- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

விலைவாசியை சமாளிக்க 30 வகை ரெசிபி 2/2

காய்கறி தோல் சூப்

aval153 [1]தேவையானவை: சிறிது சதையுடன்கூடிய கேரட், பீட்ரூட், மாங்காய், உருளைக்கிழங்கின் தோல் துண்டுகள் – தலா அரை கப், காய்கள் வேக வைத்த தண்ணீர் – ஒரு கப், கீறிய பச்சை மிளகாய் – 1, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, ஃப்ரெஷ் க்ரீம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: காய்கறி தோல்களை வெந்நீரில் நன்றாகக் கழுவி, கடாயில் போட்டு வதக்கி, தண்ணீர் விட்டு… உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வேக விடவும். இதை மிக்ஸியில் போட்டு விழுதாக்கி, காய்கள் வேக வைத்த நீரை சேர்த்துக் கொதிக்க விடவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து, கொதிக்கும் காய்கறி தோல் கலவையில் சேர்த்துக் கலக்கி, ஃப்ரெஷ் க்ரீம், மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கி இறக்கவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த பிரெட் துண்டுகளைப் போடலாம்.

===========================

கேரட் தோல் ரொட்டி

aval154 [2]தேவையானவை: நறுக்கிய கேரட் தோல், அரிசி மாவு – தலா ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து, தோலை சற்று தடிமனாக சீவிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு உதிர் உதிராக வரும்வரை அடிக்கவும். இதனுடன், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் கலந்து, சுடுநீர் ஊற்றி, ரொட்டி தட்டுவதற்கேற்ப முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். இதிலிருந்து சிறிது மாவை எடுத்து, எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து, கனமான ரொட்டியாகத் தட்டி, காயும் தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு முறுகலாகச் சுட்டெடுக்கவும்.

புதினா சட்னி, தேங்காய் சட்னி இதற்கேற்ற சைட்டிஷ்!

===========================

நாரத்தங்காய் தோல் பச்சடி

aval155 [3]தேவையானவை: நறுக்கிய நாரத்தங்காய் தோல் – 2 கப், கீறிய பச்சை மிளகாய் – 4, பொடித்த வெல்லம் – அரை கப், புளி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நாரத்தங்காய் தோலைக் கொதி நீரில் போட்டுப் பத்து நிமிடம் மூடி வைத்தால், நிறம் மாறி கசப்புத் தன்மை போய்விடும். பிறகு, தோலை சதுரத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் மூன்று கப் தண்ணீர் விட்டு, நாரத்தங்காய் தோல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் புளி பேஸ்ட், வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, நாரத்தங்காய் கலவையில் கொட்டி இறக்கி, ஆறியதும் பாட்டிலில் சேமித்துப் பயன்படுத்தவும்.

ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். எந்த சாதத்துக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

===========================

வாழைக்காய் தோல் சட்னி

aval156 [4]தேவையானவை: வாழைக்காய் தோல் துண்டுகள் (சிறிது சதையுடன் இருப்பது போன்று சீவிக் கொள்ளவும்) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – கொட்டைப்பாக்கு அளவு, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

செய்முறை: வாழைக்காய் தோலை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து நறுக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து, உளுத்தம்பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். அதே கடாயில் வாழைக்காய் தோல் துண்டுகளையும் லேசாக வதக்கி, புளி, இஞ்சி, உப்பு, வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துக் கொட்டிக் கலக்கி பயன்படுத்தவும்.

===========================

பீர்க்கங்காய் தோல் துவையல்

aval156a [5]தேவையானவை: நறுக்கிய பீர்க்கங்காய் தோல் – ஒரு கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, காய்ந்த மிளகாய் – 3, பெருங்காயம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பீர்க்கங்காய் தோலை வெந்நீரில் சுத்தமாக அலசிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு… காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பீர்க்கங்காய் தோலை போட்டு வதக்கி, மற்ற பொருட்களுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

===========================

பப்பாளித் தோல் ஜாம்

aval157 [6]தேவையானவை: பப்பாளித் தோல் துண்டுகள் – 2 கப், பப்பாளிப் பழ விழுது – அரை கப், சர்க்கரை – ஒன்றரை கப், சிட்ரிக் ஆசிட் – ஒரு டீஸ்பூன், ராஸ்பெரிஸ் ரெட் கலர் – அரை டீஸ்பூன், பைனாப்பிள் எசன்ஸ் – 3 டீஸ்பூன்.

செய்முறை: பப்பாளித் தோலை நன்றாக சுத்தம் செய்து, பழ விழுதுடன் சேர்த்து வேக வைத்து அரைக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். இந்த விழுதில் சர்க்கரை சேர்த்து, வாய் அகன்ற குழிவான கடாயில் போட்டு, கைவிடாமல் கிளறவும். ஜாம் பதம் வந்ததும் சிட்ரிக் ஆசிட் கலந்து, ஐந்து நிமிடம் கிளறவும். ஒரு தட்டில் ஜாமைப் போட்டால், தண்ணீர் பிரிந்து வராமல் இருந்தால் அது சரியான பதம். கலர், எசன்ஸ் கலந்து உடனே இறக்கவும்.

