- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அறிவியல் அதிசயம் – அறிமுகம்

சாதனையாளர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் அமெரிக்க நிறுவனம் தான் “Marquis” ஆகும். அதன் Who’s who என்ற வெளியீட்டில்  விஞ்ஞானம்  மற்றும் பொறியியல் சாதனையாளர்களில் ஒருவர் தான் முஹம்மது இக்பால் B.E. M.B.A. என்ற தமிழராகும். தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்த முஹம்மது இக்பால் எனது நெருங்கிய நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் என்பதில் பெருமையடைகிறேன்.

துபையில் அமைந்திருக்கும் ஜப்பான் கூட்டு நிறுவனமான ஈடிஏ மெல்கோ நிறுவனத்தில் 1986ம் ஆண்டு பயிற்சிப் பொறியாளராகத் தமது பணியைத் தொடங்கிய இவர், தனது ஆற்றல், முறையான – சரியான திட்டமிடுதல் போன்றவற்றில் வளர்ந்து, இன்று பொது மேலாளராகப் பதவி உயர் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக ஜப்பான், மலேசியா, சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட    I.E.E.E. (USA) என்ற பன்னாட்டு பொறியாளர் அமைப்பில் மூத்த உறுப்பினராகச் செயல்படுகிறார். சிறந்த மேலாண்மையாளர்” சான்றிதழை உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நிறுவனமான Mitsubishi Electric Corp., Japan – 2000,2001 மற்றும் 2002 என தொடர்ந்து வழங்கி சிறப்பித்துள்ளது. துபையில் “பொறியாளர் மேலாண்மை” அமைப்பின் தலைவராக பல வருடங்கள் பணியாற்றிய பெருமையும் உண்டு. புகழ் பெற்ற    All India Management அமைப்பில் ஆயுள் கால உறுப்பினராக தேர்வு பெற்ற இவர் பன்னாட்டு   Elevator Engineer அமைப்பு மற்றும் பல பொறியியல், மேலாண்மை அமைப்புகளிலும் பதவி வகித்து வருகிறார்.

அமீரகத்தில் வெளியாகும் “The Gulf Today”   நாளிதழில் தொடர்ச்சியாக ஆங்கிலக் கட்டுரைகள் எழுதிப் புகழ் பெற்றவர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும்   “Elevator World” என்ற பத்திரிக்கை, இவரது எழுத்தாற்றலால் கவரப்பட்டு – இவரை ஆசியாவின் நிருபராக நியமித்துள்ளது.

இவர் சிறுவயது முதல் பத்திரிக்கைகளுக்கு சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் எழுதி பல பரிசுகள் பெற்றுள்ளார். தமிழகத்தின் தலைசிறந்த நாளிதழான “தினத்தந்தி”யில், இளைஞர் மலரில் (சனிக் கிழமை வெளிவரும்) இவர் எழுதி வரும் “அறிவியல் அதிசயம்” கட்டுரைத் தொடர், லட்சக்கணக்கான வாசகர்களைக் கவர்ந்துள்ளது.

முன்னேறி வரும் விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விசயங்களை சாதாரண மக்களும் எளிதாக புரியும் வண்ணம் தமிழில் தந்துள்ளார். இந்த தொடர்களைப் படிப்பதன் மூலம் மாறி வரும் உலகை அறிந்தவர்களாக வாழலாம்.

இந்த தொடரை நமது தளத்தில் வெளியிட அனுமதி தந்த அருமை நண்பர் முஹம்மது இக்பால் B.E. M.B.A. அவர்களுக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

M.S. காஜா முயீனுத்தீன்
——————————————————————————–

நண்பர் இக்பால் பற்றி டாக்டர் ஹிமானா:
அறிவியலும் ஆன்மீகமும் வெவ்வேறானவை என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை. இவ்விரு துறைகளிலும் தனித்தனியாகப் பயிற்சி பெற்றோர் தங்கள் துறைதான் சரியானதென்று வாதிடுவது சகஜமே. நடைமுறையில் நாம் இத்தகைய நிலைகளை அடிக்கடி பார்க்கவும் முடிகிறது.

அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படாத எதையும் நம்புவதில்லை என்ற நம்பிக்கை நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில் வீண் வாதங்களும் – தர்க்கங்களும் இடையிட்டு விடுவதையும் பார்க்கிறோம்.

இந்த யதார்த்தத்தில் நன்கு அறிவியல் கற்ற ஒருவர்  ஆன்மீக அறிவையும் ஆர்வமுடன் கற்றுத் தெளியும் போது, அறிவியல் ஆன்மீகத்திலிருந்து விலகிய ஒன்றல்ல; உண்மையில் ஆன்மீகத்தின் ஒரு சிறிய துகள்தான் அறிவியல் என்ற உண்மை புரிந்து போகிறது.

இக்கட்டுரைத் தொடரை நமது வாசகர்களுக்குத் தரப் போகும் பொறியாளர் – நிர்வாக மேலாளர் சகோதரர் இக்பால் அவர்கள் அத்தகைய ஆன்மீகம் கற்ற ஒரு அறிவியலாளர்! அதனால் அவர் எழுத்துக்கு ஒரு தனித்தன்மையும் பிரகாசமும்  உண்டு.

அவரை என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

அவரது ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை வாசித்தவன் என்ற முறையிலும் – அவரது அக்கட்டுரைகளின் விமரிசனங்களைப் கண்ணியத்துக்குரிய சிராஜுல் மில்லத் அவர்களும், பேராசிரியர், சமுதாயத் தலைவர் கே.எம்.காதிர் முகையித்தீன் அவர்களும் விளக்கமளித்ததைக் கேட்டவன் என்ற முறையிலும், நானும் ஓர் ஆன்மீக மாணவன் என்ற முறையிலும் சித்தார்கோட்டை வளைத்தளத்தில் அவரது ஆக்கங்கள் வெளிவரப் போவதில் ஒரு வாசக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

அறிவியல்கட்டுரைகளைத் தரும் அவர் அறிவியலின் ஆன்மீக வேரையும் நமக்காக அகழ்ந்தெடுத்து அளிப்பார் என்றும் நம்புகிறேன்.

அன்புடன்,
ஹிமானா சய்யித், சிங்கப்பூர்
22 – 12- 2005