- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

108 அவசர சேவை ஆம்புலன்ஸ்

தகிடு தத்தம்

[1]இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர சேவை ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியோடு அழைப்புகள் கட்டுப்பாட்டு மையத்திற்கு செல்கின்றன. அங்கிருந்து சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள வண்டிகளுக்கு அழைப்புகள் திருப்பிவிடப்படு கின்றன. விபத்துகள் மட்டுமின்றி, பெண்களைச் சீண்டுதல் ஆகியவை பற்றியும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டில் இந்த வசதி துவக்கப்பட்டது. இந்த சேவையைத் துவக்கிய ஐந்தாவது மாநிலம் தமிழகமாகும். 108 அழைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய இரண்டும் கட்டணமில்லாமல் மக்களுக்குக் கிடைத்தது. உண்மையிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.

தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரத்தை கூடுதல் கவனத்தோடு பார்த்தவர்கள் ஏராளம். ஆனால் மேலும் கூர்மையோடு கவனித்தபோதுதான் இந்த விளம்பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார்கள் என்பது தெரிந்தது.

சென்னையைச் சேர்ந்த மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில தகவல்களைக் கேட்டார். மக்களுக்கு வசதி செய்து தரும் இந்த சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்று நினைத்து தான் அந்தக் கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் அந்த அதிர்ச்சியான தகவல் அவருக்குக் கிடைத்தது. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் விளம்பரத்திற்காக 1 கோடியே ஒரு லட்சம் ரூபாய் அரசால் தரப்பட்டுள்ளது.

[2]எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள், எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று மாறியுள்ளதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. மக்களுக்கு சேவை செய்யும் திட்டங்கள் என்று சொல்லிக் கொண்டு, அரசு கஜானாவிலிருந்து தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றிக் கொள்ளும் திட்டங்களில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். பத்து நிமிடங்களில் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைகிறதாகக் காட்டப்படும் விளம்பரங்களை ஒருமுறை ஒளிபரப்ப சன் டி.வி. 23 ஆயிரத்து 474 ரூபாயும், கலைஞர் டி.வி. 9 ஆயிரத்து 700 ரூபாயும் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு வசதி என்றபோதிலும், மருத்துவத்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியாகவே புதிய திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  இந்த 108 சேவை என்பது மோசடி மன்னன் சத்யம் ராமலிங்க ராஜூவின் மூளையில் உதித்ததாகும். மாநில அரசுகளிடமிருந்து பணத்தைக் கறக்கவே இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டது. .

மக்கள் பணத்தையே எடுத்து தனியார் நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் குடும்ப நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, இலவச சேவை என்று மக்களின் தலையில் மிளகாய் மட்டுமில்லாமல், சட்டினியே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நவீன-தாராளமயம் பல ஒப்பனைகளோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒப்பனை கலைந்துள்ளது. அதன் கோர வடிவம் அம்பலமாகியுள்ளது. கலைஞர் ஆட்சியின் தகிடு தத்தம் வேலைகளில் இதுவும் ஒன்று இன்னும் எத்தனையோ

நன்றி: ஆயிரத்தில் ஒருவன் பிளாக்ஸ்பாட்