பாட்டிலை மரப் பலகையின் மேல் வைத்து ஜாமை பாட்டிலில் சேமிக்கவும். ஜாமை முழுவதும் நிரப்பக்கூடாது. ஆறியதும் மூடி வைக்கவும்.

===========================

பப்பாளித் தோல் அசோகா

aval158 [7]தேவையானவை: சிறிது சதையோடு நறுக்கிய பப்பாளிப் பழத் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – 2 டேபிள்ஸ்பூன், வெந்த பாசிப்பருப்பு – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பப்பாளிப் பழத்தோலை நன்றாக சுத்தம் செய்து, குக்கர் தட்டில் வைத்து தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் வேகவிடவும். இதை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை கடாயில் போட்டு, கோவா, பாசிப்பருப்பு, பாதி அளவு நெய், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதேபோல் மாம்பழத்தோலிலும் செய்யலாம்.

===========================

ஆரஞ்சுத் தோல் டூட்டி ஃப்ரூட்டி

aval159 [8]தேவையானவை: நன்றாகக் கழுவி, மெல்லிய சிறு துண்டுகளாக்கிய ஆரஞ்சுப்பழத் தோல் – 2 கப், சர்க்கரை – கால் கப், பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஃபுட் கலர் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: ஒரு வாய் அகன்ற பாட்டிலில் ஒரு அடுக்கு சர்க்கரை, ஒரு அடுக்கு தோல் துண்டுகள் என மாற்றி மாற்றி போட்டு மெல்லிய வெள்ளைத் துணியால் பாட்டிலை மூடி ஒருநாள் முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை பஞ்சு போல் இளகியிருக்கும். சர்க்கரையும் சிரப் போல கரைந்திருக்கும். தோலை தனியே எடுத்து விட்டு, சிரப்பை அடுப்பில் கொதிக்கவிட்டு இறக்கி, பழத் தோல் துண்டுகளைச் சேர்த்துக் குலுக்கவும். ஊறியதும், மறுபடியும் துண்டுகளை தனியே எடுத்து காயவிடவும். தொடர்ந்து மூன்று நாள் இதுபோல் செய்து, சிரப் வற்றி லேசான ஈரம் இருக்கும்போதே மூன்றாகப் பிரித்து பச்சை, சிவப்பு, மஞ்சள் ஃபுட் கலரைப் போட்டுப் பிசிறி காயவிடவும். உலர்ந்தபின் பாட்டிலில் போட்டு மூடிவைத்துக் கொள்ளவும்.

கலர்ஃபுல் டூட்டி ஃப்ரூட்டி ரெடி!

===========================

எலுமிச்சம்பழத் தோல் ஊறுகாய்

 aval160 [9]தேவையானவை: எலுமிச்சைத் தோல் – 20, காய்ந்த மிளகாய் – 50 கிராம், கட்டிப் பெருங்காயம் – ஒரு துண்டு, கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முந்தைய நாளே, எலுமிச்சைத் தோலில் உப்பு, மஞ்சள் சேர்த்துப் பிசிறி மூடி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு… வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தை தனித்தனியே போட்டு வாசம் வரை வறுத்துப் பொடிக்கவும். மறுநாள் ஊறிய எலுமிச்சைத் தோலை சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, எலுமிச்சைத் தோல் துண்டுகளைப் போட்டு வதக்கி, பொடித்தவற்றையும் சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். தோல் நன்றாக வெந்து, கையால் கிள்ளுகிற பதம் வந்ததும், வெல்லம் சேர்த்து இறக்கி, ஆற வைத்து, பாட்டிலில் சேமித்து பயன்படுத்தவும்.

===========================

பரங்கி பஞ்சு லட்டு

aval160a [10]தேவையானவை: விதைகள் நீக்கப்பட்ட பரங்கிக்காயின் பஞ்சு போன்ற நடுப்பகுதி – ஒரு கப், தேங்காய் விழுது, பாசிப்பருப்பு – தலா கால் கப், பொடித்த வெல்லம் – அரை கப், நெய், பால் பவுடர் தலா – 2 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், வறுத்த முந்திரித் துருவல் – தேவையான அளவு, நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பரங்கி பஞ்சு பகுதியை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லத்தை சேர்க்கவும். அது கரைந்ததும், பரங்கி விழுது, பாசிப்பருப்பு பொடி சேர்த்துக் கிளறவும். இவை நன்றாக சேர்ந்து வந்ததும், பால் பவுடர், தேங்காய் விழுது, நெய் சேர்த்துக் கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வெந்து வந்ததும், எசன்ஸ் சேர்த்து இறக்கவும். லேசாக ஆறியதும் சிறு உருண்டைகளாக உருட்டி, முந்திரித் துருவலில் புரட்டி எடுக்கவும்.

