Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2013
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 7,079 முறை படிக்கப்பட்டுள்ளது!

தொழிலை எப்படி இருமடங்காக்குவது 1

1. தொழிலின் ஜீவன்

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி தொழில் நுணுக்கங்களை ஆராய்ந்து 3 புத்தகங்கள் எழுதக் காரணமாயிருந்தது. இப்புத்தகங்கள் அமெரிக்காவில் பிரசுரமாகியுள்ளன. மூன்றாவதாக வெளியிடப்பட்ட புத்தகத்தை Garry Jacobs உம் Robert Macfarlane உம் சேர்ந்து எழுதியுள்ளார்கள். இலாபத்தை இரட்டிப்பது எப்படி, தொழிலை இருமடங்காக்குவது எவ்விதம் என்பதே புத்தகத்தின் முக்கிய கருத்துகள். Vital Corporation என்பது புத்தகத்தின் பெயர்.

அப்புத்தகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு திரு. P.V. சங்கர் ஹிந்து பத்திரிகையில் “புதிய மானேஜ்மெண்ட் மூலம் தொழிலை எப்படி இருமடங்காக்குவது” என்ற தலைப்பில் ஒருகட்டுரை எழுதியிருந்தார். தொழிலுக்கு முக்கியமான அம்சங்கள் ஐந்து

(1) அமைப்பு (2) டெக்னாலஜி (3) மார்க்கட் (4) தொழிலாளர் (5) முதல்

என்பது இப்புத்தகத்தின் அடிப்படைச் சித்தாந்தம். அவற்றுள் முதலின் பெருமையை நாம் அறிவோம். அதை முதன்மையாகவும் கருதுகிறோம். ஐந்தும் முக்கிய அம்சங்களாகும். எந்த ஓர் அம்சம் தீவிரமாக வளர்ந்தாலும் தொழில் இரட்டிப்பாகும் என்றாலும் இந்த 5 அம்சங்களும் (balance) எந்த அளவில் ஒன்றுபட்டு நிறைகின்றனவோ அந்த அளவில்தான் பலன் கிடைக்கும். உதாரணமாக, மார்க்கட் இல்லாமல் முதல் உபரியாக இருந்தால், அம்முதலால் தொழில் பலன் அடையாது. 4 அம்சங்கள் சிறப்பாகவும் பழைய டெக்னாலஜியும் இருந்தால், இந்த நான்கு அம்சங்களுக்குரிய பலனும் கிடைக்காது. எனவே இந்த 5அம்சங்கள் ஒன்றுக்குத் தகுந்தாற்போல் மற்றவை பொருத்தமாக இருந்தால் தான் பலன் கிடைக்கும். எந்தக் கம்பெனியிலும் இந்த 5 அம்சங்கள் முன்னும் பின்னுமாகத் தான் இருக்கும். இருக்கும் அம்சங்களை (if you balance the 5 components) ஒன்றோடு ஒன்று சேர்ந்து பலன் தரும் வகையில் பயன்பட அமைத்தால் தொழில் உடனே இரட்டிக்கும் என்பது இதுவரை நம் அனுபவத்தில் கண்ட உண்மை.

இந்த 5 அம்சங்களில் தலையாயது அமைப்பு (organisation). ஒரு பொருள் விரைவாக விற்றால் தொழில் பெருகும். அளவு கடந்து முதலிருந்தால் தொழில் அளவுகடந்து பெருகும். தொழிலாளர்களும் ஆபீசர்களும் கம்பெனிக்கு உண்மையாக உழைத்தால் தொழில் பெருகும் என்பது தெரியும். இவற்றுள் பணம் கிடைப்பது சிரமம். டெக்னாலஜி வேண்டுமானால் பணம் வேண்டும். தொழிலாளர்களைக் கம்பெனிக்கு உண்மையாக உழைக்கச் சொல்வது சுலபமன்று. ஆனால் அமைப்பு நம் கையில் இருக்கிறது. அதாவது நம் அறிவால் உயர்த்தக்கூடியது. இதற்கு அறிவு தான் தேவை. பணம் தேவையில்லை. இதுவே தொழிலுக்கு ஜீவநாடி என்பதால் அமைப்பின் தரத்தை அறிவாலோ, அனுபவத்தாலோ உயர்த்தினால் தொழில் பெருகும், இருமடங்காகப் பெருகும் என்ற கருத்தை திரு P.V. சங்கர் ஹிந்துவில் எழுதியிருந்தார். அத்துடன் அமைப்பில் பல இரகஸ்யங்கள் உண்டு. அவை உண்மைக்கும், நேர்மைக்கும் பலன் தரும். அமைப்பைக் கம்பெனியின் உள்ளே மாற்றியமைப்பதால் மார்க்கட் நம்மை நாடிவரும். மற்றொரு ரகசியம் பணத்தைப் பொறுத்தது. பணம் நம்மை நோக்கி வரும் வகையில் அமைப்பை மாற்றி அமைக்கலாம் (Market moves towards you, Money moves towards you) அகவுணர்வு, புறநிகழ்ச்சிகளை நிர்ணயிக்கும் என்ற அன்னை தத்துவப்படி நடப்பது இது.

மார்க்கட் என்ற அம்சத்தில் பல பகுதிகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது customers வாடிக்கைக்காரர்கள். வாடிக்கைக்காரர்கள் வந்து நமக்கு இலாபம் கொடுக்க வேண்டும், என்பது ஒரு நினைவு. வரும் வாடிக்கைக்காரர்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்பது மற்றொரு வகை. முதல் கருத்து நம் இலாபத்தைக் கருதுவது. அடுத்தது தொழிலைச் சேவையாகமாற்றி, வருபவர்களை உண்மையாகத் திருப்திப்படுத்த முயல்வதாகும்.

