- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

திமிங்கலங்களின் மர்ம மரணம்?

whales1 [1]தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு, குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதியில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 60 திமிங்கலங்கள் இறந்துவிட்டன.உயிருக்குப் போராடிய பல திமிங்கலங்களை மீனவர்களும், அதிகாரிகளும் இணைந்து கயிற்றில் கட்டி, படகு மூலம் இழுத்துச் சென்று கடலில் ஆழமான பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். மர்மான முறையில் கூட்டமாக வந்து இறந்த திமிங்கலங்களை பார்க்க போனவர்கள் பதற்றமும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர்களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந்து செல்லும். இவற்றால் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரைகூட மூச்சுவிடாமல் இருக்க முடியும்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கடற்கரை பகுதியில் கடந்த திங்களன்று மாலை 30 திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்கின. இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை இதுவரை மீனவர்களோ அங்குள்ள மக்களோ காணாத விஷயம் என்பதால் முதலில் அதை அதிசயமாக பார்த்தார்கள், மேலும் மேலும் பல திமிங்கலங்கள் கரையில் ஒதுங்கி துடிதுடித்து சாவதை பார்த்ததும் பதறிப்போய் உயிருக்கு ஊசாலாடிக்கொண்டிருந்த திமிங்கலங்களை கயிறு கட்டி மீண்டும் கடலுக்குள் கொண்டு சென்றுவிட்டனர்.

whales3 [2]ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் கரையைவிட்டு நகர மறுத்தும், கடலுக்குள் விட்டவேகத்தில் கரையை அடைந்தும், அசைய மறுத்தும் பல திமிங்கலங்கள் உயிரைவிட்டன.

சரி கரையில் இருந்து காப்பாற்றி கடலுக்குள் மீண்டும் விடப்பட்ட திமிங்கலங்களாவது உயிருடன் சென்றதா? என்றால் அதுவும் இல்லை அடுத்தடுத்த கடற்கரையில் ஒதுங்கி தங்களை மாய்த்துக்கொண்டன.

இப்படி மணப்பாடு முதல் கல்லா மொழி வரை 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.பின் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து இறந்தன. 17 ஆண் திமிங்கலங்கள், 20 பெண் திமிங்கலங்கள், 8 குட்டிகள் என மொத்தம் 45 திமிங்கலங்கள் இறந்துவிட்டன. மற்ற திமிங்கலங்கள் கடலுக்குள் திரும்ப விடப்பட்டன.

இறந்தவற்றில் பெரிய திமிங்கலம் 1 டன் வரையும், குட்டிகள் 150 முதல் 200 கிலோ வரையும் இருந்தன. சுமார் 2.6 மீட்டர் முதல் 4.6 மீட்டர் வரை நீளம் கொண்டவையாக காணப்பட்டன.இவை டால்பினின் மற்றொரு வகையான தால்பில்ட் வயலட் என்ற திமிங்கல வகை மீன்களாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

whales [3]இதுபற்றி தகவல் அறிந்ததும் மீன்வளத் துறையினர், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனத்துறை அதிகாரிகள், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், தூத்துக் குடி சுகந்தி தேவ தாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் இங்கு முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த திமிங்கலங்களை பிரேதப் பரி சோதனை செய்து கடற்கரையில் புதைத்துவிட்டனர் துர்நாற்றம் அதிகம் வீசியதால் சில திமிங்கலங்களை எரித்துவிட்டனர்.

திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இது சம்பந்தமாக தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் கோ.சுகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் அருகே திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் அ.சீனிவாசன் தலைமையில் சென்று, நேரில் ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் 200 முதல் ஆயிரம் கிலோ எடை வரை இருந்தன. அந்த திமிங்கலங்களுக்கு, ‘குளோபிசெப்பாலா மேக்ரோரிங்கஸ்‘ என்பது விஞ்ஞானப் பெயர் ஆகும்.

இந்த வகை திமிங்கலங்கள் சுமார் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் 36 உயிருடன் காணப்பட்டன. அவற்றை மீனவ மக்கள் உதவியுடன் கடலுக்குள் பாதுகாப்பாக நீந்திச் செல்வதற்கு வசதியாக இழுத்துச் சென்றுவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதே போன்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாதம், அதிக அளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாக ஆராய்ச்சி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மீண்டும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து ஆராய ஆய்வுக்குழுவினர் கடல்நீரின் வெப்பநிலை, உப்புத்தன்மை, பிராண வாயு போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

திமிங்கலங்கள் கூட்டமாக கரை ஒதுங்கி மடிவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. கடலின் அடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள், பூமி காந்த அலைகளின் வேறுபாடு, தட்பவெப்பநிலை மாற்றங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் சமிக்ஞைகள் ஆகியவற்றாலும், நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவதாலும் திமிங்கலங்கள் பாதிக்கப்படுகின்றன. அது போன்ற சூழ்நிலைகளில் ஆழம் இல்லாத கடலோர பகுதிக்கு வந்து சேர்கின்றன.தற்போது ஏற்பட்ட நிகழ்வுக்கு காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், கடல்நீர் பெருக்கு காலத்தில் இரையைத்தேடி கடற்கரை பகுதிக்கு வந்த இந்த திமிங்கலங்கள் தரை தட்டி, பாதிப்புக்கு உள்ளாகி கரை ஒதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பொதுவாக இந்த திமிலங்கள் ஆழமான கடலில் சுத்தமான தண்ணீரில் குடும்பம் குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் சென்சிடிவானதாக கருதப்படும் இந்த திமிங்கலங்கள் நமது கடற்கரை பகுதிக்கு வந்த முதல் வருகையே சோகமாகிப்போனதுதான் வருத்தம்.

கடலில் நேரடியாக கலக்கும் ராசாயண கழிவுகளால் இத்தகைய பேரழிவு ஏற்பட்டதா? கடலினுள் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாறுபாடா? இந்த திமிலங்களின் குணாதிசயமா? என்பது போன்ற கேள்விக்கு விரைவில் கிடைக்கவேண்டும். கூடங்குளம் அணு உலை கழிவுகள், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகியவற்றால் திமிங்கலங்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.