Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 69,737 முறை படிக்கப்பட்டுள்ளது!

அட்டகாசமான சுவையில் 30 மசாலா குருமா – 1

தினமும் இதே சாம்பாரும் சட்னியும்தானா? வாய்க்கு ருசியா ஒரு குருமா, ஒரு கிரேவி… ஒண்ணு கிடையாது நம்ம வீட்டுல!’’ என்று உங்கள் இல்லத்தரசரோ, அருமைப் பிள்ளையோ அலுத்துக்கொள்ள..

‘‘நான் எங்கே போவேன் மசாலாவுக்கும், கிரேவிக்கும்! இது என்ன ஹோட்டலா?’’ என்று அங்கலாய்க்கிறீர்களா?

தூக்கியெறியுங்கள், உங்கள் கவலையை! ஹோட்டல் சுவையைவிடவும் பிரமாதமான கைப்பக்குவத்தில் எல்லா சைடு டிஷ்களையும் நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, ப்ரெட், பூரி, நாண், பரோட்டா, சாதம் என்று அத்தனைக்கும் தொட்டுக்கொள்ள ஏற்ற ருசியான முப்பது வகை மசாலா – குருமாக்கள் செய்யும் விதத்தைக் கற்றுத் தருகிறார் ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். இவை எல்லாமே குறைந்த விலையில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களில் செய்யக்கூடிய ஐட்டங்கள் என்பது கூடுதல் சிறப்பு! செய்து, பரிமாறுங்கள்! அப்புறம் பாருங்கள்… வீட்டில் உங்களுக்குக் கிடைக்கும் அமோக பாராட்டை!

மணமணக்கும் மசாலா ஐட்டங்கள் தயாரிப்பில், கரம் மசாலா பொடி மற்றும் கறி மசாலா பொடி உதவிக்கரம் நீட்டுகின்றன. இந்த இணைப்பிதழில் அணிவகுக்கும் மசாலா செய்முறைகளில் இது பற்றிய குறிப்புகள் வரும். கரம் மசாலா பொடியும் கறி மசால் பொடியும் தயாரிப்பது எப்படி என்பது மட்டும் இங்கே…

பனீர் பட்டர் மசாலா!

தேவையானவை: பனீர் – 200 கிராம், பெரிய வெங்காயம் -3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டேபிள் ஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன் (பசும் பாலை சற்று அகலமான பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், பாலின் மீது அடர்த்தியாக ஏடு படியும். அதுதான் ஃப்ரெஷ் க்ரீம்!), காய்ந்த வெந்தயக் கீரை – 2 டீஸ்பூன்.

செய்முறை: பனீரை சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரையுங்கள். இப்போது, வாணலியில் வெண்ணெயைப் போட்டு லேசாக உருக்குங்கள். அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை ‘ஸிம்’மில் வையுங்கள். வாணலியில் உள்ளவை நிறம் மாறி, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள். கடைசியாக, பனீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள். ஃப்ரெஷ் க்ரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

குழந்தைகள் விரும்பும் சத்தான சைட் டிஷ், இந்த பனீர் பட்டர் மசாலா!

கரம் மசாலா பொடி: இந்தப் பொடியை ஒரு வாரம் மட்டுமே வைத்திருக்கும் அளவுக்கு கொஞ்சமாகத் தயாரிப்பது நல்லது. வாசத்தோடு பயன்படுத்தத் தான் இப்படி!

செய்முறை: லவங்கம் – 2 டீஸ்பூன், ஏலக்காய் – 1 டீஸ்பூன், பட்டை – 4, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன்… இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால், அதுதான் கரம் மசாலா பொடி!


கறி மசாலா பொடி: இதை, மற்ற பொடிகளைப் போல மொத்தமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

செய்முறை: காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் – 1 கப், தனியா – அரை கப், மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டேபிள் ஸ்பூன், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், பட்டை, லவங்கம்,ஏலக்காய் – தலா 5. இவை அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து, அரைத்தால் கறி மசாலா ரெடி!