நம்மூரில் கடை என்றால் ஒரு வீடு பெரிய கட்டிடமாக இருக்கும். பெரிய கடை பெரிய கட்டிடமாக இருக்கும். திண்ணையில் நடத்தும் வியாபாரத்திற்கும் கடை என்று தான் பெயர். மேல் நாடுகளில் கடை என்றால் மிகப் பெரியதாக இருக்கும். 4, 5 மாடிகள் கொண்டதாக இருக்கும். சூப்பர் மார்க்கட் என்பது ஆசிரம விளையாட்டு மைதானம் அளவுக்குப் பெரியதாக இருக்கும். ஒரே சமயத்தில் பல ஆயிரம் பேர் கடையில் இருப்பார்கள். இதுபோல் அவர்கள் வியாபாரம் வளர்ந்ததற்குச் செல்வம் காரணம். அத்துடன் வாடிக்கைக்காரர்களைத் தெய்வமாகக் கருதும் மனப்பான்மையாகும்.

நம்மூர்க் கடைகளில் ஒரு முறை விற்ற பொருளை மீண்டும் திரும்ப எடுத்துக் கொள்ளமுடியாது என்று பில்லில் அச்சடித்திருக்கும். மேல் நாட்டில் பொருளில் எந்தக் குறையிருந்தாலும், அதைத் திருப்பிக் கொடுக்கலாம். நாள் கழித்தும் திருப்பித் தரலாம். பணம் மீண்டும் வந்துவிடும். இதற்கு money back guarantee பணத்தை உத்திரவாதமாகத் திருப்பித் தருகிறோம் என்று பெயர். இந்தப்பழக்கத்தை நூறாண்டுகட்கு முன்பு ஆரம்பித்த கம்பெனி இன்று 80,000 கோடி ரூபாய் செலாவணியிலுள்ளது. 1991-ஆம் ஆண்டு இந்திய சர்க்கார் பட்ஜெட் 70,000 கோடி ரூபாய்.

Customer is always right வாடிக்கைக்காரர்கள் சொல்வது சரி என்ற கொள்கை நாட்டின் தொழில் அபரிமிதமாக வளர உதவியது. நம் நாட்டுச் சூழ்நிலையில் வாடிக்கைக்காரர்களை நாம் எப்படிக் கருதவேண்டும், அவர்களிடம் எப்படிப் பழகவேண்டும் என்பதை (Vital Corporation) காரி ஜேக்கப்ஸ் எழுதிய புத்தகத்திலுள்ள கருத்துகள் மூலம் கீழே விளக்குகின்றேன்.

வாடிக்கைக்காரர்கள்:

  1. கடைக்கு வாடிக்கைக்காரர்கள் தான் முக்கியமான முதல் என்பதை நாம் அறியவேண்டும். பணத்தை முதலாகக்கருதும் நாம் வாடிக்கைக்காரர்களைப் பணத்தைவிடமுக்கியமாகக் கருதியவுடன் அதிகமான வாடிக்கை வருவதைக் காணலாம்.
  2. மனம் வாடிக்கைக்காரர்களின் முக்கியத்தை ஏற்றுக்கொண்ட பின், அதை உணர்ச்சி வழியாக மௌனமாக வெளிப்படுத்த உள்ளூர முயல வேண்டும். ஒரு VIP வந்தால் அவரை மனம் எப்படி வரவேற்குமோ அப்படி வாடிக்கைக்காரரை நினைத்து, அதற்கேற்ப மனத்தால் மௌனமாக வரவேற்பைத் தெரிவிக்கவேண்டும்.
  3. கடைக்கு வெளியே வாடிக்கைக்காரரைக் கண்டவுடன் மனம் நிறைவு பெற்றால் நாம் சரியாக வரவேற்கின்றோம் என்று பொருள்.
  4. நம் மனத்தின் வரவேற்பு சரியாக இருந்தால், அவர்கள் முகம் மலரும், கடையினுள் நுழைந்தவுடன் அவர்கள் சந்தோஷப்படுவதைக் காணலாம்.
  5. நமக்கு வியாபாரம் ஆக வேண்டும் என்பதை விட வந்தவர்கள் திருப்தியாகப் போக வேண்டும் என்ற எண்ணம் மனத்தில், உண்மையாக இருக்கவேண்டும்.
  6. அது உண்மையானால், நம்மை அறியாமல் அவர்களுக்குத் தேவையான பொருள் நமக்குத் தோன்றும். எந்தப் பொருளை அவர்கள் நாடி வருகிறார்களோ அப்பொருள் நமக்கு மனதில் தானே தோன்றினால், அவர்களை நாம் திருப்திபடுத்த முயல்வது உண்மையாகும்.
  7. விலை, சைஸ், டிசைன் ஆகியவற்றை நாம் பொறுக்கி எடுப்பதை அவர்கள் தாமே ஒத்துக் கொண்டால், நம் எண்ணம் சரியானது என்றாகும்.
  8. அதிக அளவு எப்படி ஒருவரை வாங்க வைப்பது என்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு எது தேவையோ அதைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று மனம் விழைய வேண்டும்.
  9. முதலாளி இக்கருத்துகளை உண்மையாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம், கடை சேல்ஸ்மேன் இவற்றை ஆர்வமாகக் கற்றுக் கொள்வதாகும்.
  10. வாடிக்கைக்காரர்களுடன் வாக்குவாதம் என்பதே கூடாது.
  11. விற்பனை விஷயங்களில் நாம் சொல்வதை வாடிக்கைக்காரர்கள் விரும்பி, வாக்குவாதமில்லாமல் ஏற்றுக்கொள்வதே நாம் சரியான முறையைப் பின்பற்றுவதற்கு அடையாளம்.
  12. வாடிக்கைக்காரர்களுடைய விலாசத்தைச் சரியாக எழுதிக்கொள்ள வேண்டும்.
  13. இரண்டாம் முறை வருபவர்களைத் தவறாமல் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
  14. சுமார் 6 மாதம் அல்லது 12 மாதம் கழித்து வாடிக்கைக்காரர்களுக்கு எழுத ஓர் ஏற்பாடு வேண்டும்.
  15. வாங்குபவர்கள் கொடுக்கும் செல்லுபடியாகும் நோட்டு கசங்கியிருப்பதால், அழுக்காக இருப்பதால் மறுக்கக் கூடாது.
  16. வாடிக்கைக்காரர்கள் மறுக்கக்கூடிய நோட்டை அவர்களிடம் கொடுக்கக் கூடாது.
  17. போகும் பொழுது அவர்கள் நம்மைத் திரும்பிப் பார்த்தாலோ, விடை பெற்றுக் கொண்டாலோ நாம் செய்தது சரி என்றாகும்.
  18. சில்லரை கொடுப்பதில் ஒரே ஒரு முறை கூட தவறுவரக் கூடாது.
  19. நாம் விற்ற பொருள்களில் மீண்டும் குறை வந்தால், அது இனி வாராதது போல் நாம் திருத்திக் கொள்ளவேண்டும்.
  20. ஒருவர் வந்து போனால் நமக்குச் சந்தோஷம் ஏற்படவேண்டும். அவர்களும் சந்தோஷப்பட வேண்டும்.

