- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்

முதல் மக்கள் இயக்கம்

காந்திஜியின் வருகைக்குப் பின்னர்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வெகுஜன இயக்கமாக – மக்கள் இயக்கமாக மாறியது. இதற்கு முன்னோடியாக 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பெரய்ஸி இயக்கம்(Farizis Movement) என்ற மக்கள் இயக்கததைக் கூட்டியவர் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த ஹாஜி ஷரியத்துல்லா (Haji.Shariathullah) ஆவார்.

வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களில் 1820-களில் கரம்ஷா (Karam Shah) வும் அவர் மகன் திப்பு (Thipu)வும்
நடத்திய ஆன்மிக – அரசியல் இயக்கம்தான் இந்த பெரய்ஸி இயக்கத்துக்கு முன்னோடி. ஜமீன்தார்களின் கொடுமைக்கு ஆளாகும் விவசாயிகளின் குடி உரிமைகளுக்காகப போராடிய திப்பு, 1825 -இல் செராபூர் பகுதியைக் கைப்பற்றி ஆட்சிஅமைத்தார். ஆங்கில எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டி கோரா மலைப் பகுதிவரை தன் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தினார். 1830 – களிலும் 1840 – களிலும் இப்பகுதிகள் ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்த – பிரச்சனைக்குரிய பகுதிகளாகத் திகழ்ந்தன.* இவ்வியக்கத்தின் தாக்கம்தான் கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லாவைப் போராடத்தூண்டியது.

பிரிட்டீஷாருக்கு வரிவசூல் செய்து கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஜமீன் அமைப்பில் , ஆளுவோரின் பிரதிநிதிகளான ஜமீன்தார்களின் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலகட்டம், கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களின் அடக்குமுறைகளுக்கு ஆளான விவசாயிகளும் விவசாயக்கூலிகளும் தங்கள் முதலீடுகளையும் உழைப்பையும் வரி என்ற பெயரில் பறி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

உரிமை இழந்து வந்த இம்மக்களை ஒன்று திரட்டி, பரிதாபூரை மையப்படுத்தி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவர் மகன் தத்தோமியானும் நடத்திய மக்கள் இயக்கம்தான் பெரய்ஸி இயக்கம். இவர்களின் ஜமீன் எதிர்ப்பு நாளடைவில் ஜமீன் எஜமானர்களான பிரிட்டீஷாருக்கு எதிரான கிளர்ச்சியாக வெடித்தது. 1839 முதல் 1857 வரை 18 ஆண்டுகள் இவ்வியக்கம் ஆங்கிலேயருக்குப் பல சிக்கல்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது.** கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தத்தோமியான், புரட்சியைத் தூண்டியவர் என குற்றம் சுமத்தப்பட்டு 1860 – இல் தூக்கிலிடப்பட்டார்.

சாதாரண விவசாயக் கூலிகளை ஒன்று திரட்டி பிரிட்டீஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரய்ஸி இயக்கம்தான் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் மக்கள் இயக்கம் என்பதை புதிய வரலாறு பதிவு செய்யட்டும்.

(* B.L. Grover,S.Grover, A New Look at Modern Indian History, P.248. **lbid.,P.248)

முதல் சுதந்திரப் பிரகடனம்

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கில அரசுக்கு எதிராக முதல் சுதந்திரப் பிரகடனம் 2.7.1943 – இல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸால் செய்யப்பட்டது. ஜப்பானியரின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) – என்ற தற்காலிக சுதந்திர அரசை அறிவித்தார். அவ்வரசுக்கு ஆசாத் ஹிந்த் பவுச் (Azad Hind Fauj) – என்ற இந்திய தேசிய ராணுவத்தையும் தனி ரிசர்வ் பேங்க் ஒன்றையும் ஏற்படுத்தினார்.* அவரால் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய சுதந்திரக் கொடியை முதன்முதலாக அந்தமானில் 30.12.1943-இல் ஏற்றி ஆங்கிலேயரை அச்சம் கொள்ள வைத்தார்.

