- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மாற்றங்கள் – கவிதை

கருவறையில் இருக்கையிலே
இருட்டறை தான் என்றாலும்
உணர்ந்தோம் ஒரு பாதுகாப்பை.
வெளிச்சமும் பிடிக்கவில்லை
வெளியுலகம் வருவதற்கோ
துளியளவும் விருப்பமில்லை.
உள்ளேயே இருப்பதற்கா
கருவாய் நீ உருவானாய்
என்றே பரிகசித்தே படைத்தவன்
பாரினில் பிறக்க வைத்தான்.

அழுதே நாம் பிறந்தோம் பாதுகாப்பை
இழந்தே நாம் தவித்தோம்.
பிறந்தது இழப்பல்ல
பெற்றது ஒரு பேருலகம்
என்றே பிறகுணர்ந்தோம்.
சிரிக்கவும் பழகிக் கொண்டோம்
உறவுகளை நாம் பெற்றோம்
நண்பர்களைக் கண்டெடுத்தோம்
தேவைகளைப் பூர்த்தி செய்ய
அனைத்தும் நாம் கற்றும் கொண்டோம்.

ஒன்றை இழக்கையிலே
ஓராயிரம் நாம் பெறுவோம்
இழந்ததையே நினைத்திருந்தால்
புதியதையே பெற மறப்போம்
எதையும் இழக்கும் பொழுதெல்லாம்
இதை நினைக்கும் மனமிருந்தால்
இருக்கையிலே போற்றினாலும்
இழக்கையிலே மனம் வருந்தோம்
இனிப் பெறுவதென்னவென்றே
இன்முகத்துடன் எதிர்பார்ப்போம்.

குறிப்பு: சமீபத்தில் கோவை தமிழ்ச்சங்கம் நடத்திய 72 மணி நேரக் கவியரங்கில் என்.கணேசன்  அவர்கள் வாசித்த கவிதை

நன்றி: என். கணேசன்