இவற்றைச் செய்தால் அடுத்த நாள் அதிக வியாபாரம் ஆவதுதெரியும்.

II -மூலதனம்

தொழிலுக்கு ஜீவனாக அமைபவை ஐந்து என்றும் வாடிக்கைக்காரர்கள் அதில் ஒன்று எனவும் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டேன். அடுத்ததாக மூலதனம் என்ற தலைப்பை இக்கட்டுரையில் விளக்க முற்படுகிறேன். பொதுவாக உலகில் அனைவரும் தொழிலுக்கு மூலதனம் மட்டுமே ஜீவன் என்று கருதும் நிலை 50 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தது. இன்றும் அதை நம்புபவர்கள் உண்டு. டெக்னாலஜி இல்லாமல் மூலதனம் என்ன செய்யும்? மூலதனமிருந்து என்ன பிரயோஜனம், மார்க்கட் அல்லவா முக்கியம். நிர்வாகத் திறமையுள்ள மானேஜர் மூலதனம் போல் முக்கியம் என்ற கருத்துகள் இன்று இந்தியாவிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

மூலதனத்திற்குரிய முக்கியத்துவம் சிறப்பு வாய்ந்தது. மூலதனம் என்பது பணம். மார்க்கட், டெக்னாலஜி, மானேஜர்கள்ஆகியவற்றையும் மூலதனத்தால் பெற முடியும் என்பதே அதன் விசேஷம். டெக்னாலஜியால், மற்றதைக் கொண்டு வரமுடியாது. ஆனால் பணத்தை எதுவாக வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதே அதன் சிறப்பு. இந்த ஐந்து அம்சங்கள் சேர்ந்து செயல்பட்டதால் பணம் உற்பத்தியாயிற்று. அதனால் பணத்தால் அவற்றுள் எதையும் பெறலாம் என்ற நிலையுண்டு. அதனால் மூலதனத்தின் முக்கியத்துவம் உயர்கிறது. தொழிலுக்கு மூலதனம் அவசியம் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை. நடைமுறையில் மூலதனத்தின் குணத்தை அறியாதவர்கள் அவர்கள் கையிலுள்ள ரொக்கத்தை மட்டுமே மூலதனம் என்று கருதுகிறார்கள். அந்த அளவிலேயே செயல்படுகிறார்கள். தொழிலுக்குத் தேவையான மூலதனத்தில் ஒரு பகுதியே நம்கையிலுள்ள ரொக்கம் என்பதை அனுபவமானவர்கள் அறிவார்கள். அதுவும் ஒரு சிறுபகுதியே. சுமார் 50 வருஷத்திற்குமுன் ஒரு பெரிய வீடு கட்ட 5000 ரூபாய் வேண்டும். அந்த 5000 ரூபாயும் கையில் ரொக்கமாக இருந்தால் தான் வீடு முடியும். இல்லாவிட்டால் குறையாக இருக்கும். அதே போல் 50 ஆண்டுகளுக்கு முன் கையில் 10,000 ரூபாய் இருந்தால், தொழிலை 10,000 ரூபாய் அளவில் செய்யலாம், அதைத் தவிரவேறு வழியில்லை. அது அன்றைய நிலை.

இன்று நிலைமை வேறு. கையில் டெக்னாலஜியுள்ள என்ஜீனியர் சொற்பத் தொகையோடு கம்பெனி ஆரம்பித்து நல்ல முறையில் நடத்துவதைப் பார்க்கிறோம். ஒரு கம்பெனியில் நிர்வாகத்திறமை பெற்று வெளிவந்து அதையே அஸ்திவாரமாகக் கொண்டு தொழில் ஆரம்பித்து இன்று 20 கோடி செலாவணி கம்பெனி நடத்துபவர் ஒருவர். Sugar Directorate சர்க்கரை இயக்குநர் ஆபீஸில் 10 வருஷத்திற்கு முன் ஒரு செய்தி நடமாடியது. அன்று ஒரு சர்க்கரை ஆலை ஆரம்பிக்க 12 கோடி ரூபாய் தேவை. 12 இலட்சம் கையில் உள்ள எவரும் 12 கோடியில் ஆலை ஆரம்பிக்கலாம் என்று அந்த ஆபீசில் ஒரு சொல் வழங்கியது. இவற்றையெல்லாம் சிந்தித்து இன்று பிறர் பணத்தால் நாம் தொழில் நடத்தலாம் என்று நினைப்பது சரியாகாது. இதற்குரிய பொருள் வேறு.