நேதாஜியின் இந்த இமாலய முயற்சிக்கு முன்னோடியாக, இந்திய மண்ணிலேயே ஆங்கிலேயருக்கெதிரான தனி
சுதந்திர அரசுகளைப் பிரகடனப் படுத்தியவர்கள் இஸ்லாமியர்களாவர். (* lbid.,P.665)

இந்திய வஹாபி இயக்கத்தின் தலைவர் சையது அஹமது ராய்பரலி அவர்கள் உத்திரப் பிரதேசத்தில் அச்சாதனையை நிகழ்த்தினார். சமய – சமுதாய சீர்திருத்த இயக்கமான வஹாபி இயக்கம் பின்னர் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட இயக்கமாக மாறியது. ஹாஜ் சரியத்துல்லா, தத்தோ மியான் ஆகியோரது வீழ்ச்சிக்குப் பின்னர் பெரய்ஸி இயக்கத்தைச் சார்ந்த தொண்டர்கள் இந்த வஹாபி இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.* *(lbid. P.248..)

பாட்னாவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்ட செய்யது அஹமது ராய்பரலி, இந்திய தேசத்தைத் தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது ‘இஸ்லாமியர்களின் உலகம்’ என்ற சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தினார். இச்சுதந்திர அரசுக்கென மேற்குப் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் தன் ராணுவத்தளம் அமைக்ப்பட்டது. இச்சுதந்திர அரசின் நோக்கம், ‘இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த விடுதலைக்காக ஜிஹாத் (புனிதப்பேர்) புரிவதாகும்’.

செய்யது அஹமது ராய்பரலியின் இச்சுதந்திர அரசம் அதன் முன்னணித் தலைவர்களும் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளால் சந்தித்த கொடுமைகள் ஏராளம். பாட்னாவில் விலாயத் அலி, ஹிமாயத் அலி ஆகியோர் தலைமையில் ஆங்கிலேயருக்கெதிரான புரட்சிகள் தொடர்ந்தன.

கிளர்ச்சியில் ஈடுபட்ட மௌல்வி. முஹம்மது ஜஃபிரை ஆங்கில அரசு கைது செய்து, தேசத்துரோக தண்டனை விதித்து அந்தமானுக்கு நாடு கடத்தியது. அவர் அந்தமானில் பல வருடங்கள் தனிமைச் சிறையில் வாடினார். 1870 – இல் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான அமீர்கானும் அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்டார். அவரை அந்தமானுக்கு நாடுகடத்தும் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி நார்மனை அப்துல்லா என்ற முஜாஹித் இளைஞன் சுட்டுக்கொன்றான். இதுபோன்ற பல வீரவரலாறுகள் இச்சுதந்திர அரசின் நடவடிக்கையில் உண்டு.

இதுபோன்றே 1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசுக்கென கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தாங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.

இவ்வாறு இந்த மண்ணில் சுதந்திரத்திற்காய் சிந்தப்பட்ட முதல் ரத்தம் – முதல் போராட்ட உத்வேகம் – முதல் மக்கள் இயக்கம் – முதல் சுதந்திரப் பிரகடனம் என பல முதல்களுக்குச் சொந்தக்காரர்களாக, அம்முதல்களுக்கு மட்டுமே சொந்தம் உடையவர்களாக இஸ்லாமிய பரம்பரை உள்ளது.

2. மண்ணிற்காக மார்க்க அறிஞர்கள்

கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.-மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி.

