- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அதிகரிக்கும் ஒலி மாசு – தவிக்கும் கோவை மக்கள்!

அதிகரிக்கும் ஒலி மாசு; தூக்கமிழந்து தவிக்கும் கோவை மக்கள்!

நகருக்கு வெளியே புதிய தொழிற்பகுதிகளை அரசு உருவாக்காத காரணத்தால், குடியிருப்புப் பகுதிகளில் பெருகி வரும் தொழிற்கூடங்கள் மீதான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

கோவை மாவட்டத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. தொழில் வளம் அதிகமுள்ள இந்த மாவட்டத்தில், தொழிற் கூடங்களுக்கென சிறப்புப் பகுதிகள் உருவாக்கப்படாத காரணத்தால், 70 சதவீதத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறுந்தொழிற்கூடங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு இடையே இயங்கி வருகின்றன. பகல், இரவு எல்லா நேரங்களிலும் இயங்கும் இந்த தொழிற்சாலைகளால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு பல விதங்களிலும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.இந்த தொழிற்சாலைகளிலிருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீர், நிலத்தடி நீரையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கச் செய்கிறது; இவற்றில் இருந்து கிளம்பும் புகை மற்றும் துகள் மாசுகளால், சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை எல்லாம் விட, இடைவிடாமல் எழும்பும் தொழிற்சாலை இயந்திரங்களின் சப்தம்தான், குடியிருப்புவாசிகளின் தூக்கத்தைத் துரத்தி, தொழில் முனைவோரை எதிரிகளாகப் பார்க்க வைக்கிறது.குடியிருப்புப் பகுதிகளுக்குள் தொழிற்சாலைகள் அதிகரிப்பதைப் போலவே, ஒலி மாசு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்குச் செல்லும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும், 10லிருந்து 15 வரையிலும், ஒலி மாசு புகார்கள் வருவதாக வாரிய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்தான், நகருக்கு வெளியே புதிய தொழில் நகரங்களை அல்லது தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டுமென்று தொழில் முனைவோர், பொது மக்கள் இரு தரப்பினருமே வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குடியிருப்புப் பகுதிகளில் தொழிற்கூடங்களும், அவற்றின் மீதான மக்களின் புகார்களும் அதிகரித்து வருகின்றன. ஒரு புறத்தில், தொழில் அமைப்புகளின் குற்றச்சாட்டு; மறுபுறத்தில் பொது மக்களின் அதிருப்திக்கு இடையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிக்கிக்கொண்டு, இந்த தொழிற்கூடங்களின் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா, என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறது.மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, தொழிற்சாலை பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களுக்கு பகலில் 75 டெசிபெல், இரவில் 70 டெசிபெல் வரையும், குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55, இரவில் 45, வர்த்தக பகுதிகளில் 65, 55 டெசிபல் வரையும் ஒலி மாசு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில், இதற்கும் அதிகமான அளவில்தான் தொழிற்கூடங்களின் ஒலி மாசு, மக்களைத் துன்புறுத்தி வருகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை தெற்கு அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் தடையில்லா சான்று பெற்றுள்ள 1,800 பெரிய தொழில் நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதிகளிலேயே செயல்படுகின்றன. இந்த தொழிற்கூடங்களால், உண்மையிலேயே பாதிப்பு ஏற்படுவது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட விரோதங்கள் காரணமாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர். கோவையைப் பொறுத்தவரை, தொழில் வளர்ச்சியையும், மக்களையும் பிரிக்க முடியாது; அதனால்தான், குடியிருப்புப் பகுதிகளுக்குள் தொழிற்கூடங்கள் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் சகித்துக் கொண்டு, வாழப்பழகியுள்ளனர். ஆனால், இதே நிலை தொடர்வதற்கு வாய்ப்பில்லை. தொழிற்கூடங்கள் மட்டுமின்றி, தகவல் தொழில் நுட்பம், உயர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் கோவை வளர்ந்து வருவதால், இரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் புதிய தொழிற்பேட்டைகளை அரசு மிக விரைவாக உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

“6 மாத சிறை தண்டனை’:

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட சுற்றுச்சூழல் இன்ஜினியர் ரவிச்சந்திரன் கூறியதாவது:சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் புகார் அளிக்காத வரையிலும், துறைரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர். புகார் வந்தால், நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம். கோவை தெற்கு பகுதிகளில் மட்டும், கடந்த ஓராண்டில் நான்கு விசைத்தறி கூடங்கள் மீது ஒலி மாசு புகாருக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசைத்தறி மீது மட்டுமின்றி, பிற தொழிற்கூடங்கள் மீதான ஒலி மாசு புகார்களும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. அடுக்கு மாடிக் குடியிருப்பும், ஒரு கிராமத்துக்கு சமம் என்பதால், அங்கிருந்து ஒலி மாசு புகார் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் உறுதி செய்யப்பட்டால், அதிகபட்சமாக ஆறு மாதங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நன்றி: தினமலர்