50 ஆண்டுகட்கு முன் ஒருவன் செய்யும் தொழிலை அவன் தன் இலாபத்திற்காக மட்டுமே செய்வதாகச் சமூகம் புரிந்துகொண்டது. அதனால் அவன் இலாபம் பெற அவனே அதற்குரிய மூலதனத்தைச் சேகரம் செய்து கொண்டு வரவேண்டும் என்று கருதியது. இன்று தொழிற்சாலைகளை நடத்துபவர்கள் சேவையும் செய்கிறார்கள் என்று சமூகம் அறிவதால், சமூகம் அவர்களுக்குப் பலவகைகளிலும் உதவுகிறது. 1950க்குப் பின் தமிழ்நாட்டில் ஓர் அலுமினியத் தொழிற்சாலையை ஆரம்பிக்க, சர்க்கார் 30 கோடி மூலதனம் கடன் வழங்க முன் வந்த பொழுதும் ஒருவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டுக்கு அலுமினியம் தேவை. அதற்குரிய மூலதனம், டெக்னாலஜி, ஒரு unit கரண்ட்க்கு 2½ பைசா என்ற வசதிகளை சர்க்கார் அளிக்க முன் வந்தும் ஏற்பார் இல்லை. இதை நீங்கள் சேவையாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று சர்க்கார் ஒரு தொழில் அதிபரை வற்புறுத்தி பெற்றுக் கொள்ளச் சொல்லிற்று.

யார் வீட்டில் சிறு குழந்தைகள் இறந்தாலும் அது நாட்டுக்குரிய நஷ்டம். சிறு பிள்ளைகள் படித்தால் நாட்டிற்கு நல்லது. ஊழியர்களுக்குப் பென்ஷன் தர வேண்டியது சமூகத்தின் கடமை. தொழிலாளர்கள் நாட்டிற்குச் சொத்து. பெண்கள் நம் ஆதரவுக்குரியவர்கள். வாக்காளர்கள் பெருமக்கள் என்பது ஜனநாயக நாட்டின் கருத்து. அதனால் தொழிலை நடத்துபவர் நாட்டிற்குச் சேவை செய்கிறார்கள், அவர்கள் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கின்றார்கள். எனவே சமூகத்தின் ஆதரவு அவர்களுக்குண்டு என்பது இன்றைய கொள்கை. எந்தப் பொருள் (consumer goods) மக்களுக்கு அவசியமோ அதை உற்பத்தி செய்பவரைச் சமூகமும், சர்க்காரும் ஆதரிக்கின்றன. இன்றைய மனப்பான்மையில் எல்லாப் பொருள்களும் முக்கியம்.

சொந்த இலாபத்தை மட்டும் பிரதானமாகக் கருதாமல், நாட்டில்தொழில் செய்யும் சேவையை உணர்ந்தால், அதற்கேற்றவாறு தொழில் அதிபர் செயல்பட்டால் மூலதனம் அவரை நாடிவரும் money moves towards us என்பது நம் கொள்கை. வாடிக்கைக்காரர்களின் சிறப்பை உணர்ந்த முதலாளி அதன்படித் தன் மனப்போக்கை மாற்றிக் கொண்டபொழுது 30 நாளில் 32ஆயிரமாக இருந்த முன்மாத வியாபாரம் அடுத்த மாதத்தில் 54ஆயிரமாகப் பெருகியதைக் கண்டார். இதையே மார்க்கட் நம்மை நாடிவரும் என்ற கொள்கையால் குறிப்பிடுகிறோம்.

மூலதனத்தின் அம்சங்கள், அது நம்மை நாடிவர நாம்செய்யக்கூடியது, அம்முறைகளின் சிறப்பு ஆகியவற்றை விளக்கும் முயற்சியே இக் கட்டுரை.