ஒரு மனிதன் ஒரு பட்டாளம்

மீரட் ராணுவ முகாமுக்கு அருகில் வசித்து வந்த ஒரு பக்கிரியை, சர்க்கார் அவ்விடத்தை விட்டுச்சென்று விடும்படி உத்தரவிட்டது. சர்க்காரின் உத்தரவு கிடைத்ததும் அப்பக்கிரி ஒன்றும் அற்pயாத ஒரு சாதுவைப் போல யாதொரு பதிலும் கூறாமல் தன் யானை மீதேறி பக்கத்திலுள்ள கிராமத்துக்குச் சென்று சிப்பாய்களின் வீடுகளில் சொந்தமாக வசித்துக் கொண்டு, தமது அலுவல்களைக் கவனிக்க முற்பட்டார். அவர் தான் அதிதீவிர தேசபக்தரான மௌல்வி அஹமதுஷா என்பவர். அவரது புனிதமான பெயரானது ஹிந்துஸ்தானத்துக்கே ஒரு ஜோதியைக் கொடுத்திருக்கிறது. – என்று வீரசாவர்க்கரால் புகழப்பட்ட ஒப்பற்ற விடுதலைப் போராட்ட தியாகிதான் மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.*

சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில் வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை செய்தவர். லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ”ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம் தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது” – என்றார். ஆங்கில அரசு வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. (* வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)

கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில் அடைக்கப்பட்டார். 1857 – இல் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சிறந்த ராணுவ யுத்த நிபுணரான அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார். சுதந்திர யுத்தத்திற்கான வலைகளை வெகு திறமையுடன் வீசி வந்தார். அந்த வலைகள் லக்னோவிலும் ஆக்ராவிலும் உள்ள மூலை முடக்குகள் எல்லாம் பரவிக்கிடந்தது. தன் தனித்துவங்களின் காரணமாக மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.

ஆங்கில அதிகாரிகளின் கண்ணெதிரிலேயே ஒரு மகத்தான இயக்கத்தை ரகசியமாக உருவாக்கிய நானா சாஹிப், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், அலி நத்ஹிகான் போன்றத்தலைவர்களின் இணையற்ற திறமையை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். – வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.77.

ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக 1858 ஜனவரி 15 – இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார். மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும் மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார். ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல் ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன் பிப்ருவரி 15 – இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார்.

கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப் பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.

அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது: புரட்சிக்காரர்களின்… தலைவரான பைசாபாத் மௌல்வி அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர். ஓர்உயர்ந்த இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும் சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.* (* வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)

அதன்பின்னர் லக்னோவின் இருதயம் போன்ற ஷாஹத்கன்ஞைக் கைப்பற்றி, கோட்டை போன்ற கட்டிடத்தில் இருந்து ஆங்கிலேயரது பீரங்கிப் படையைத் தாக்கினார். இவரை அப்பகுதியில் இருந்து விரட்ட ஆங்கில அரசு 21 படைப்பிரிவுகளை அனுப்பி வைத்தது. இதனால் லக்னோவில் இருந்து 29 மைல் தூரத்திலுள்ள பாரியில் முகாமிட்டார்.

அயோத்தி பகுதியில் சிற்றரசு நடத்திய பான்ராஜா ஜகன்னாத சிங் தனக்கு உதவுவார் என்ற எண்ணத்துடன் அவருக்கு கடிதம் அனுப்புகிறார். ஜகன்னாத சிங்கிடம் இருந்து அஹமதுல்லா ஷாவிற்கு அழைப்பு வருகிறது. அவர் அழைப்பின் பிண்ணனியில் பின்னப்பட்டிருந்த சூழ்ச்சியை அறியாத அஹமதுல்லா ஷாஹ். ஆரவாரம் ஏதுமின்றி யானை மீதமர்ந்து பாவன்ராஜாவின் கடி நகருக்குள் நுழைகிறார். அவர் கோட்டைக்குள் நுழைந்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோடடைச்சுவரின் மீது காவலர்கள் சூழ ராஜா ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். சதிவலைக்குள் அகப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த மௌல்வி, தப்பிக்க முயற்சிக்கு முன் ராஜாவின் தம்பி பல்தேவ் சிங் துப்பாக்கியால் சுட… தோட்டாக்களை மார்பில் ஏந்தி மண்ணில் சாய்கிறார் அஹமதுல்லா ஷாஹ்.

