- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மலச்சிக்கல் மாற்றும் முறை

conspitation [1]மேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம்.  அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.

மலச்சிக்கலை Constipation  என்று ஆங்கிலத்தில் கூறுவர். சேர்த்துக்கட்டு அல்லது ஒரு சேரக்கட்டு என்னும் பொருள்படுகின்ற Constipareateum  என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து தான் Constipation என்ற சொல் உருவாகியது. முழுதும் வெளியேற்றப்படாத, கடினமான, கெட்டிப்பட்ட மலம் தான் இதன் உணர்குறி. பெரும்பான்மையானவர்கள் ஒரு நாளுக்கு ஒரு முறை மலங்கழித்தால் போதுமானது என்று கருதுகிறார்கள். சிலர் இரண்டு முறை கழிவறைக்குச் சென்றால் நல்லது என்று  எண்ணுகின்றனர். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு. மேலை நாடுகளில் வாரத்திற்கு மூன்று முறை மலங்கழித்தாலும் அதை நார்மல் என்று குறிப்பிடுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் குளிர் நாடுகளில் வாழ்வதாலும், அவர்களது உணவுப் பழக்கங்கள் அவ்வாறு அமைந்துள்ளதாலும் என்று கூறப்படுகிறது.

conspitation2 [2]நம் நாடு போன்ற வெப்ப நாடுகளில் வாழ்கின்றவர்களுக்கு வியர்வை அதிகமாக உண்டாவதால் அவர்கள் குடிக்கின்ற நீர்மங்கள் வியர்வையாக வெளியேறி விடுகின்றன. எஞ்சியுள்ள நீர்மம் பெருங்குடலார் உறிஞ்சப்பட்டு விடுகின்ற போது மலம் கெட்டிப்பட்டுவிடுகிறது. கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை உண்பதாலும், உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள் போன்ற உணவுகள், நார்ப் பொருட்கள் இல்லாமல் போவதாலும், தவறான உணவுப் பழக்கங்களாலும், கால ஒழுங்கின்றி உண்பதாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது.

விட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைவினாலும் பெருங்குடல் செவ்வி குறைந்து மலத்தை உந்தித் தள்ள இயலாது போவதும் ஒரு காரணமாகலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மலச்சிக்கலை அலட்சியப்படுத்துவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. தொடர்ந்து அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் போது மலம் மேலும் கெட்டிப்பட்டுப் போகிறது. மலம் கழிக்கப் பெரும் பிரயாசை எடுத்துக் கொள்ள வேண்டி வருகிறது. முக்கி, முயன்று மலத்தை வெளியேற்றி நேர்வதால் மலக்குடல் பிதுக்கம் (Prolapse Rectum)  ஆசனவாய் வெடிப்பு (Anal Fissure), பவுத்திரம் எனப்படும் புரையோடிய ஆசனவாய்ப்புண் (Fistula), மூலம் (Piles)  மற்றும் குடல் பிதுக்கம் போன்ற பல தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குறிப்பாக இதய நோய் உள்ளவர்களை மலச்சிக்கல் பெரிதும் பாதிக்கக் கூடும். இது தவிர வயிற்றப் பொருமல், தலைவலி, வாய்க் கசப்பு போன்றவையும் ஏற்படலாம். பின் இதற்குத் தீர்வு தான் என்ன?

இயற்கை உணவே ஏற்ற தீர்வு

மலச்சிக்கலினால் அவதிப்படுபவர்கள் தங்கள் நடைமுறை வாழ்விலும், உணவுப் பழக்கங்களிலும் சில முக்கியமான மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். தினசரி 3 வேளை உணவில் ஒரு வேளைக்குப் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே உண்பதென்று பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்லுலோஸ் நிறைந்த பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வாழைப்பழம் போன்ற பொட்டாஷியம் நிறைந்த பழங்களையும், விட்டமின் ‘பி’ சத்து மிகுந்த முளைகட்டிய தானியங்களையும் உணவின் ஒரு பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பருப்பு, கடலை போன்றவற்றைக் குறைத்து அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களை அதிகமாக உண்ணுவது நல்லது.

இயன்ற வரை காபி, டீ, கோலா போன்ற பானங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இறைச்சி உண்பவர்கள் அதை நிறுத்துவது நல்லது. நீர் மோர், இளநீர், பழச்சாறுகள், நீராகாராம் போன்றவற்றைப் பெருமளவில் பருக வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்கலாம். குறைந்தது 8 முதல் 10 டம்ளர்கள் தண்ணீராவது தினமும் குடிக்க வேண்டும். காலையில் எழுந்ததும் கட்டாயம் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு மாற்றாக எந்த நீர்மமும் செயல்படாது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

இவை எதிலும் நிவர்த்தியில்லாவிடில் இதோ வேறொரு வழி. சைனா கிராஸ் (Agar Agar)  எனப்படும் கடற்பாசி, பொடி வடிவத்தில் எசென்ஸ் கடைகளில் கிடைக்கும். இதைத் தண்ணீரில் போட்டால் தண்ணீரை உறிஞ்சிக் கொண்டு உப்பிப் பருக்க வல்லது. இதை அளவான தண்ணீரில் சேர்த்து அடுப்பில் வேக வைத்தால் அல்வா போல வந்து விடும். இரவு படுக்கைக்குச் செல்லுமுன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு விட்டுப் படுத்தால் காலையில் மலம் எளிதாகக் கழியும். இது இயற்கை முறையில் மலச்சிக்கல் தீர்க்கும் வழியாகும்.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட லிக்விட் பாரபினும், சென்னா மாத்திரைகளும், மில்க் ஆப் மக்னீஷியமும் சாப்பிடுகிறார்கள். இது நிரந்தரமான தீர்வு அல்ல என்பதுடன் இம் மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது பல பக்க விளைவுகள் ஏற்படுகின்ற வாய்ப்புண்டு. எனவே இயற்கையான முறையில் நிரந்தரமாக மலச்சிக்கலை நீக்குவதற்கான ஒரே வழி இயற்கை உணவுகளுக்குத் திரும்புவதேயாகும்.