  1. விரயத்தை விலக்க வேண்டும் பத்து ரூபாய்க்கு வாங்க கூடிய பொருளைப் பதினொரு ரூபாய்க்கு வாங்கினால் அது பெரிய நஷ்டமாகாது. ஆனால், தொழிலில் அப்பொருள் தினமும் 1000 பயன்பட்டால் நஷ்டம் ஒரு ரூபாயில்லை. ஆயிரம் ரூபாய்; வருஷத்தில் 3 லட்சம் ரூபாய் நஷ்டமாகும். அது சரிவாராது. பத்து ரூபாய்க்கு விற்கும் பொருளை எந்த முதலாளியும் பதினோரு ரூபாய்க்கு வாங்கமாட்டார். அத்துடன் மொத்தமாக வாங்குவதால் 8½ ரூபாய்க்கு பேரம் பேசி வாங்குவார். இதில் எவரும் தவறு செய்வதில்லை. ஆனால் எந்தத் தொழிற்சாலையிலும் 10,000 ரூபாய் சரக்கு பல காரணங்களால் பல மாதம் பயன்படாமலிருப்பதுண்டு. அது இருப்பது தெரியாமல் மேலும் ஒரு 10,000 ரூபாய் சரக்கு வாங்குவதுமுண்டு. அதுபோன்ற விரயங்கள் அநேகம். ஒரு ஸ்தாபனத்தில், ஆரம்பித்த 6 மாதத்தில் 18 லட்சம் செலாவணியாகியிருந்தது. அவர்கள் எலக்டிரிக் பில் 5½ லட்சம் கட்டியிருக்கிறார்கள். அங்குள்ள எலக்டிரிக் பொருள்கள் எல்லாம் 24 மணி நேரம் செயல்பட்டாலும் 12 லட்சமே மொத்த பில்லாக இருக்கும். இதை யாரும் கவனிக்கவில்லை. ஒரு வீட்டில் போன் பில் 75,000 ரூபாய் ஆயிற்று. கேட்க, நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. உச்சகட்ட உதாரணங்கள் இவை. நம் ஸ்தாபனத்தில் எலக்ட்ரிக் பில் 15,000 வரவேண்டும். அது 15,500 ரூபாயாக இருந்தால் அதைக் கவனித்து விலக்குவது அவசியம். அதுவே பணத்திற்கு நாம் செலுத்தும் கவனம். நாம் எப்பொருளைக் கவனிக்கின்றோமோ, அப்பொருள் நம்மை நாடி வரும் என்பதுகொள்கை. 30 வருஷமாக அனுபவத்தில் கண்ட உண்மை.
  2. கணக்கு எழுதுவது நாள் தவறாமல் கணக்கு எழுதுவதாலும், பிழையில்லாமல் எழுதுவதாலும் நாம் செய்த செலவுக்கு நம் கவனத்தைச் செலுத்துவதாகும். கணக்கு எழுத பாக்கியிருந்தால், அதை எழுதி முடித்தவுடன் பல திசைகளிலிருந்தும் பணம் வருவதைக் காணலாம். கணக்கைத் தவறாமல் எழுதும் தொழிலில் பணத்தட்டுப்பாடு இல்லை என்பதைக் காணலாம்.நாம் செய்யும் தொழிலில் 10 பாகங்களிருந்தால், எதனால் லாபம் வருகிறது, எங்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று விளக்கமாகப் புரியுமாறு கணக்கை எழுதுவது மேலும் சிறப்பு.
  3. Zazanias ஸஸானியாஸ் என்பவர் தம் வியாபாரத்தை 10 கோடியிலிருந்து 18 கோடிக்கு உயர்த்தினார். திவாலாகப் போனவர் கடை ஒன்றை வாங்கினார். தம் தொழிலில் பயன்படுத்திய முறைகளை இங்கும் கடைப்பிடித்தார். வாடகை, எலக்டிரிக் பில், சம்பளம், சரக்கு விலை, ஸ்பேர் செலவு, பயணச் செலவு போன்ற தொழிலின் செலவுகளைப் பட்டியலாக எழுதி அவை மொத்த வியாபாரத்தில் எத்தனை சதவீதம் என்று கணக்கிடுவது அவர் பழக்கம். 15 ஆண்டு தொழிலில் ஒவ்வொரு செலவும் மொத்தத்தில் எத்தனை சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்று அவர் கணக்கிட்டிருந்தார். அவற்றுள் எலக்டிரிக் பில் 2½% என்பது அவரது புள்ளி. திவாலான கடையில் அது 6% ஆக இருந்தது. அதைப் பார்த்தவுடன் அவருக்கு அங்குக் கோளாறு என்பது புரிந்தது. அத்துடன் அதே கோளாறு மற்ற இடங்களிலுமிருக்கும் என்று நினைத்து அக்கடையை வாங்கி, கோளாற்றை விலக்கினால் இலாபம் என்று கணக்கிட்டார். முதலில் எலக்டிரிக் பில்லை 2½% க்குக் கொண்டு வர பெருமுயற்சி செய்தார். அதில் வெற்றி பெற்றவுடன், மற்ற அம்சங்களையும் தம் திட்டப்படிக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார். ஓரிரு மாதங்களில் கடை இலாபகரமாக மாறிவிட்டது.ஒவ்வொரு செலவுக்கும் உரிய பங்கை நிர்ணயித்தால் பணம் விரயமாகாது. அது நாம் பணத்திற்கு உரிய கவனம் செலுத்துவதாகும்.
  4. சுத்தம் அன்னை பக்தர்களுக்குச் சுத்தத்தின் முக்கியத்துவம் தெரியும். தொழில் செய்யும் பக்தர்கள், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் சுத்தத்தை மேற்கொள்வது வழக்கம். சுத்தம் முடிந்தவுடன் பணம் வருவதைக் காணலாம்.தரையை மட்டும் பெருக்கும் சுத்தம் முதல் நிலை. பொருள்களைத் துடைத்து வைக்கும் சுத்தம் அடுத்த நிலை. பொருள்கள் உள்ள அலமாரியில் சுத்தத்தை ஏற்படுத்துவது அடுத்த நிலை. அது போல் சுத்தத்திற்கு 6 அல்லது 7 நிலைகளைக் குறித்து நம் தொழில் எந்த நிலையிலிருக்கின்றதோ அதிலிருந்து அடுத்த நிலைக்குச் சுத்தத்தை உயர்த்த வேண்டும்.