===========================

பீட்ரூட் தோல் ஜாம்

aval161 [11]தேவையானவை: நன்றாகக் கழுவி நறுக்கப்பட்ட பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், நறுக்கிய பீட்ரூட் – கால் கப், சர்க்கரை – ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – 2 டீஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு, உப்பு சேர்த்து, பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, பீட்ரூட் சேர்த்து குக்கர் தட்டில் வைத்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை, உப்பு கலந்து, ஒரு கடாயில் போட்டு, அடுப்பில் வைத்து, கைபடாமல் கிளறவும். தளதளவென்று ஜாம் போல் வந்ததும், நெய், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

சப்பாத்தி, தோசை, சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். ரத்த சோகையைத் தடுக்கும்.

===========================

பரங்கி விதை பாயசம்

aval162 [12]தேவையானவை: காய வைத்து உரித்த பரங்கி விதை – ஒரு கப், கசகசா – 3 டேபிள்ஸ்பூன், பால் – சிறிதளவு, தேங்காய்ப்பால் – 3 கப் (முழு தேங்காயை அரைத்து முதல் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால் எடுத்து தனித்தனியே 3 கப்களில் வைக்கவும்), சர்க்கரை – கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம், ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்.

செய்முறை: கசகசாவை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்து, பாலில் ஊற வைத்து, விழுதாக அரைக்கவும். பரங்கி விதைகளைக் காய வைத்து உரித்து (பெரிய கடைகளில் பாலிஷ் செய்து ரெடிமேடாகவும் கிடைக்கும்), சிறிது பாலை விட்டு விழுதாக அரைக்கவும். தேங்காயின் மூன்றாம் பாலை ஒரு கடாயில் ஊற்றி… அரைத்த கசகசா, பரங்கி விதை விழுதுகளைப் போட்டுக் கை விடாமல் கலக்கி, இரண்டாம் பாலையும் சேர்க்கவும். தேவையானால் வெந்நீர் சேர்க்கலாம். நன்றாகக் கொதித்ததும், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட்டு, முதல் பாலைச் சேர்த்து கிளறி, எசன்ஸ் போட்டு இறக்கவும். முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொட்டவும்.

===========================

கேரட் தோல் கீர்

aval162a [13]தேவையானவை: கேரட் தோல் துண்டுகள் – ஒரு கப், பால் – 2 டம்ளர், பாதாம் மிக்ஸ் – அரை கப், சர்க்கரை – கால் கப், நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, திராட்சை – தலா 30 கிராம்.

செய்முறை: கேரட்டை நன்றாக சுத்தம் செய்து, அதன் தோலை சீவி எடுக்கவும். உப்பு கரைத்த வெந்நீரில் அதை ஊற வைத்து, கழுவி நறுக்கவும். கடாயில் சிறிது பால் ஊற்றி, கேரட் தோலை அதில் வேக வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். வேறு கடாயில் மீதமுள்ள பாலை ஊற்றி, கேரட் தோல் விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் பாதாம் மிக்ஸை கரைத்து ஊற்றி, சர்க்கரை சேர்த்து, கொதித்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். விருப்பப்பட்டால் பாதாம் எசன்ஸ் சில சொட்டுகள் சேர்க்கலாம்.

===========================

பீட்ரூட் தோல் அல்வா

aval162b [14]தேவையானவை: பீட்ரூட் தோல் துண்டுகள் – 2 கப், இனிப்பில்லாத கோவா – அரை கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – கால் கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள், பாலில் கரைத்த குங்குமப்பூ – தலா அரை டீஸ்பூன், வறுத்த முந்திரி, திராட்சை, சாரைப்பருப்பு – தலா 20 கிராம்.

செய்முறை: பீட்ரூட் தோலை வெதுவெதுப்பான நீரில் போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும். பிறகு, வெளியே எடுத்து, புதிய தண்ணீரில் நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, குக்கர் தட்டில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும். மூன்று விசில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கடாயில் போட்டுக் கிளறவும். நீர் வற்றியதும், பாதி அளவு நெய் விட்டு கோவாவை உதிர்த்துச் சேர்த்துக் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து, பாலில் கரைத்த குங்குமப்பூவைக் கலந்து இறக்கவும். வறுத்த முந்திரி, திரட்சை, சாரைப்பருப்பை போட்டு, மீதமுள்ள நெய்யை விட்டு கலக்கவும்.

===========================

நெல்லிக்கொட்டை டீ

aval164 [15]தேவையானவை: நெல்லிக்கொட்டை – அரை கப், புதினா, துளசி இலை – தலா 15, கருப்பட்டி – தேவையான அளவு, சுக்கு – சிறு துண்டு.

செய்முறை: நெல்லிக்கொட்டைகளை நன்றாக உடைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி நெல்லிக்கொட்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். சுக்கை தட்டிப் போட்டு, துளசி இலை, புதினா, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பாக அருந்தவும்.

இந்த டீ, மழை காலத்தில் அருந்த சூப்பராக இருக்கும். சளி, இருமல் வராமலும் தடுக்கும்.

===========================