- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நமது கடமை – குடியரசு தினம்

[1]இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது.  அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவ.26ல் ஏற்று கொண்டது.

இந்திய அரசியல் அமைப்பு 1950 ஜனவரி 26ல் நடை முறைக்குவந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26 குடியரசு தினமாக கடை பிடிக்கப்படுகிறது.

சிறப்பு:
இந்திய அரசியலமைப்பு ஒரு நீண்ட எழுதப்பட்ட ஆவணம். முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்புக்களை பெற்றது.

வழிகாட்டுதல்:மத்திய, மாநில அரசுகள், மைய ஆட்சி பகுதிகள்,அதன் அலுவலகங்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட், கோர்ட்கள், இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தும் அரசியல் அமைப்பின் வழிகாட்டுதல்படி இயங்குகின்றன.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் 1789ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின்போது முக்கிய குரல்களாகும். இவற்றிற்கு நமது அரசியல் அமைப்பு முகவுரை முக்கியத்துவம் தந்துள்ளது.

அரசின் கடமை :

  • குடிமக்கள் அனைவருக்கும்போதுமான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
  • மக்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டும்.
  • பொது சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.
  • குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி தர வேண்டும்.
  • ஒரு சிலரின் கைகளிலேயே நாட்டின் செல்வ வளம் குவியா வண்ணம் தடுக்க வேண்டும்.
  • ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டும்.
  • நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
  • பன்னாட்டு அமைதியையும், பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும்.

குடிமக்களின் கடமை

  • அரசியல் அமைப்பிற்கு கீழ்படிந்து தேசிய கொடியையும், தேசியகீதத்தையும் மதிக்க வேண்டும்.
  • நமது சுதந்திர போராட்டத்தின் உன்னத கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
  • இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டினைபாதுகாக்க வேண்டும்.
  • தேவைப்படும் போது தேசியபணிபுரிய வேண்டும்.
  • அனைத்து இந்திய மக்களிடையேயும், ஒன்றிணைந்த பொதுசகோதரத்துவ உணர்வினைமேம்படுத்த வேண்டும்.
  • நமது பெருமை மிகு பண்பாட்டு பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
  • நமது இயற்கை சூழலை பாதுகாத்து காப்பாற்ற வேண்டும்.
  • நமது பொது சொத்துக்களை பாதுகாத்து வன்முறையை கைவிட வேண்டும்.

இந்திய குடிமக்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்.அரசிடம் கடமைகளை முழுமையாக பெற்று, நமது கடமைகளை செய்ய குடியரசு தினத்தில் உறுதி ஏற்போமே.

இந்திய குடியரசின் கதை : குடியரசு என்பதற்கு, மறைந்தஅமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்லிங்கன் தான் மிகச்சரியாக இலக்கணம் வகுத்தார். அவரது புகழ்பெற்ற உரையின் இறுதியில் “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு‘ என்று அவர் ரத்தினச் சுருக்கமாக விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்துக்கு பொருள் தரும்படியாக இந்தியா விளங்கி வருகிறது.

பல்வேறு ஆப்ரிக்க நாடுகள், மியான்மர் உள்ளிட்ட ராணுவ ஆதிக்கம் உள்ள நாடுகள் இந்த பெருமையை கொண்டாட முடியாது. சீனாவில் ஒரு கட்சி ஆட்சி நடந்து வருவதால், அந்நாட்டை முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில், உலகின் மிகப்பெரிய நாடான இந்தியாவில் குடியரசு தினம் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமை தரத்தக்கது.

லிங்கன் கூறிய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான் இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாகக் கருதப்படும் என நமது தேசியத் தலைவர்கள் பலர் கருதினர். இருந்த போதிலும், சில தலைவர்களுக்கு பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுபட வேண்டும் என்பதிலும், சுதந்திர நாடாக இந்தியா செயல்படும் என்பதிலும் நம்பிக்கை குறைவாகவே கொண்டிருந்தனர்.

அதனால் தான் 1928ல் டில்லியில் கூடிய சர்வகட்சி மாநாடு ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு டொமினியன் அந்தஸ்து பெறுவதைத்தான் நோக்கமாகக் கொண்டிருந்தது. டொமினியன் என்றால் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுய ஆட்சி என்று பொருள்.அதாவது நாட்டுப்பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவற்றை பிரிட்டிஷாரே நிர்வகிப்பர். உள்நாட்டு விவகாரங்களில் முழு சுய ஆட்சி இந்தியர்களுக்கு அளிக்கப்படும்.காங்கிரசில் தீவிரவாத கொள்கைகளைக் கொண்டிருந்த, இளைஞர்களான ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் “பூரண சுயராஜ்யமே’ நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

டில்லி சர்வகட்சி மாநாடுதயாரித்த அரசியலமைப்பு “நேரு அறிக்கை’ எனப்பட்டது. சர்வகட்சியினரும் தேர்ந்தெடுத்தமோதிலால் நேருவின் தலைமையிலான குழுதான் அதனைத்தயாரித்தது. அந்த ஆண்டில் கோல்கட்டாவில் மோதிலால் நேருதலைமையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் நேரு அறிக்கை விவாதத்திற்கு வந்தது. நேரு, போஸ் ஆகியோரின் எதிர்ப்பால் பூரண சுதந்திரமே நமது புதிய அரசியல் அமைப்பின் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியில் கோல்கட்டா மாநாட்டில் ஒரு சமரசத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து அளிக்க விரும்பினால் அது 1929 டிசம்பர் 31க்குள் கொடுக்கப்பட வேண்டும். அதன்பின் டொமினியன் அந்தஸ்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பூரண சுதந்திரமே காங்கிரசின் லட்சியமாக இருக்கும். இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மறுஆண்டில் டொமினியன் அந்தஸ்திற்கு ஒரு ஆண்டு கெடு முடியும் டிசம்பர் 31ல்லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. அன்று நள்ளிரவில் தீர்மானம் இயற்றப்பட்ட “பூரண சுயராஜ்யம்’ காங்கிரசின் லட்சியமானது.அந்த காங்கிரஸ் மாநாட்டில் மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜனவரி 26ம் நாள் “பூரண சுதந்திர’ நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்து தான் அளித்தது. பிரிட்டிஷ் மன்னரால் நியமனம் செய்யப்பட்டகவர்னர் ஜெனரல் தான் இந்தியாவின் தலைவராக இருந்தார்.சுதந்திரம் கிடைத்த பின், லாகூர் மாநாட்டு தீர்மானத்தின் படி, 1950ல் இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த ஜனவரி 26ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.இத்தினம் பூரண சுயராஜ்ய நாளாக – அதாவது குடியரசு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நன்றி: ஞானமுத்து