- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

குழந்தையின் மனத்துக்குப் பிடித்த உணவுகள்!

 foodchoice [1]குழந்தையின் முதல் வருடம் முடித்ததும் குழந்தையுடைய உணவு பழக்கம், வளர்ச்சி முறை ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்து விடும். 1-3 வயதில் வளர்ச்சி ஒரு வயதிற்குள் இருந்ததை விட குறைவாக இருக்கும். பசியும் குறைவாக இருக்கும். பற்களின் வளர்ச்சியும் ஓரளவு முழுமையாக இருப்பதால் எல்லா உணவுகளையும் சாப்பிட முடிகிறது. இந்த வயதில் மூளை வளர்ச்சி முழுமை அடைவதால் குழந்தைகளுக்கு பருப்பு, நெய், பால், முட்டை போன்ற உணவுகளை தினந்தோறும் கொடுக்க வேண்டும்.

3-4 வயது குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்று தாய்மார்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இந்த வயதில் வளர்ச்சி குறைவாக இருப்பதால், உணவின் தேவையும் மிதமாகத்தான் இருக்கும். அதனால் அதற்காக கவலைப்படத் தேவையில்லை. குழந்தையின் பசியை அறிந்து உணவளிக்க வேண்டும். பசி இல்லாத போது உணவைத் திணிப்பது ஒரு நாகரீகமான செயலும் அல்ல. நல்ல பழக்க வழக்கமும் இல்லை.

7-9 வயது வரை குழந்தைகளுக்கு மேலும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் இதுவரை பெற்றோர்கள் சமைத்ததை குறை கூறாமல் உட்கொண்டவர்கள் இனி தானே சொந்தமாக தேர்ந்தெடுத்து விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் பருவம் இது.

பள்ளி பருவத்தில் சத்தான உணவு மட்டுமல்ல,  நல்ல உணவு பழக்கத்தை வலியுறுத்துவது பெற்றோர்களின் கடமையாகும். நிதானமாக மென்று சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தையா இருக்கும் பொழுது அதிக உடல் பருமன் ஏற்பட்டால் 80% சதவிகிதம் வரை இவர்கள் வளர்ந்த பிறகு அந்த உடல் பருமன் பிரச்னை நீடிக்கும். நிறைய நொறுக்குத் தீனிகளை வீட்டில் சேமித்து வைக்காதீர்கள். மதிய அல்லது இரவு நேர வேளைக்குப் பிறகு குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு பழக்கி வந்தால் இடையில் நொறுக்குத் தீனிகளை குழந்தைகள் அதிகம் விரும்பி உட்கொள்ளமாட்டார்கள்.

“குழந்தைகள் சாதம் என்றால் சாப்பிட மாட்டேன் என்கிறார்கள். இதுவே சிற்றுண்டி என்றால் சாப்பிட விரும்புகிறார்கள். வளரும் குழந்தைகள் சாதம் சாப்பிட வேண்டாமா என்று நிறைய தாய்மார்கள் கேட்பார்கள். சாதம் தான் சாப்பிடவேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. இட்லி. தோசை, சப்பாத்தி இவற்றுள் எவையேனும் ஒன்றை குழந்தைகள் விருப்பப்பட்டால்  தாய்மார்கள் அவற்றை செய்து கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் புளிக்க வைத்த மாவினால் செய்யும் இட்லி தோசையில் (fermented batter) சாதத்தை விட அதிக சத்து உள்ளது. ஆனால் நிறைய காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

mother feeding her daughter [2]போர் அடிக்கிற மாதிரி வாரத்திற்கு அதே காய்கறிகளை ரிபீட் செய்யக் கூடாது. சில குழந்தைகளுக்கு அடிக்கடி பசிக்கும். ஒரே வேளையில் எல்லா உணவுகளையும் திணித்து சாப்பிடு என்று வலியுறுத்தக் கூடாது.

அதிக பருமனுடைய குழந்தைகளுக்கு தாய்மார்கள் எந்த உணவை நீக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு தாய் ஒரு முறை என்னிடம் பள்ளிக்கு செல்லும் தன் 8 வயது குழந்தை அதிக உடல் பருமனுடையவனாக இருப்பதால் மற்ற குழந்தைகள் கேலி செய்கிறார்கள். இதனால் பால் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். பழச்சாறுதான் இரண்டு முறை கொடுக்கிறேன் என்று கூறினார்.

இந்த மாதிரி பால் கொடுப்பதை நிறுத்துவது உடலுக்கு நல்லது அல்ல. மற்றொரு விஷயம் பழச் சாறுகளில் உடல் பருமனை குறைக்கும் நார்சத்து வெளியேற்றப்படுகிறது. சர்க்கரை சேர்த்து உட்கொள்ளும் போது ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20 கலோரி வரை எடையைக் கூட்டும். அதனால் உணவுகளின் தன்மையை அறிந்து உணவுகளை அளிக்க வேண்டும்.

குழந்தைகளை சாப்பிடும் போது அவசரப்படுத்துதல் கூடாது. சீக்கிரம் சாப்பிட்டு எழுந்திரு பள்ளிக்கு நேரமாச்சு, இல்லை டியூஷனுக்கு போகணும் என்று அடுத்தடுத்து வேலைகளை கொடுத்து குழந்தையை அவசரப்படுத்தக் கூடாது. நிதானமாக சாப்பிடும் குழந்தையாக இருந்தால் உணவு உட்கொள்ளும் நேரத்தை சிறிது அதிகமாக ஒதுக்க வேண்டும்.

சாப்பிடும் போது குழந்தையின் பள்ளிக்கூட தேர்வில் பெற்ற மதிப்பெண்களைப் பற்றியோ அல்லது மன அழுத்தம் தரக் கூடிய எந்த விஷயத்தைப் பற்றியும் பேசக்கூடாது.

சமையல் அறைக்குள் குழந்தைகளை சின்னச் சின்ன வேலைகளில் ஈடுபடுத்தலாம். தன்னுடைய தட்டை தானே கழுவி வைத்துக் கொள்வது தண்ணீர் கொண்டு வந்து வைத்துக் கொள்வது போன்ற பழக்கங்களை ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பொதுவாக எல்லோருக்கும் கற்றுத் தர வேண்டும்.

தொடர்புக்கு – அருணா ஷ்யாம் : 9884172289