- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்

இப்பாரினில் வந்து பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளை நீடித்துக் கொள்ளவே விரும்புகின்றான். உலகத்தில் அதிகமான காலங்கள் வாழவே ஆசைப்படுகின்றான். அவ்வடிப்படையில் வாழும் நாம் ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கவனமாகவும் மிகவும் ஆர்வத்துடனும் வாசித்து இங்கு கூறப்பட்டுள்ள விடயங்களை அணு அணுவாக தானும் பின்பற்றி நடப்பதுடன், மற்றவர்களுக்கும் இதுபற்றி எடுத்துக்கூறியும் ஆலோசனை வழங்கியும் உதவி செய்வோம்.

தற்பொழுது மனித உயிர்களை பலி கொள்ளும் அனேகமான காரணிகளில் முக்கிய 10 காரணிகளை என இனங்கண்டுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளதுடன், இதிலிருந்து மக்களை மீட்கும் வழி முறைகளையும் அனைத்து நாடுகளுக்கும் எடுத்தியம்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இடத்திற்கு இடம் சற்று வேறுபடினும் எல்லா இடங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும் மரண அவலங்கள் பொதுவானது என புலப்படுவது விசேடமானது.

இவ்வாய்வின் மூலம் உலக சுகாதார ஸ்த்தாபனம் கூறும் செய்தி என்னவெனில், இவ்வகையான அவசரமான அவதானிப்பிற்குரிய விளைவை முறியடிக்க ஏற்ற பொருத்தமான நடைமுறைகளை செயற்படுதுவதன் மூலம் ஒருவரின் ஆயுளை மேலும் 5 – 10 வருடங்கள் நீடிக்கச் செய்வது கடினமன்று. நீடிக்கச் செய்ய முடியும் என வலியுறுத்திக் கூறுகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனம் தனது ஆய்விற்கு உட்படுத்திய தடைசெய்து கொள்ளக்கூடிய முக்கிய 25 (விடயங்களில்) விளைவுகளில் மிகக் கொடுமையானது. பாரதூரமானதும் என (சுட்டிக்காட்டியுள்ளவை) புலப்படுகின்றவை கீழ்வரும் இந்த 10 விடையங்களேயாகும்.

அவைகளாவன :-

1. குழந்தை மற்றும் தாயின் போஷனைக் குறைபாடு

2. பாதுகாப்பற்ற பாலுறவு

3. உயர் இரத்த அழுத்தம்

4. புகைத்தல்

5. மது பாவனை

6. அசுத்த நீரும் கழிவகற்றலும்

7. கொலஸ்ட்ரோல் கூடுதல்

8. சமையல் அடுப்பில் விறகு போன்றவற்றால் ஏற்படும் புகை.

9. இரும்புச்சத்து பற்றாக்குறை

10. பருமனால் ஏற்படும் உடல்நிலை

வருடத்தில் உலகெங்கும் நிகழும் 56 மில்லியன் மரணங்களில் நூற்றுக்கு 40 பேருக்கு ஒழுங்கான ஆரோக்கியமான ஆயுள் கிடைக்கப்பெறாமல் இருப்பதற்கு மேற்கூறிய 1/3 காரணிகளேயாகும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே அவைகள் பற்றிய சில முக்கியமான விபரங்களை சுருக்கமாக இங்கு கவனிப்போம்.

1. குழந்தை மற்றும் தாயின் போஷனைக் குறைபாடு :-

குழந்தை மற்றும் தாயின் போஷனைப் பற்றாக்குறையின் காரணமாக (2000 ஆம் ஆண்டில் மட்டும் நிகழ்ந்த மரண எண்ணிக்கை 3 மில்லியனாகும் என அறிக்கைகள் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றது) போஷனை குறைபாட்டுக்குக் காரணமாயிருப்பது போதுமான அளவு உணவு கிடையாமையும் அடிக்கடி நோய்கள் ஏற்படுவதனால் கலோரிப் பெறுமானம் புரதம் (புரோட்டீன்), உயிர் சத்துக்கள் (விட்டமின்கள்) மற்றும் தாதுப் பொருட்கள் போன்றவைகளின் பற்றாக்குறைகளுக்கும் உட்படுவதே இதற்குக் காரணமாகும் எனவும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வறுமை நிலைமை இதற்கு முக்கிய நேரடிக் காரணமாக அமைவதாகவும் கூறப்படுகின்றது.

