- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கற்றல், கற்பித்தலில் மாற்றம் தேவை!

edu2 [1]உலகத்தைப் பார்த்து உன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றையும் பார்த்து கற்றுக் கொள்வதும், கண்டுபிடிப்பதும் ஒருவகை. உனக்குள் இறங்கி உன்னைக் கவனித்து உனக்குள் என்ன இருக்கிறது, நீ யார் என ஆராய்ந்து உனக்கொரு முகவரியை உருவாக்கி இவ்வுலகத்திற்குத் தேவையான, திறமையான ஒரு பொருளாக உன்னையே கொடுப்பது என்பதுதான் இன்றைய மிக உயர்ந்த சேவை.
ஒரு வாத்து தன் 25 குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டே செல்கிறது. வழியில் ஓர் இடத்தில் மூன்று படிக்கட்டுகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிர்பந்தம். முதலில் தாய் வாத்து இரண்டு படிகள் தாண்டி, மூன்றாவது படியில் ஏறிவிடுகிறது. தாயின் வழியில் செல்லும் குஞ்சுகள் அதனைப் பார்த்து படிகளில் ஏறுகிறது.
ஒரே தாவலில் 5 அல்லது 6 குஞ்சுகள் தாயோடு சென்றுவிட்டன. தாய் குவாக், குவாக் என்ற சத்தத்தை மட்டும் எழுப்பிக் கொண்டு அசைந்தபடியே நிற்கிறது. மேலும் சில குஞ்சுகள் 2 அல்லது 3 முறை தடுமாறிய பின், தாயிடம் சென்று விட, பிற குஞ்சுகள் பலமுறை தவறி இறுதியில் தாயோடு 3-ஆவது படிக்கட்டுக்குச் சென்றுவிட்டன.
அத்தனை குஞ்சுகளும் ஏறி வந்த பின், தாயானது மகிழ்ச்சியோடு தன் குஞ்சுகளுடன் பயணத்தைத் தொடர்ந்தது. இதுதான் இயற்கை.
எல்லா உயிரினங்களும் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றலை பிறப்பிலேயே பெற்றிருக்கின்றன. மனிதனைத் தவிர, பிற உயிரினங்கள் எப்பொழுதும் தங்கள் குட்டிகளை வளர்க்கும் முறைகளை மாற்றவே இல்லை. இப்பொழுதும், பூனை தன் குட்டிகளை வாயில் கவ்வி எடுத்துச் செல்கிறது. குரங்கின் குட்டிகளோ தாயை இறுக்கமாகக் கட்டிக் கொள்கின்றன. இவை எப்பொழுதும் மாறாமல் நடக்கின்றன.
ஆனால், மனிதர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும், உருவாக்குவதிலும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர். நாட்டில் எத்தனை கல்வி முறை? அதை கற்பிப்பதில்தான் எத்தனை முறைகள்!
Education-System [2]குழந்தைகள் பெற்றோர்களின் கைப்பாவைகளாக மாறும் வரை, பள்ளிகளின் கைதிகளாக மாறும் வரை இயல்பாகவே வளர்கின்றனர். பிறந்த குழந்தையானது தனது பாலை எப்படிக் குடிக்க வேண்டும் என்பதை அறிந்தேதான் பிறக்கிறது. “இங்கா’ என்ற சொல்லை குழந்தையின் மூலம்தான் இந்தச் சமுதாயம் தெரிந்து கொண்டுள்ளது.
பிறந்த சில மாதத்தில் குழந்தை திரும்பிப் படுக்கிறது. பின் தவழ்ந்து செல்கிறது. யாருடைய தூண்டுதலும் இன்றி, குழந்தையை உட்கார வைப்பது மட்டும்தான் நாம் பயிற்சி கொடுக்க வேண்டும். பின்னர் எழுந்து எதையேனும் எடுத்துக் கொண்டு தானே நிற்கும், பின்னர் நடக்கும். இப்படி இடம் பெயரவும், பேசவும், செயல்படவும் தானே கற்றுக் கொள்கிறது.
தானே கற்கும் ஆற்றல் கொண்ட குழந்தைகள், பல கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளன. மற்றவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து தற்போது பாடத்திட்டத்தின் மூலம் கற்கும் மாணவர்கள் அதனை மனப்பாடம் செய்து, ஒப்பித்து, எழுதி, மதிப்பெண் பெறுவது என்ற வகையில் கல்வியின் பாதை மாறியுள்ளது.
இந்த நிலையில் மற்றவர்களின் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் பார்க்கும்போதும், படிக்கும்போதும் அதனை வேறு ஒன்றாக மாற்றும் வகையில் நமது சிந்தனையை மாற்றிக் கொள்வதே இன்றைய தேவை.
ஏனெனில், ஒன்றிலிருந்து மற்றொன்றும், மற்றொன்றிலிருந்து வேறொன்றும், வேறொன்றிலிருந்து இன்னொன்றும், இன்னொன்றிலிருந்து பிரிதொன்றும் உருவாவதுதான் இயற்கை.
உயிரினங்களாகிய நாம் பல்வேறு வகையான, ருசியான, வண்ணத்திலான உணவினை தினந்தோறும் உண்கிறோம். நமது வயிறானது அவற்றை ரத்தம், ஆற்றல், கழிவு என்ற மூன்று வகைப் பொருள்களாக மாற்றுகிறது. எந்த வண்ணத்தில் நாம் உட்கொண்டாலும் ரத்தம் சிகப்பு வண்ணமாகவே உள்ளது. இந்த நமது உடலின் தத்துவம் நமக்கு எதைக் கூறுகிறது?
நாம் எதைப் பார்த்தாலும், படித்தாலும் யாருடைய கருத்துகளைக் கேட்டாலும், அதனை உள்வாங்கி வெளிப்படுத்தும்போது நமது படைப்பானது நமது பாணியில் நம்முடைய Brand-ஆக இருக்க வேண்டும்.
உள்ளே எடுத்துச் சென்றதை அப்படியே வெளிப்படுத்துவது என்பது உண்டவற்றை வாந்தி எடுப்பதற்கு சமமாகும். அப்படியே பிரதிபலிக்க நாம் ஒன்றும் ஜெராக்ஸ் மெஷின் அல்ல. நாம் ஒரு படைப்பு. இறைவனின் அற்புதமான படைப்பு.
ஒன்றைப் போல மற்றொன்றை படைப்பதில்லை இறைவன். உலகத்தில் வாழும் மனிதர்களின் கைரேகை ஒருவரைப் போல் இன்னொருவருக்கு இல்லை. அப்படி இருக்க, நாம் மட்டும் ஏன் எடுத்துக் கொண்டதை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்? ÷
மாணவர்களும், ஆசிரியர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. மனப்பாடம் செய்த வினா, விடைகளை அப்படியே ஒப்பிக்கவும், ஒரு வார்த்தை மாறாமல் எழுதவும் பயிற்சி கொடுப்பதை மாற்றினால் கல்வியின் நோக்கமும் புலப்படும், தரமும் உயரும். கற்றலும், கற்பித்தலும் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும். கல்வி என்பது ஆசிரியர், மாணவர் என இருவர் கைகளிலும் வெற்றிக் கனியாக சுவை தரும்.

By முழுமதி மணியன்