  5. பழைய பாக்கியைத் திருப்பித் தருவது பழைய பாக்கியைத் தருவது அவசியம். பிறருடைய பணம் நம்மிடம் பாக்கியாக இருக்கும் வரை, நமக்கு வர வேண்டியது வாராது. எவ்வளவு சிறு தொகையானாலும் எவ்வளவு நாள்பட்டதாக இருந்தாலும், பழைய கடனை அறவே அழிக்கவேண்டும்.
  6. சேர வேண்டியதை வசூல் செய்யவேண்டும் பாக்கியைத் தருவது போல், நமக்குச் சேரவேண்டியது பிறரிடம் நாள் கடந்து தங்கியிருந்தால், அதனால் மற்ற தொகைகள் நிலுவையாகும். நிதானமாக, முறையோடு, வாடிக்கைக்காரர்களுக்குச் சலிப்பு ஏற்படாத முறையில் நமக்குரியதை தவறாமல் வசூலிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும். சிறு தொகை என, பாராமுகமாக இருக்கக்கூடாது.
  7. சிப்பந்திகளுக்குச் சம்பளம் சம்பளம் நாள் தவறாமல், தாமதமில்லாமல் கொடுக்கப்படவேண்டும். அதற்குரிய முயற்சியைச் சிரமப்பட்டு எடுத்த நிறுவனம், தங்கள் பணத்தட்டுப்பாடு 90% விலகியதைக் கண்டனர்.
  8. Payables நாம் கொடுக்க வேண்டியவற்றைத் தாமதமின்றிக் கொடுக்கவேண்டும்.பணம் இல்லாமல் தாமதமாவது வேறு. 30 நாள் தவணைக்கு வாங்கிய தொகை 25ஆம் நாள் கிடைத்து விட்டால், 30ஆம் நாளன்று செலுத்துவது வழக்கம், அதற்குப் பதிலாக கிடைத்த அன்றே செலுத்துவது நல்லது.
  9. 9. கடன் வாங்குவது தவறு என்ற கொள்கையுடையவர்களுண்டு. அது தனிப்பட்ட விஷயம். இது தொழிலுக்குப் பொருந்தாது. 6 இலட்ச ரூபாய் செலாவணியுள்ளவர் பாங்கில் 60,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அவரது மூலதனம் 1 இலட்சம். மேலும் கடன் பெற அபிப்பிராயம் உண்டு. ஆனால் வழி புரியவில்லை. பாங்க் பல சமயங்களில் சிறு கடனும் தரமாட்டார்கள். சில சமயங்களில் தாராளமாகவும் தருவார்கள். 6 இலட்சம் செலாவணிக்கு அதில் பாதியான 3 இலட்சம் கடன் எந்தப் பாங்க்கும் கொடுக்கும். இவருக்கு அனுபவமில்லை. அதனால் இதற்கு மேல் கிடைக்காது என்ற நம்பிக்கையில் முயலவேயில்லை. நம் தொழிலில் மற்றவர்கள் பணம் புரட்டும் முறைகள் அனைத்தையும் நாம் அறிவது அவசியம். அதில் நமக்குப் பொருத்தமானவற்றைப் பயன்படுத்தி பலன் பெற முழுமுயற்சி எடுப்பது அவசியம். தெரிந்து கொள்ளாமலிருப்பது தவறு.
  10. செலவைக் குறைப்பது எப்படி? விரயத்தை விலக்குவது ஒரு வகை. அறிவாலும், அனுபவத்தாலும், பிறரைப் பார்த்துத் தெரிந்து கொள்வதாலும், யோசனையாலும், புதுமுறைகளாலும், இன்று அத்தியாவசியம் என நாம் கருதும் செலவுகளில் பலவற்றைக் குறைக்கலாம். அவை அனைத்தையும் குறைப்பது ஒரு முறை. முழுமுயற்சி எடுப்பவர் 10% செலவைக் குறைக்க முடியும். 10% செலவைக் குறைத்தால் இலாபம் 100% உயரும். ஒரு கோடி செலாவணிக் கம்பெனியில் 9 லட்சம் இலாபமானால் 9% இலாபம். ஒரு கோடியில் செலவை 10% குறைத்தால் 90 லட்சமாகும். குறைந்தது10 லட்சம் இலாபமாகும். புதிய இலாபம் 19 இலட்சம். 9 இலட்ச இலாபம் 19 லட்சமாகிறது.Purchase கொள்முதலை முறைப்படுத்துவதால் வருஷத்தில் இரண்டுமுறை புரளும் பணம், மூன்று முறை புரண்டால் அது இலாபம். வருஷத்தில் 2 கோடி ஸ்டோர் சாமான் இருப்புள்ளவர் அத்தொகையை இருமுறைக்குப் பதிலாக மும்முறை பயன்படுத்தினால் பலன் என்ன? இரண்டு கோடி மூலதனம் 4கோடி சரக்கு வாங்கப் பயன்படுகிறது. மூன்று முறையில் 6 கோடி சரக்கு வாங்கப் பயன்படும். ஸ்டோர் சரக்கு வருஷத்தில் scientific monitoring முறையாகப் பயன்படுத்தப்பட்டால் 6 முறை புரண்டு வரும் என்பது சட்டம்.
  11. புதிய இடங்களில் பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் ஆலையில் விழும் குப்பையை வெளியே போட இடமில்லாமல் முனிசிபாலிட்டியுடன் 3 ஆண்டுகள் தகராறு செய்த இடத்தில் இம்முறையைக் கையாள ஒரு யுக்தியைக் கண்டு, குப்பையைப் பயன்படுத்த வழி கண்டு அதைப் பிரபலப்படுத்தியபின், குப்பையால் தொந்தரவில்லை. அது பணமாகி விட்டது. இப்பொழுது குப்பைக்கு டெண்டர் ஏற்பட்டு விட்டது.பெரிய கம்பெனிகள் பணம் சேகரிக்கும் முறைகளைச் சிறுகம்பெனிகள் அறிவதில்லை. இவர்களுக்கும் அது பயன்படும்.
  12. தொழிலையும், விவசாயத்தையும் மேற்கொண்ட கம்பெனி, மானேஜ்மெண்ட் முறைகளை விவசாயத்தில் பயன்படுத்தி இந்தியாவிலேயே தங்கள் துறையில் அதிகபட்சம் இலாபம் பெற்றனர்.நமக்குரிய மானேஜ்மெண்ட் முறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும். பணத்தைத் தவறாக மட்டுமே சம்பாதிக்கலாம் என்பதை விட்டு, நேராகச் சம்பாதித்தால் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று அறியவேண்டும்.