பாஷாக்கின்மையை வெற்றிகொள்வதென்றால் தவிர்க்கக் கூடிய சிகிச்சைகளான செயல் முறைகள் பல விடயங்களில் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது. இச்செயற்பாடுகளில்

* தாய்ப்பாலூட்டல்

* தேவையான மேலதிக உணவை தேவையான வேளைகளில் கொடுத்தல்

* போதிய உணவு போஷணை கிடைக்கக்கூடியவாறு கண்காணித்துக் கொள்ளல்.

* விட்டமின் எ, துத்தநாகம், இரும்புச் சத்து அடங்கியதாகவோ, அல்லது அதிக சக்தியுடைய உணவுகளையோ வழங்கல்

* சுற்றாடல் சுத்தம் பேணல்

* மலசல கூடம் பாவித்தலின் பழக்கத்தை ஊக்குவித்தல்

* மலசலகூடம் பாவிக்காவிடில் ஏற்படும் (அதிக பாதிப்பை ஏற்படுத்தும்) வயிற்றோட்டம், புழுநோய், நிவ்மோனியா, அடங்கலான உணவுக் குழாய் மற்றும் சுவாசத் தொகுதியில் ஏற்படும் நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தலுக்குரிய வசதிகள் செய்தலும் முக்கியமாகும்.

2. பாதுகாப்பற்ற பாலுறவு

எயிட்ஸ் நோயினால் 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 2.09 மில்லியன் ஆகும். எயிட்ஸ் நோய்குறி ‘எச்ஐவி’ வைரஸ் பாதிப்பிற்கு பிரதான காரணியாக விளங்குவது பாதுகாப்பற்ற பாலுறவில் .னி@னிரி>!ழிu.

எச்ஐவி வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான அநேகமானோர் தாம் பாதிப்படைந்துள்ளதை நிலைமையை அறியாமல் இருப்பதனால் நோயைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ உள்ள (தேவைக்கு) உத்வேகத்திற்கு தடையாக இருக்கின்றார்கள். பலருடன் பாலுறவு கொள்ளுதல், பாதுகாப்பற்ற பாலுறவு போன்ற அதிக ஆபத்துடனான பாலுறவு செயற்பாடுகளை அடியோடு குறைப்பதற்கான முயற்சிகளை செயற்படுத்துவது அவசியமானதாகும். இதனால் கற்பித்தல் மூலம் அறிவு புகட்டுவதுடன், பாலியல் நோய்கள் காரணமாக உடனடி சிகிச்சை வழங்கலும், ஒன்று சேர்ந்து முக்கியமாக நடைபெற வேண்டியது மிக சிறந்த வழிமுறையாகும்.

3. உயர் இரத்த அழுத்தமும், அதிக கொலஸ்ட்ரோல் மட்டமும் :-

உயர் இரத்த அழுத்தத்தினால் வருடத்திற்கு 7 மில்லியன் மரணங்கள் நிகழ்கின்றன. அதேவேளை அதனால் பாரிசவாத நிலமை 1% மும் இதய நோய்கள் 49% மும் ஏற்பட காரணியாக உள்ளது. மேலும் கொலஸ்ட்ரோல் அதிகரிப்பால் 4.4 மில்லியன் மரணங்கள் சம்பவிப்பதுடன், பாரிசவாத நிலைமை 18% மும், இதய நோய்கள் 56% மானோருக்கும் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தமும் அதிக கொலஸ்ட்ரோல் சேர்ந்து பாரிய விபரீதத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக செயற்படுகிறது.