 


செட்டி நாடு குருமா!

தேவையானவை: கத்தரிக்காய் – 5, உருளைக்கிழங்கு (நடுத்தர அளவில்) – 2, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை — சிறிதளவு, பூண்டு – 2 பல்.

தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன். அரைக்க: தேங்காய்த் துருவல் – 1 கப், காய்ந்த மிளகாய் – 6 முதல் 8 வரை, தனியா – 1 டேபிள் ஸ்பூன், சீரகம், சோம்பு – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை: முதலில், அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டைத் தட்டிக்கொள்ளுங்கள். கத்தரிக்காய், வெங்காயம், உ. கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேருங்கள். பின்னர், வெங்காயம் சேர்த்து அது வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய், உ. கிழங்கு, தக்காளி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில், பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.
உ. கிழங்கு வெந்ததும், நசுக்கிய பூண்டைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தேவையான தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை, மல்லித்தழை போட்டு, சில நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இட்லி,தோசை, சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா இது.


மட்டர் பனீர் மசாலா!

தேவையானவை: பட்டாணி -1 கப், பனீர் -200 கிராம், பெ. வெங்காயம்-3, தக்காளி – 5, இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி அரைத்த விழுது – தலா 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து தனியாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அடுத்து, வாணலியில் எண்ணெயும் நெய்யும் விட்டு நன்றாகக் காய விடுங்கள். அதில், வெங்காயம் சேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். அதனுடன் தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் அத்துடன், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர், வேகவைத்த பட்டாணி, முந்திரி விழுது ஆகியவற்றைச் சேருங்கள். கால் கப் தண்ணீர், கரம் மசாலா தூள், சீரகத்தூள் சேர்த்து, நன்கு கிளறி இறக்குங்கள்.

அசத்தலான மட்டர் பனீர் மசாலா ரெடி!


வெஜிடபிள் குருமா!

தேவையானவை: இங்கிலீஷ் காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பட்டாணி, உ. கிழங்கு போன்றவை) சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கியது – 2 கப், பெ. வெங்காயம் – 2, தக்காளி – 3, தேங்காய்த் துருவல் – 1 கப், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5.

செய்முறை: காய்கறிகளுடன் சிறிது உப்பும் முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்குங்கள். 2 நிமிடம் கழித்து, ஜாக்கிரதையாக வெயிட்டைத் தூக்கி, ப்ரஷரை வெளியேற்றி, உடனே திறந்து விடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிவையுங்கள். தேங்காய்த் துருவலையும் பொட்டுக்கடலையையும் நன்கு அரைத்துத் தனியே வையுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தனியே அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, வேகவைத்த காய்கறி, அரைத்த தேங்காய்க் கலவை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

வாசனையான வெஜிடபிள் குருமா ரெடி!

குறிப்பு: காலிஃப்ளவர் சேர்க்க விரும்பினால், தனியே உப்பு நீரில் போட்டுக் கழுவி எடுத்து, துண்டுகளாக்கி, கடைசியாகக் காய்கறிகளைப் போடும்போது சேர்க்கவேண்டும். குக்கரில் போடக்கூடாது.


பீஸ் மசாலா!

தேவையானவை:பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, புளிக்காத தயிர் – கால் கப், இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், தனியா தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 50 கிராம், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு.

செய்முறை:பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, ஆறவைத்து அரைத்தெடுங்கள். இப்போது, வெண்ணெயை உருக்கி, அதில் இஞ்சி, பூண்டு விழுது, அரைத்த வெங்காய விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். இதனுடன், உப்பும் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு, தயிர், தேவையான தண்ணீர், வேகவைத்த பட்டாணியை சேர்த்து, கரம் மசாலாவைத் தூவி, 2 நிமிடம் கொதித்ததும் இறக்குங்கள்.


புதினா குருமா!