III

உலகை மூன்று சுற்றுச் சுற்றி வந்து பெறும் பலனை, கன்றுபோடும் பசுவை மூன்று சுற்றுச் சுற்றி வந்து பெறலாம் என்பது சாஸ்திரம். மயில்வாகனம் முருகனுக்குக் கொடுக்காத வெற்றியை விநாயகர் பெற்றோரை வலம் வந்து பெற்றார். இவை ஆன்மிக உண்மைகள்.

30 வருஷ சர்வீஸில் பெற்ற பதவியுயர்வை அதே பட்டம் பெற்றவர் முதல் உத்தியோகமாகப் பெறும் வழி நிர்வாகத்தில் உண்டு. 3,000 தொழிலாளிகள், 100 கோடி முதல், சர்க்கார் லைசென்ஸுக்குப் போராட்டம், மந்திரி சிபார்சு, அலைச்சல், டென்ஷன், தினசரி ஆயிரம் தபால், நூறு மெஷின்களை ஓட்டுவது, அந்நியநாட்டு டெக்னாலஜி, இவற்றிற்குள்ள அந்தஸ்து, நிர்வாகம், பொறுப்பு, உழைப்பு அத்தனையும் கொடுத்து 20 கோடி சம்பாதிக்கிறார் ஒரு முதலாளி. அவர் உற்பத்தி முழுவதையும் ஒருவர் வாங்கி, விநியோகம் செய்கிறார். அவருக்கு லேபர் பிரச்சினையில்லை, சர்க்கார் தொடர்பு இல்லை, ஆபீஸ் நிர்வாகமில்லை, கிடங்கில்லை, சரக்கைப் பார்ப்பதில்லை, எந்த பிரச்சினையுமில்லை. Managing Agentஆகச் செயல்படுகிறார். அவர் பார்ப்பனவெல்லாம் கடிதங்கள்தாம். அவர் 2 கோடி இலாபம் பெறுகிறார். முதலாளியின் இலாபம் 20 கோடி முதல் நஷ்டம்20 கோடி வரை நடமாடும். ஆனால் ஏஜெண்டுக்கு 2 கோடி இலாபம் நிரந்தரம். 10 மில்களுக்கு ஏஜெண்டாக இருந்து ஒரு மில்லின் இலாபத்தைப் பெறுகிறார்.

அயராத உழைப்பு, ஆர்வமான வாழ்க்கை, அறிவுடை முயற்சி ஆகியவற்றால் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்கலாம். அதையே பக்தி, நம்பிக்கையுள்ளவர் இவை எவையுமில்லாமல் இருந்த இடத்திலேயே சாதிப்பதை உலகம் ஏதோ ஒரு சமயம் காண்கிறது. இதை அதிர்ஷ்டம் என்கிறோம். உண்மையில் இதுஆன்மிகத் திறன். பக்தி – நம்பிக்கையுள்ள உழைப்பு, ஆர்வம், அறிவின் சாரம் அடங்கியுள்ளதால் இது முடிகிறது.

ஆன்மிகப்பலன் உலகில் ஏதோ ஒருவருக்குக் கிடைக்கும். 100 வருஷத்திற்கு முன் காரில் கவர்னரால் தான் போக முடியும். இன்று யாரும் ஒரு டாக்ஸியில் அதே அனுபவத்தைப் பெறலாம். வாழ்க்கையில் உயர்ந்தவர்க்கு மட்டும் கிடைப்பதை தம்மை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் அன்னை வழங்குகிறார்.

அன்னை வழங்குவதைப் பெறும் முறைகளை விளக்கமாகவும், சுருக்கமாகவும் சொல்லலாம். செய்தொழில் சிறப்பாலும், அனைவரையும் கவரும் ஆர்வத்தாலும், அறிவு செயலில் சிறக்க முனைவதாலும் அன்னையை நம்பால் ஈர்க்க முடியும். இடைவிடாத அன்னை நினைவு நம்மை அவரிடம் ஈர்த்துச் செல்லும்.

தொழிலின் சிறப்பு: Skill, செய்யும் காரியத்திலுள்ள திறன் அளவுகடந்து கலையுணர்வோடுள்ள சிறப்பைப் பெறவேண்டும். கண்ணில் ஒற்றிக் கொள்வது போலிருக்க வேண்டும். Perfection சிறப்பு தேவை. நாம் வேலையில் அதை workmanship என்கிறோம். அது பூரணமாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் பலர் வேலை செய்யுமிடத்தில் ஒருவர் வேலை மற்றவர் வேலைக்குத் தானே ஒத்துழைப்பது போலிருக்கும். பின்னல் கோலாட்டத்தில் தன்னை மறந்து குழந்தைகள் நகருவது, பார்ப்பவருக்கு அழகாக இருப்பது போல் வேலை செய்யுமிடத்தில் ஒருவர் வந்து பார்த்தால், பிரமிப்பாக இருக்கும்.

அனைவரையும் கவரும் ஆர்வம்: எந்த வேலை செய்தாலும் நம்முடன் செயல்பட அனைவரும் ஆர்வமாக விரும்பவேண்டும். நாளுக்கு நாள் அது அதிகமாக வேண்டும். பிறர் மனம் புண்படும் காரியங்களைச் செய்யக் கூடாது. பிறர் அபிப்பிராயத்திற்கு மாறாக நடக்கக் கூடாது. நாம் மற்றவரை அனுசரித்துப் போனால், அவர் நம்மை நாடி வரவேண்டும்.

உடல் உழைப்பின் பெருமையை நாம் அறியும் பொழுது புது skills ஏற்படுகின்றன. வீணை வாசிப்பவன் விரல் தந்தியில் விளையாடுவது போல் ஆயுதம் நம் கையில் சங்கீதம் பாடும், அப்படிச் செய்யப்பட்ட பொருள் உடனே விலைபோகும். அந்தப் பாக்டரியில் ஆயுதம் தொலைவது என்று கேள்விப்பட முடியாது. ஓர் ஆணியை அடிக்கும் பொழுது ஓர் அடி கூடத் தவறாது. மனம் செயலில் ஈடுபட்டுத் திளைக்கும். ஆயுதங்களும், நாம்செய்யும் பொருள்களும், நம் கையில் குழந்தைபோல், மலரெனத் தவழும்.

ஆர்வமாக வேலை செய்தால் அனைவரும் தெம்பாக இருப்பார்கள். களைப்புத் தெரியாது. வேலை முடிந்தபின், வேலை ஆரம்பிக்கும் பொழுது இருக்கும் தெம்பிருக்கும், எங்கிருந்தோ ஒரு சக்தி புறப்பட்டுச் செயல்படும் பொழுது வேலை நமக்குக் கட்டுப்படும். அனைவரும் அடங்குவார்கள். அன்போடு ஒத்துழைப்பார்கள். மறுத்துப் பேசுவது இருக்காது. மறுப்பு மனதில் தோன்றாது. விரும்பி வணங்கி இதமாக இட்ட வேலையைச் செய்வதை இனிமையாகக் கருதுவர். வழக்கத்திற்கதிகமான வணக்கம் தெரியும். வேலை முடிவதற்குள் இருமடங்கு ஆர்டர் வரும்.

