு மாணவனும் செயல்படுவது கான்வென்ட் பள்ளியின் வழக்கமாகும். இத்தகைய பள்ளி, ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு அசாதாரண வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. அந்தக் குறும்புத்தனம், ஆசைகள், தனித்திறன் போன்ற உணர்வுகளை ஒதுக்கிவிட்டு வாழுகிற மாணவனுடைய வாழ்க்கை முற்றும் துறந்த முனிவனுடைய வாழ்க்கையைப் போலிருக்கிறது. இந்த உணர்வுகள் அனைத்துமிருந்தால் ஒரு மாணவன் சுவாரஸ்யமான வாழ்க்கையை அனுபவிக்கிறான். ஆனால், கான்வென்ட் பள்ளிகள் ஒவ்வொரு மாணவனுக்கும் சாறு இல்லாத சக்கையைப் போன்ற வாழ்க்கையை பரிசாக கொடுத்திருக்கிறது.

பிறக்கப் போகும் குழந்தை கிருஷ்ணனைப் போல குறும்புத்தனமான குழந்தையாக பிறக்க வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரின் ஆசை நியாயமானது. யசோதாவின் மடியில் தவழ்ந்த மழலைக் கிருஷ்ணனைப் போல, கோபியர்களை வம்புக்கு இழுத்த குறும்புத்தனமான கிருஷ்ணனைப் போல செல்வத்தை பெற்றெடுக்க வேண்டுமென்று பெற்றோருடைய மனம் ஏங்குவதில் தவறில்லை. அன்று கிருஷ்ணனின் குறும்புகளை யசோதா பொறுமையோடு சமாளித்து கொண்டாள். இன்று பெற்றோர்கள் குழந்தைகளின் குறும்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பொறுமையை இழந்து விடுகிறார்கள். கிருஷ்ணனைப் போல மகன் வேண்டுமென்ற ஆசையோடு யசோதாவினுடைய பொறுமையும் பெற வேண்டுமென்ற ஆசையையும் பெற்றோர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளின் பொறுப்பை கான்வென்ட் பள்ளிக் கைகளில் ஒப்படைத்து விட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று நினைக்கிற பெற்றோர்கள்தான் இன்றைய சமுதாயத்தில் அதிகபட்சமாக இருக்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்டு, சுமந்து கொண்டிருக்கிற பொறுப்பை மற்றவர் தோள்மீது ஏற்றிவிட்டு, ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள். போர்டிங் பள்ளியில் படிக்கிற மாணவனுடைய எண்ணம், செயலாக்கம், திறமை எதுவும் நிறைவேற்றப் படுவதில்லை, ஒவ்வொருவரும் புழுங்கிப் புழுங்கி வாழ்கிறார்கள். இதனால் மாணவர்கள் நாளடைவில் மன அழுத்தம், மன உளைச்சல் ஆகிய மன நோய்க்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களுடைய சுதந்திரத்திற்காக தங்களுடைய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கும் இந்த பிஞ்சு உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கும் கனவுகள் என்றைக்காவது ஒருநாள் நிறைவேறுமென்ற நம்பிக்கையின் விளக்கு ஒவ்வொரு மாணவனுடைய மனதிலும் எரிந்து கொண்டிருக்கிறது.

குழந்தையின் மனோபாவத்தைப் புரிந்து கொண்ட பெற்றோர்கள, செல்வங்களுக்கு அன்பு, பாசம், உறவுகள், பாதுகாப்பு போன்ற அனைத்தையும் புரிய வைத்து வளர்க்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளருகிற குழந்தை சமுதாயத்தில் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுவதில் தப்பில்லை, பயமில்லாமல் தங்களுடைய எண்ணங்களைச் செயல்படுத்த விரும்புகிறார்கள். அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையைப் பெற்றுக் கொடுப்பது ஒவ்வொரு பெறறோருடைய தலையாயக் கடமையாகும். இத்தகைய பொறுப்புணர்ச்சி ஒரு நல்ல சமுதாயத்தைப் படைக்கக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது.

நன்றி: -சந்தியா கிரிதர், புதுடெல்லி  – முத்துக்கமலம்.காம்