மேலும் உயர் இரத்த அழுத்தம் எனக் குறிப்பிடுவது இரத்த ஓட்டம் நாடி இரத்தக் குழாய்களின் சுவரில் ஏற்படுத்தும் அழுத்தமாகும். இவ்வழுத்தம் உச்சமடையும் போது மூளை, இதயம், சிறுநீரகம் போலவே வேறு அவயவங்களுக்கும் குருதியைக் கொண்டு செல்லும் குழாய்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரோல் என குறிப்பிடப்படும் குதியில் காணப்படும் கொழுப்பு வகை, இருதயம், மூளை என்பனவற்றின் குருதிக் குழாய்களில் கொழுப்பாக படியப்பெற்று உருவாகும் ‘அதிரொஸ் குளோரோஸிஸ்’ எனும் நிலைக்கு காரணமாகின்றது.

இவ் அபாய நிலையை வெற்றிகொள்வதெனின், அதிக உப்பு சேர்ந்த உணவு, சமைத்து வைக்கப்பட்ட கொழும்பு கூடிய உணவு (மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, பட்டர் சீஸ், ஆடையுடன் கூடிய பால், முட்டை என்பன), எண்ணை கூடிய உணவு என்பனவற்றை தவிர்க்க வேண்டும். மரக்கறி, மற்றும் பழ வகைகளை அதிகமாக உண்ணல் வேண்டும். புகைத்தலை கைவிடுதல், உடல் உழைப்பு அல்லது தேகப்பயிற்சி என்பவற்றை தமது வாழ்க்கையில் கடைபிடிக்க பழகிக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

4. புகைத்தலும், 5. மது பாவனையும்

புகைத்தலினால் 4.9 மில்லியன் மரணங்கள் உலக ரீதியில் வருடாந்தம் நிகழ்வதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோய்கள், வாய், மூச்சுக் குழாய், தொண்டைப்புற்று நோய், கல்லீரல் நோய்கள், பாரிசவாதம், மற்றும் நரம்பு நோய்கள், வாகன விபத்து, கொலை, கொள்ளை போன்ற செயல்களுக்கு மதுபாவனை அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

தீங்கு விளைவிக்கும் இவ்விரண்டு செயல்களையும் மக்களிடைய அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமாயின் உலகில் கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் இதனை உற்பத்தி செய்வதையும் விற்பனை செய்வதையும் விளம்பரம் செய்வதையும் தடைசெய்தல் வேண்டும்.

மேலும் சிறு வயது தொடக்கம் முறையாக கல்விப் போதனையின் மூலம் பங்களிப்புச் செய்து சிறுவர்களைப் புகைத்தல், மதுபானம் போன்றவற்றை நாடுவதைத் தடைசெய்தல் வேண்டும். தயாரிக்கப்படும் இப்பொருளுக்கு அதிக வரி அறவிடுதல் இதனை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

6 அசுத்த நீரும், 7. கழிவகற்றலும்

பாதுகாப்பான நீரும், சுகாதாரம் வசதியுடன் கழிவகற்றலும், சரியான முறையில் கிடைக்கப் பெறாததனால் வருடாந்தம் உலகில் நிகழும் மரணங்கள் 1.7 மில்லியன் ஆகும். இதில் அனேகமாக நிகழ்வது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயாகும். வயிற்றோட்டம், உடல் நீர் வற்றுதல், புழுநோய்கள், கடும் காய்ச்சல், செங்கமாரி போன்ற பலவகை நோய்கள் இக்காரணிகளால் ஏற்படும் நோய்களில் பிரதானமானவைகளாகும். இவற்றை இல்லாதொழிக்க வேறு வழிவகைகள் இல்லாததினால் உலகமெங்கும் வாழும் மக்களுக்கு குடிப்பதற்கு உகந்த சிறந்த நீர் வசதிகளைப் பெற்றுக்கொடுத்தல், மற்றும் பொருத்தமான முறையில் கழிவகற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மேலதிக சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மிகவும் அவசியமாகும். மேலும் நீரை பல்வேறு முறைகள் மூலம் சுத்திரிகத்தல் சிறந்த செயற்பாடாகும்.

8. சமையல் அடுப்பில் விறகு போன்றவற்றால் ஏற்படும் புகை :

சமையல் அடுப்பில் விறகு போன்றவற்றால் ஏற்படும் புகை, வீதிகளில் எரிபொருள் மூலம் ஏற்படும் வாகனங்களினதும், தொழிற்சாலைகளினதும் செயற்பாட்டினால் ஏற்படும் புகை இவைகளினால் உலக சனத்தொகையில் பாரிய அளவிற்கு காற்று மாசடைகின்றது.

