- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது. எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள்.

நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளிப்படும். உணவுக்குத் தகுந்தப்படி மலமும் இருக்கும், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிய வேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தங்கி மலம் வெளியானால் அதை மலச்சிக்கல் என்கிறோம்.

வெளியாக வேண்டிய மலம் அதிக நேரம் மலக்குடலில் தங்கிவிட்டால் உடலில் சேரக்கூடாதவையும், நோய்களை உண்டு பண்ணக்கூடிய, பலவித விஷ தன்மையுள்ள விஷங்கள் இரத்தத்தில் சேர்ந்துவிடுகின்றன. மேலும் மலம் பெருங்குடலில் தங்கி இறுகி கட்டியாகி விட்டால் உடலில் பலவித உடல் உபாதைகளும், நோய்களும் உண்டாக காரணமாகி விடுகிறது.

மருத்துவம்:

முக்கியமாக உணவை மாற்றுவதாலும், பழக்க வழக்கங்களை மாற்றுவதாலும் தான் இந்த நோயில் இருந்து விடுபடமுடியும். மலம் கழியும் நேரம் குறிப்பிட்டக் காலத்தில் இருக்க வேண்டும். மலத்தை அடக்கும் பழக்கம் உடலுக்கு கெடுதியை விளைவிக்கும்.

எக்காரணத்தைக் கொண்டும் மலத்தை அடக்கக்கூடாது. ஒரு சிலர் பணிக் காரணமாகவும், தொலைதூர பயணம் காரணமாகவும், முக்கிய அலுவல் காரணமாகவும் மலத்தை அடக்குவார்கள். இதுபோல் செய்வது பல நோய்கள் வர அடித்தளம் இடுவது போல் ஆகிவிடும்.

சரியானப்படி மலம் கழிய வேண்டும் என்றால் மலம் அதிகமாக இறுகாமல் இருக்க வேண்டும். மரக்கறி, கீரை, பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளலாம். மலமும் அதிகம் இறுகாது. தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும். உடலுழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக வேர்வை வெளியேறும். அப்போது உடலுக்கு தண்ணீர் தேவை அதிகரிக்கும்.

அப்போது தேவையான அளவிற்கு தண்ணீர் பருக வேண்டும். வில்வ பழம், பேரீச்சம்பழம் போன்றவைகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால், மலத்தை இறுகச் செய்யாமல், இளகச் செய்து மலம் சுலபமாக வெளியே வரும்படி செய்யும். மலச்சிக்கல் தீர ஆரம்பத்தில் கொஞ்ச நாளைக்கு விளக்கெண்ணெய் (ஆமணக் கெண்ணய்) சிறிது உட்கொண்டு வந்தாலும், கடுக்காய்த்தூள் சாப்பிட்டு வந்தாலும் மலச்சிக்கல் நாளடைவில் முழுமையாக குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்சினை தீர சித்த மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளது. அவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்வது நல்லது. மலச்சிக்கல் இல்லாமல் இருந்தால் உடலில் ஏற்படும் பல நோய்களில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல் நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்:

மலச்சிக்கல் உண்டாக பல காரணங்கள் உண்டு அனேகமாக உணவுக் கோளாறுகளால் தான் மலச்சிக்கல் உண்டாகிறது. சுலபமாக செரிக்கப்பட்டு மலம் அதிகம் உண்டாக்காத உணவு, அளவுக்கு மிஞ்சி அதிகமாக மலத்தை உண்டாக்கக்கூடிய உணவு, உயிர் சத்துக்கள் குறைவான உணவு, தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, நரம்பு மண்டலத்தை சேர்ந்த நோய்கள், இதுபோன்ற பல காரணங்களால் மலச்சிக்கல் உண்டாகலாம்.

பெருங்குடலில் மலம் சேர்ந்து குறிப்பிட்ட காலத்தில் நம் கவனத்தையும் உதவியையும் கொண்டு வெளிவருகிறது. சேர்ந்திருக்கும் மலத்தை வெளியே தள்ளுவதற்கு நாம் முயல்வதோடு பெருங்குடலின் தசைகளும் உள்ளிருந்து குடல் குழாயை சுருக்கி மலம் வெளியே வரும்படி செய்ய வேண்டும். அதுபோல் செய்யும் போது குடல் தசைக்கும் பலவீனம் ஏற்பட்டால் மலத்தை வெளியே தள்ளும் சக்தி குறைகிறது.

மலச்சிக்கல் பல நோய்களை உண்டு பண்ணக்கூடியது. ஆனால் மலச்சிக்கலால் உண்டாகக் கூடிய சிலநோய்கள் வேறுசில காரணங்களாலும் உண்டாகிறது. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பிரச்சினைகள் மலச்சிக்கலால் உண்டாகிறது. வயிற்று சங்கடங்கள், தலைவலி, நாக்கு தடிப்பு, சுறுசுறுப்பின்மை, வயிறு உப்புசம், வயிற்றுவலி போன்றவை மலச்சிக்கலால் உண்டாகிறது.

மேலும் மலச்சிக்கல் உணடாவதால் அபானவாயுவானது உடலில் சேர்ந்து வாயு கோளாறு ஏற்படுகிறது. இதுபோல் உள்ளவர்களுக்கு உடலில் மிகுதியாவதலால் மூட்டுவலி, கை கால் விரைப்பு, உடல் கணத்தல் போன்றவை உண்டாகும்.

நன்றி:  மருத்துவர். மு. சங்கர் – தமிழ்சிகரம்.காம்