அறிவு நிமிஷத்திற்கு நிமிஷம் கூர்மையாவது தெரியும். மனம் உஷாராக முழு விழிப்புடனிருக்கும். இத்தனை நாள் செய்த வேலையில் புதியன புரியும். புதுமுறைகள் தட்டுப்படும். இதுநாள் வரை இல்லாத விளக்கம் மனதில் தோன்றும். புதிய பதில், பழைய கேள்விக்குத் தோன்றும், வேலை முடியும் பொழுது தொழிலை விரிவுபடுத்த, புதிய எண்ணம் தோன்றும். எங்கும் இனிமை பரவியிருப்பதைக் காணலாம்.

ஆன்மாவை நாடி, அங்கு அமர்ந்து வேலை செய்தால், க்ஷணநேரத்தில் உள்ளும், புறமும் அமைதி பரவும். பொறுமை நம்மைத் தேடிவரும். வழக்கமாக வரும் எரிச்சலுக்குத் தலைகாட்டும் திறனிருக்காது. பொதுவாக நம் capacity திறமை அடிப்படையில் வளர்வதைக் காணலாம். வேலை செய்யுமிடம்ஆசிரமம் போலிருக்கும். வாழ்வில் அளவுகடந்து முன்னேறும் வாய்ப்புள்ளது என்பது சூசகமான செயலாகவோ, ஓர்எண்ணமாகவோ, திட்டமாகவோ நம்மை நாடிவரும்.

எப்படி இதைச் சாதிப்பது?

அன்னையை 5 வருஷத்திற்கு முன் ஏற்றுக் கொண்டதற்கும் சென்ற வருஷம் வணங்கியதற்கும், இன்று புரிவதற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதன்றோ? நாளுக்கு நாள் அன்னையை அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்ய உதவும் கருத்துகள் சில:

  • நாம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளுக்கும் நாம் மட்டுமே பொறுப்பு. அவற்றை நம்மால் நிச்சயமாகச் சாதிக்க முடியும்.
  • concentration நாளுக்கு நாள் அதிகமாக வேண்டும். ஜீவனின் மையத்தை நாடி அங்கு நிலைக்கவேண்டும்.
  • வேலையை ஆரம்பிக்கும் முன் அன்னையைத் தவறாது நினைவுகூர வேண்டும்.
  • நன்றியறிதல், பொறுப்பு, அடக்கம், கீழ்ப்படிதல், இதமாகப் பழகுதல், இனிமையாகப் பேசுதல், பேசாமலிருப்பது ஆகியவற்றால் மேற்சொன்ன அனைத்தையும் சாதிக்கலாம்.
  • நடைமுறையில் பெற்றோருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடக்க வேண்டும். அவர்களுக்குச் சேரவேண்டியதை பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். வாடிக்கைக்காரர்கள், தொழிலாளிகள் வளம் பெற மனம் தானே விழைய வேண்டும்.
  • வேலையில் எவருக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை அவரிடம் உடனே தெரிவிக்க வேண்டும்.
  • அன்னையின் முறைகளை வேலையில் தவறாது பின்பற்ற வேண்டும்.

Essence – சாரம்

இதுவரை மேலே சொன்னவற்றின் சாரத்தை சுருக்கமாகவும் சொல்லலாம். அது விளக்கத்தின் சாரமாக அமையும்.

மனம் வேலையிலும், ஜீவனிலும் ஒருங்கே நிலைத்து, பொறுமையுடன், திடமாக, முறையாக (organised), தீர்மானமாக, மகிழ்ந்த விரிவால் மலர்ந்து, நல்லெண்ணத்தால் நிறைந்து, நல்லதை மட்டுமே கருதி, திறந்த வெளியாக, சந்தோஷம் நிறைந்து, உள்ளூர நிம்மதியால் சுதந்திரமடைந்து, உவகை பொங்கி, விழித்துணர்ந்து, கவனமாக, நம்பிக்கையின் அடிப்படையில், இடைவிடாது அன்னையை நினைத்துச் செயல்படவேண்டும்.

சாரத்திற்கு விளக்கம்

பணமிருந்தால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம் என்று மனிதன் கண்டு கொண்டதால், பிணமாகும் வரை, தீவிர ஆர்வத்துடன், வெட்கத்தை விட்டு உயிரின் முழு வேகத்தோடு மனிதன் பணத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், எல்லா வழிகளிலும் தேடுகிறான்.

தேவைக்காகத் தேடுபவனைவிட வசதிக்காகப் பணத்தைத் தேடுபவனுக்குத் தீவிரம் அதிகம். குடும்பத்துடன் இணைந்துள்ளவன் குடும்பத்திற்காகப் பணத்தைத் தேடினால் அவனுக்குள்ள ஆர்வம் அதனினும் அதிகம். அந்தஸ்த்திற்காகப் பணத்தை நாடுபவனின் ஆர்வம் ஒரு வெறி போலிருக்கும். பணத்திற்கு ஒரு மூலம் உண்டு. அதை அறிந்து இதேபோல் தேடினால் பலன் அதிகம்.

பணத்தின் மூலம் உழைப்பு

உழைப்பையும் உயர்த்த முடியும். முறைப்படுத்தினால் (organised) உழைப்பு அதிகப் பலன் தரும். அறிவு சேர்ந்தால் முறையான உழைப்பு உயர்ந்த பலனைத் தரும். பண்புபணத்தோடு சேருவதில்லை. பண்பு ஆன்மாவில் உற்பத்தியாவது. உடலின் உழைப்பு, ஆர்வத்தின் முறையாலும், புத்தியின் அறிவாலும் உயர்ந்ததை விட ஆன்மாவின் பண்பால் அதிகமாக உயர்ந்து பெரும்பலன் தரும்.