சுவாசத் தொகுதியின் கீழ்ப் பகுதியில் ஏற்படும் சகல பாதிப்புக்களினாலும் 36 வீதத்திற்கும், மற்றும் தொடரான சுவாசப்பை நோய்களில் 22 வீதத்திற்கும் காரணியாக இருப்பது இவ்வகையான காற்று மாசடைவேயாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தமது வீட்டைச் சூழ வளி மாசடைவதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதாயின், நல்ல சுகாதார நிலைமையில் உருவாக்கப்பட்ட வீடு, சுத்தமான காற்றோடடம், ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்ட அடுப்பு, மற்றும் இரசாயன பாதிப்பற்ற எரிபொருள் பாவனையை மேம்படுத்தல் வேண்டும்.

9. இரும்புச் சத்து (IRON) பற்றாக்குறை

இருப்புச்சத்து குறைபாடு உலகில் காணப்படும் போஷாக்குக் குறைபாடுகளில் மிகவும் பிரதானமான குறைபாடாகும். தூய்மை மற்றும் பிரசவ ஆரோக்கியத்திற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் பாதகமான விளைவை ஏற்படுத்தக் கூடியது. இரும்புச் சத்துப் பற்றாக்குறையாகும். உலகில் சம்பவிக்கும் மரணங்களில் 1.5% அதாவது 8 இலட்சத்திற்கு காரணியாகவுள்ள இரும்புச் சசத்து குறைபாட்டை போக்குவதெனில் மேலதிக இரும்புச் சத்தை வழங்குதல், மற்றும் ஏற்ற உணவுகளால் இரும்புச்சத்து வலுவூட்டலின் தேவை அவசியம் என்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இரும்புச் சத்து குறைபாடு மரணத்திற்கு மட்டுமல்ல சுறுசுறுப்பான புத்திசாதுரிய வளர்ச்சிக்கும் பல வழிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதனால் இதனை வெற்றிகொள்ள எல்லா நாடுகளும் தேவையான செயற்பாடுகளை செயற்படுத்துவதில் முன்னிற்க வேண்டியுள்ளதையும் காணலாம்.

10. பருமன் காரணமாக ஏற்படும் உடல் நிறையைக் குறைத்தல்

இன்றைய உலகில் மரணத்திற்கு முக்கிய காரணியாகவுள்ள நோய்களுள் நீரிழிவு 58% மும், இதய நோய்களுள் 21% மும், சில புற்று நோய் நிலைமைகளில் 8.42 வீதத்திற்கும், அடிப்படைக் காரணியாக இருப்பது உடல் பருமன் ஆகும். இதில் பாரிசவாத நிலைமைக்கு இது அதிக பங்களிக்கின்றது.

பொருத்தமான உணவுப் போசணை, அதிக கொழும்பு, காபோஹைதரேற்று அடங்காத உணவு உட்கொள்ளல் உடல் உழைப்பு மூலம் வயதிற்கு ஏற்ற உயரம், நிறை இரண்டையும் பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும். இதன் முலம் இந்த அபாயங்களைத் தவிர்ந்து கொள்ளலாம். எமக்கு அகால (திடீர் மரணத்தை ஏற்படுத்தும் இந்த முக்கிய காரணிகள் தற்பொழுது இனம் காணப்பட்டுள்ளன.

எனவே இந்த அபாயங்கள் விளைவிக்கக்கூடிய விடயங்களிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளக்கூடிய சூழலை எம்மால் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

எனவே மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தையும் நன்றாக விளங்கி, தேவையாயின் மேலதிக விபரங்களை தமது குடும்ப வைத்தியரையும் அணுகி தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் நடந்து கொள்வதுடன் ஏனைய நண்பர்கள், சகோதரர்களுக்கும் இவ்விடயங்களை எடுத்துக் கூறி சிறந்த சுகதேகிகளாக அனைவரும் வாழ வழி வகுப்போமாக.

நன்றி: தமிழர்களின் சிந்தனை களம்