தேவையானவை: பச்சை பட்டாணி – 1 கப், பெரிய வெங்காயம் – 2.
தாளிக்க: பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: ஆய்ந்து, அலசி, கழுவிய புதினா – 1 கட்டு, தேங்காய்த்துருவல் – 1 கப், இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 5, சோம்பு – அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 6, பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். சிறிது எண்ணெயைக் காயவைத்து, அரைக்கக் கொடுத்துள்ளவற்றை வதக்கி, ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.  இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருள்களைச் சேர்த்து, பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும், அரைத்த விழுதைச் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி, பட்டாணி, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

புதினா மணக்க, மணக்க நாவுக்கும் நாசிக்கும் விருந்தளிக்கும் இந்தக் குருமா!


பெப்பர் பீஸ் மசாலா!

தேவையானவை: பட்டாணி – 2 கப், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 4, இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள், தனியா தூள் – தலா 1 டீஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – கைப்பிடியளவு, உப்பு – சிறிதளவு.

வறுத்துப் பொடிக்க: மிளகு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை:பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேகவையுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை, வெறும் கடாயில் வறுத்துப் பொடியுங்கள். இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயத்தை வதக்குங்கள். வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும், அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதனுடன், தக்காளி, உப்பு சேர்த்து, தக்காளி கரையும்வரை வதக்குங்கள். பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி, பொடித்து வைத்துள்ள தூள், கரம் மசாலா தூள், சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால், அதுதான்…

‘பிரமாதம்’ என்று சொல்லவைக்கும் பெப்பர் பீஸ் மசாலா!


தக்காளி குருமா!

தேவையானவை: பெ. வெங்காயம் – 3, தக்காளி – 6 முதல் 8 வரை, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 கப், கசகசா – 1 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய் – 6, பட்டை, லவங்கம் – தலா 1, சோம்பு – கால் டீஸ்பூன், மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், கசகசாவைத் தனியே அரைத்தெடுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, வெங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் அரைத்த விழுது, உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர், அரைத்த தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

தளதள தக்காளி குருமா மணமணக்கும்!


கோபி மசாலா!

தேவையானவை: காலிஃப்ளவர் – சிறிய பூவாக 1, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவைக்கு.

தாளிக்க: பட்டை – 1, சீரகம் – அரை டீஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 6 பல், மிளகாய்த் தூள், கசகசா – தலா 2 டீஸ்பூன், தனியா தூள், மிளகு – தலா 1 டீஸ்பூன், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 8.

செய்முறை:காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் உப்பு சேருங்கள். அதில், பத்து நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு, வெளியில் எடுத்துக் கழுவி, சிறு துண்டுகளாக்குங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது, எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் வதங்கி, நிறம் மாறியதும், தக்காளி, அரைத்து வைத்துள்ள விழுது ஆகியவற்றைப் போட்டு, காலிஃப்ளவர் துண்டுகள், உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

கலக்கல் கோபி மசாலா நிமிஷத்தில் தயார்!


மசாலா குருமா!

தேவையானவை: விரும்புகிற காய் (கலந்ததாகவோ, தனியாகவோ) நறுக்கியது – 2 கப், வெங்காயம் – 3, தக்காளி – 4, உப்பு – தேவைக்கு. தாளிக்க: சோம்பு – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்.

அரைக்க: இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், சோம்பு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – அரை கப், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
இப்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளிக்க உள்ளவற்றைப் போட்டுத் தாளியுங்கள். இதனுடன் வெங்காயம் சேர்த்து, நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர், தக்காளி, காய்(கள்), அரைத்த விழுது, உப்பு சேர்த்து, மிதமான தீயில் வதக்குங்கள். காய்கறி(கள்) வெந்து, பச்சை வாசனை போன பிறகு, தேவையான தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்குங்கள்.

மசாலா, குருமா… இரண்டின் சுவையையும் அனுபவியுங்கள்.

நன்றி: ‘சமையல் திலகம் ‘ரேவதி சண்முகம்