- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பத்தமடைக்கு பெருமை பாஹீரா பானு!

Capture [1]திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது,இங்கு செய்யப்படும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாய் எனப்படும் படுக்கை விரிப்புகள் உலகப்புகழ் பெற்றவை. பாயில் மணமக்கள் பெயர்கள் எழுதுவது, ஒவியங்கள் தீட்டுவது, பட்டுதுணி போல மென்மையாக உருவாக்குவது என்பதெல்லாம் பத்தமடை பாயின் பெருமைகளாகும். இப்படி பாயினால் பெருமை அடைந்துள்ள பத்தமடைக்கு இன்னொரு பெருமை கிடைத்துள்ளது. இந்த பெருமைக்கு காரணமானவர் பாஹீரா பானு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் எடுத்து தேர்வான 19 மாணவியரில் அரசு பள்ளி மாணவி இவர் ஒருவரே. அதிக பணம் கொடுத்த நகரத்து பள்ளிகளில் படிக்கவைத்தால்தான் தங்களது பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெறமுடியும் என்ற எண்ணத்தை உடைத்து எறிந்திருக்கிறார். எந்த ஊராக இருந்தாலும் எந்த பள்ளியாக இருந்தாலும் சரி படிக்கிற பிள்ளை படிக்கும் என்ற பழமொழியின் இலக்கணமாகியுள்ளார்.

இமாலய இலக்கு:

 ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தவர் தமிழில் மட்டும் ஒரு மார்க் குறைந்து போனதால் 500க்கு 499 என்ற இமாலய இலக்கை தொட்டுள்ளார். மாணவி பாஹீரா பானுவின் வெற்றியை ஊரே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது, ஆனால் தனது இந்த வெற்றியை சாதனையை தனது ஆசிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறார். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த பத்தமடைதான், அம்மா நுார்ஜஹான் படிக்காதவர். எனக்கு தம்பி இரண்டு தங்கைகள் உண்டு. எல்லாருக்காகவும் உழைக்க என் அப்பா வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு போயிருக்கிறார். அப்பாவின் வியர்வைக்கு நாங்கள் பரிசாக எங்களது படிப்பைதானே தரமுடியும் என்று உணர்ந்து படித்துவருகிறோம். இதே அரசு பள்ளியில்தான் ஆரம்பம் முதல் படித்துவருகிறேன், எப்போதுமே முதல் மாணவிதான், எப்போதாவது முதல் இடத்தை தவறவிடும் போது அதை குறையாக சொல்லி திட்டாமல், குற்றமாக கருதி தண்டிக்காமல் கனிவாகவும்,கருணையாகவும் பேசி உற்சாகத்தால் விட்ட இடத்தை பெறவைத்த அருமையான ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தவர்கள், அதிலும் தலையாசிரியர் வைகுந்தராமன் மாதிரி அர்ப்பணிப்பு உள்ள தலைமை ஆசிரியரை பார்ப்பது கடினம்.

ட்யூஷன் கிடையாது:

 எங்க பள்ளியில் யாரும் ட்யூஷன் எடுத்தது கிடையாது, பள்ளியிலேயே காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள், விடுமுறை காலங்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவார்கள். மனப்பாடம் செய்வதை விட பாடங்களை புரிந்து கொண்டு படிப்பது எப்போதுமே வெற்றியை தரும் என்று அதற்கேற்ப சொல்லிக் கொடுப்பார்கள். வழக்கமாக காலை ஐந்து மணிக்கு எழுந்து படிப்பேன் தேர்வு நேரத்தின் போது காலை 4 மணிக்கு எழுந்து படித்தேன் இரவு பத்து மணிக்கெல்லாம் படித்து முடித்துவிட்டு துாங்கப்போய்விடுவேன். டி.வி.,போன்ற பொழுது போக்கு சாதனங்களால் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டேன், எப்படியும் ஒரு ரேங்க வாங்குவேன் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எதிர்பாராதவிதத்தில் மாநில அளவில் முதல் ரேங்க் வாங்கியுள்ளேன். இதே போல இதே பள்ளியில் படித்து பிளஸ் டூவிலும் சாதனை மாணவியாக வருவேன் பிறகு மருத்துவப் படிப்பை எடுப்பேன் இதய நோய் நிபுணராகி இதே ஊரில் என் ஊர் மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம் என்றவர் குரலில் இப்போதே இதய நோய் நிபுணராகிவிட்டது போன்ற நம்பிக்கை தென்பட்டது.

பாஹீரா பானுவை வாழ்த்த விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 8015792519 .(இந்த போன் எண் அவரது மாமாவினுடையது, ஆகவே விஷயத்தை சொன்னால் அவர் பாஹீராவிடம் போனை கொடுத்து பேசவைப்பார்.)