ஆங்கிலேயருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் ராஜாவும் அவர் தம்பியும் வீரமரணமடைந்த மௌல்வியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, 13 மைல் தூரத்திலுள்ள தாணாவில் முகாமிட்டிருந்த ஆங்கிலேயரிடம் ஓடினர். மௌல்வியின் தலையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர், அதனை ஒருகம்பில் செருகி போலிஸ் கொத்தவால் சாவடியில் எல்லோரும் பார்க்கும் படி ஊன்றி வைத்துத் தங்கள் ஆத்திரங்களுக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். அன்னாரது உடலைத துண்டு துண்டாக வெட்டி தீயிலிட்டுப் பொசுக்கினர். இந்த மண்ணிற்காக உயிர் நீத்த அப்அபருமகனின் உடல்கூட முறைப்படி நல்லடக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறமுடியாமல் போயிற்று. அவரது தலை மட்டும் அஹ்மத்பூர் ஹான் மஹல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஒரு கையில் வாளையும் மறுகையில் பேனாவையும் ஏந்தி அவ்வீரத்தியாகி (மௌல்வி அகமதுஷா) புரிந்த தொண்டிற்கு இணையே இல்லை ! – வீரசாவர்க்கர், எரிமலை, பக்கம்.354.

ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து கொண்டதற்காக ராஜா ஜகன்னாத சிங்கிற்கு ஆங்கில அரசு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துப் பாராட்டியது.

மௌல்வி செய்யது அஹ்மதுல்லா ஷாஹ்வின் தீரத்தைப் பற்றி ஜெனரல் தாமஸ் என்ற ஆங்கில அதிகாரி : இந்திய சுதந்திரத்திற்காகப் புரட்சி செய்தவருள் இவரைவிட மேலான வீரர் எவருமில்லை. ஸர், ஆலன் கேம்பல் என்ற மாபெரும் ஆங்கிள தளபதி, யுத்தக் களத்தில் வெற்றி பெற முடியாமல் போனதற்கு இவரே காரணம். தன் தாய்நாடு விடுதலை பெற வேண்டும் என்று போராடியதில் இவர் ஒரு நிகரற்ற தீரர்;. – என்று குறிப்பிட்டுள்ளது உண்மை … வெறும் புகழ்ச்சி இல்லை!*
(* ஏ.என்.முகம்மது யூசுப், இந்தி விடுதலைப் போராட்ட வீரர்கள், பக்கம்,60-61.)

ஒரு வாள் இருபது தலைகள்

மௌல்வி அஹமதுல்லா ஷாஹ் போன்று ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பட்டாளத்திற்குரிய முழு பராக்கிரமத்துடன் திகழ்ந்த மற்றொரு மார்க்க அறிஞர் மௌல்வி மிர்ஜா மஹ்தீ சாலிஹ் சிறந்த போர்க்கலைப் பயிற்சியாளராகத் திகழ்ந்த மிர்ஜா மஹ்தீ, முஃத்தீகன்ஞ் பகுதியைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர். இவரது முஃத்தீகன்ஞ் எல்லைக்குள் ஆங்கிலேயர் நுழைந்தால் அவர்களது தலை தப்பாது.

1858 – இல் இவரை வீழ்த்துவதற்காக கௌகாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலப் படை மிர்ஜா மஹ்தீயின் எல்லைக்குள் நுழைய முடியாமல் தத்தளித்தது. பல நாள் முற்றுகைத் தொடர்ந்தது. ஒரு நாள் அதிகாலை பஜ்ரு தொழுதுவிட்டு பள்ளிவாயிலை விட்டு மிர்ஜர் மஹ்தீ வெளிவர, ஆங்கிலப் படை அவரைச் சூழ்கிறது. தனி நபராக நின்று 20 பேரை வெட்டி வீழ்த்தி இறுதியில் எதிராளியின் குண்டுகளை மார்பில் தாங்கி சாய்கிறார். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்தபோது, அவர்களது ஜனாஸா (இறந்த உடல்)வைப் பொதிந்த கபன்துணி (சவத்துணி) முழுக்க இரத்தக்கறைப் படிந்திருந்தது உண்மை வரலாறாகும்.

தொடரும்…