- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் கல்வி!

images [1]முன்பெல்லாம் காலை, மாலை வேளைகளில் இளம் வயதினர், அலுவலகம் முடித்து வீடு திரும்புபவர்கள், ஒரு நோட்டு மற்றும் கையடக்க சிறிய புத்தகத்துடனும், கையில் வெள்ளைத் தாளை சுருட்டி பட்டம் வாங்கி வீறு நடை போட்டு வரும் மாணவனைப் போல செல்லும் காட்சி கண்கொள்ள காட்சியாக இருக்கும். அவர்கள் எங்குதான் செல்கிறார்கள்? வீணாக பொழுதைக் கழிக்க அல்ல. தட்டச்சு, சுருக்கெழுத்து பயில பயிற்சி நிலையத்திற்கு பீடு நடை போட்டு சென்றார்கள்.

தட்டச்சு, சுருக்கெழுத்து நிலையங்களுக்கு அருகில், மிதிவண்டி கடையில் வாடகைக்கு மிதிவண்டிகளை வைத்திருப்பது போல வரிசையாக மாணவர்கள் தங்கள் மிதிவண்டிகளை நிறுத்தி விட்டு செல்வர். அன்று அவ்வாறு நேரத்தை வீணடிக்காமல் பயின்றவர்கள்தான் இன்று மாநில, மத்திய அரசுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் திறமைப் படைத்த அதிகாரிகளாகி ஓய்வு பெற்றும், இப்போதும் பெரிய பெரிய அதிகாரிகளாகவும் பணியிலும் உள்ளனர்.

1970-90-களில் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் மாணவர்களிடையே ஒரு புரட்சியை ஏற்படுத்தி பல ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு அரசு அலுவலகங்களிலும், புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஓளி ஏற்றி வைத்தன.

தட்டச்சு, சுருக்கெழுத்து பயிலுபவர்கள் பயிற்சி முடிந்தவுடன், வீணாக அரட்டை அடிக்காமல், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு படிப்பு விஷயங்களையும், போட்டித் தேர்வுகளைப் பற்றி பேசி விட்டுதான் விடை பெற்று செல்வார்கள். அதனால், அந்த மாணவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்களாக விளங்கி வங்கிகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பெரிய அதிகாரிகளாக விளங்கி இருக்கிறார்கள். அவர்களின் அந்த வெற்றி படிக்கட்டுகளுக்கு முதல் படிக்கட்டாக தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி விளங்கியது. இப்போது இந்தக் காட்சிகளைக் காண முடிவதில்லை. சில சினிமா திரையரங்குகள் போல இப்போது தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டு விட்டன.

தட்டச்சு, சுருக்கெழுத்து பயிலுவது என்பது ஆண், பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு நல்ல தொழிற்கல்வியாகும். ஒளிமயமான வாழ்விற்கு அடித்தளம் அமைப்பதாக தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி விளங்கியது என்றால் அது மிகையாகாது. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு, சுருக்கெழுத்து முதுநிலை பயின்றவர்கள் ஒரு பட்டதாரிக்கு இணையாக அன்று கருதப்பட்டார்கள். நான்கிலும் முதுநிலையில் தேர்ச்சி பெறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அக்கால தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சியாளர்கள் தம் மாணவர்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து மட்டும் கற்றுத் தராமல் போட்டித் தேர்வுகள் எப்போது வரும், அதை எவ்வாறு கைகொண்டு வெற்றிக் கனியைப் பறிப்பது போன்றவைகளையும், ஆங்கில, தமிழ் இலக்கணங்களையும் சொல்லித் தருவார்கள். அதனால், தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றவர்கள் கடிதங்கள் எந்த முறையில் இருக்க வேண்டும், அதன் மரபு என்ன என்பதை எல்லாம் அறிந்தவர்களாக இருந்தனர். ஆனால், இப்பொதெல்லாம், தட்டச்சு, சுருக்கெழுத்துப் பயிலுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கணினியின் தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், மாணவர்களின் ஆர்வமின்மை தான் தலையாய காரணமாகும்.

இப்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இயங்கும் பயிற்சி நிலையங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்துடன், கணினியை எவ்வாறு கையாள்வது என்பனவற்றையும் சொல்லித் தருகிறார்கள். தட்டச்சு சுருக்கெழுத்து பயின்ற மாணவர்கள் வித்தியாசமாக அதிக அறிவு கொண்டவர்களாக விளங்குவார்கள். அவர்கள் எப்போதும் உயர்கல்வி பயின்ற பெரிய அதிகாரிகளுடனும் பழகுவதால், அந்த அதிகாரிகளுடைய நிர்வாகத் திறமையும், அறிவுக் கூர்மையும் தட்டச்சு, சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கு கிடைப்   பதோடு, அதிகாரிகளும் அந்தக் கலையை பயிலாத மற்றவர்களும், தட்டச்சு சுருக்கெழுத்து பயின்றவர்களையே எல்லாவற்றுக்கும் நம்ப வேண்டி இருக்கும்.

1990-வாக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபச்சார விழாவின்போது, அன்று ஓய்வு பெற்ற பிரபல நீதிபதி இவ்வாறு கூறினார். நான் என் அறையிலிருந்து காலையில் கோர்ட்டுக்கு செல்லும் போதும், மாலையில் கோர்ட்டை முடித்து விட்டு என் அறைக்குத் திரும்பும் போதும், இந்தச் சுத்த நகல் பிரிவு அறை வழியாகச் செல்வேன். அப்போது நண்பர்கள் தட்டச்சு செய்யும் ஒலி சல, சல என்று மழையைப் போல கேட்கும். அது என் காதுகளுக்கு சங்கீத ரீங்காரமாக ஒலிக்கும். அவர்களின் கை தட்டச்சுச் பொறி விசை பலகையின் மீது அங்குமிங்கும் சென்று வருவது, அவர்களின் விரல்கள் நர்த்தனம் ஆடுவதைப் போல இருக்கும்.

எவ்வளவு பேரின் தலையெழுத்தை இவர்கள் தட்டச்சு செய்கிறார்கள் என்று நினைத்தபடியே, அந்த அறைக்கு முன் ஒரு நிமிடம் நின்று, அந்த ஒலியைக் கேட்டு விட்டுத்தான் செல்வேன். இனி அந்த ரீங்கார ஒலியே நான் கேட்க முடியாதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றார். அந்த நீதிபதி கூறியது எவ்வளவு உண்மை. அப்போதெல்லாம் படி எடுக்க வேண்டுமானால். தட்டச்சர்கள் கார்பன் தாளை வைத்துதான் படி எடுப்பார்கள். ஒரு தவறு நேர்ந்தாலும், மீண்டும் தட்டச்சர் அந்த தாளில் தட்டச்சு செய்தவைகளை மீண்டும் கடினப்பட்டு தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது இந்த கடினமாக பணிகள் எல்லாம் கிடையாது. கணினி வந்தவுடன் தட்டச்சு விடை பெற்றுச் சென்று விட்டது.

அதிக மதிப்பெண்கள் பெற்றும் தொழிற் கல்லூரிகளில் சேர்ந்து பயில பணம் இல்லையே என வருந்துபவர்களுக்கு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில் சிவப்பு கம்பள வரவேற்புடன் வேலை கொடுக்கும் ஒரு தொழிலாக தட்டச்சு, சுருக்கெழுத்து விளங்குகிறது. இக்கலையைக் கற்றுக் கொள்ள வயது ஒரு தடையாகவும் விளங்குவதில்லை. தட்டச்சு, சுருக்கெழுத்து பயின்றவர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகும் அது மீண்டும் வேலைவாய்ப்பை நல்கும்.