- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்

[1]தகவல் தொடர்பு துறையில் ‘இன்டர்நெட” எனப்படும் (இணையம் சார்ந்த) தொழில்நுட்பம் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கடிதங்கள், பேக்ஸ், தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டது போல் தற்போது இணைய தளங்கள் மூலம் தகவல்கள் பரிமாற்றம், மின் அஞ்சல்கள் அனுப்புதல், பெறுதல் போன்றவை அதிகரித்து வருகிறது.

ஒருவர் இன்டர்நெட் வசதிகளை அதற்கான மையங்களில் பெறலாம். அல்லது அலுவலகம், வீடுகளில் அதற்கான வசதிகளை செய்து கொள்ளலாம். இன்டர்நெட் இணைப்பை பெற டெலிபோன் இணைப்பு அவசியமாகும். தற்போது டெலிபோன் இணைப்பு இல்லாமல் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மின் கம்பம் மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

மின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள் பெறுவது தொடர்பான அறிவியல் தகவல்கள் இந்த வார அறிவியல் அதிசயம் பகுதியில் இடம் பெறுகிறது.

அறிவியல் தொழில்நுட்பம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.

முதலில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் பொழுது அதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அதை செயல்படுத்தும் முனைப்பில் தான் தீவிரம் காட்டப்படுகிறது. நாளடைவில் சிக்கல்கள், தடைகள் நீக்கப்பட்டு அதை மேம்படுத்துவதில் அதிக ஈடுபாடு காட்டப்படும்.

அந்த வகையில் மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சியை இன்டர்நெட் பெற்றுள்ளது. வளரும் நாடுகளில் மூலை முடுக்குகளில் கூட இன்டர்நெட் வசதி கிடைக்கும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

டெலிபோன் இணைப்பு மூலம் மட்டுமே இன்டர்நெட் வசதியை பெற முடியும் என்ற நிலையை மாற்றி மின்சார கம்பி வழியாகவும் இன்டர்நெட் வசதியை அளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்சார கம்பி மூலம் தகவல் தொடர்பு ஏற்படுத்தும் ஆய்வு 1950-ம் ஆண்டில் மிக தீவிரமாக இருந்தது. ‘பிராட்பேண்ட்’  என்று அழைக்கப்படும் முறை மூலம் மின் கம்பிகளை பயன்படுத்தி தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்க தீவிர ஆய்வுகள் நடைபெற்றது.

[2]இந்த நிலையில் ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் மின்சார வடிகால் (outlet) களை இணையதள துறை (port)களாக மாற்றும் முறைகளுக்கு வித்திட்டவர்கள். இதன் அடிப்படையில் மின்சார கம்பிகள் மூலம் சந்தாதாரர்களுக்கு இணையதள சேவைகளை கொடுக்க முடியும். இந்த முறைக்கு டி.எஸ்.எல். (D.S.L. – Digital subscriber line) என்று பெயர்.  ஒரே கம்பியில் மின்சாரம் மற்றும் இணையதள சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பலன் பெறமுடியும்.

மேலும் மின்சாரம் இல்லாத பகுதியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லா இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால், தொலைபேசி வசதி இல்லாத பல கிராமங்கள் உள்ளன. அப்படிபட்ட இடங்களுக்கு மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் சேவையை எளிதில் அளிக்கலாம்.

மின்சார கம்பி மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கும் வகையில் ‘சாதனம்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை பல்வேறு கம்ப்யூட்டர் நிறுவனங்களும் மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தயாரிக்கின்றன.

நமது வீட்டுக்கு மின்சார இணைப்பு தரும் மின் கம்பத்தில் இந்த சாதனத்தை பொருத்தி விட்டால் போதும் வீட்டுக்கு மின்சார இணைப்பு வருவதுபோல இன்டர்நெட் இணைப்பும் கிடைத்துவிடும்.

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் ‘ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ” என்ற புதிய சாதனத்தை தயாரித்துள்ளது. இதை மின் கம்பி மோடத்துடன் இணைத்து விட்டால் கம்பியில்லா தொடர்பு வசதியை எந்த ஒரு மின் சாக்கெட்டிலும் பொருத்திக் கொள்ளலாம்.

இந்த வசதிகளை அடிப்படையாகக் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் சோதனை முறையில் மின் கம்பி மூலம் தகவல் தொடர்புகளை ஏற்படுத்தும் திட்டத்தை தொடங்கியுள்ளன. கலிபோர்னியாவில் இருந்து சினெர்ஜி, எடிசன் போன்ற மின் சக்தி நிறுவனங்கள் இதற்கான ஆய்வுத்திட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

மேலும் பல விதமான முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கப்போகும் இந்த திட்டத்தில் பிரபல நிறுவனங்களும் இணைந்துள்ளன.

மின் கம்பி மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்குவதிலும் பல தொழில்நுட்ப சிக்கல்கள், இடையூறுகள் ஏற்படத்தான் செய்தன. தகவல்களை பெறுவதில் ஏற்பட்ட ‘இரைச்சல்’ இதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் தெளிவான முறையில் தகவல்களை பெற முடிகிறது.

இந்த தொழில்நுட்பம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக ‘ஹாம்’ ரேடியோ ஆபரேட்டர்கள் புகார் கூறினார்கள். மேலும் விமான நிலைய தகவல் தொடர்புகளில் பயன்பாட்டுக்கும் இந்த தொழில்நுட்பம் குறுக்கீடுகள் ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குறைபாடுகள் இல்லாத வகையில் இணைப்புகளைத் தரும் கருவிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

எதிர்காலத்தில் மின் கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்பு வசதி கிடைக்கும் போது நமது நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் கூட இன்டர்நெட் என்பது சர்வசாதாரணமாகிவிடும். மேலும் இன்டர்நெட் வசதியைத் தேடி வெளியில் எங்கும் செல்ல வேண்டியதில்லை. குறைந்த செலவில் நமது வீட்டிலேயே அந்த வசதியை பெறமுடியும்.

இந்த [3] விஞ்ஞான முன்னேற்றத்தின் மூலம் உலகமே ஒவ்வொரு வீட்டிற் குள்ளும் சுழன்று கொண்டிருக்கும் வாய்ப்பு சாதாரணமாகிவிடும். குறிப்பாக விவசாயிகளின் வீட்டில்கூட.

இனிமேல் மின்சார கம்பிகள் மின் விளக்குகளை ஒளிர வைக்க மட்டுமல்ல உங்கள் அறிவையும் ஒளிர வைக்க வருகிறது.

தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால்,துபாய்.

நன்மைகள் பல

பவர் லைன் கம்யூனிகேசன் எனப்படும் மின் கம்பி மூலமும் தகவல் தொடர்பு வசதியின் மூலமும் பல நன்மைகளை நாம் பெற முடியும். அவற்றில் சில…

1920-ம் ஆண்டில்…

1920-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்று மின்சார கம்பியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியது. தனி தொலைபேசி இணைப்பு எதுவும் இன்றி மின் கடத்திகள் உதவியுடன் இந்த பரிமாற்றம் நடைபெற்றது. இந்த பரிமாற்றம் குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பு மிகுந்ததாக இருந்தது.

இந்தியாவில் 1950-ம் ஆண்டு இந்த முறை பயன்படுத்தப்பட்டது. 30 முதல் 50 கிலோ ஹெர்ட்ஸ் அளவு அலைவரிசை கொண்ட ஒலி அலைகளை மின் கம்பி மூலம் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.