Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2009
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,605 முறை படிக்கப்பட்டுள்ளது!

திடீரென நான் மௌத்தாயிட்டா!

நடுத்தர வயதுடைய இந்தக் குடும்பத்தலைவர்- பட்டதாரி- சவூதி, ஜித்தாவில் ஆயத்த ஆடைத் தொழில் செய்பவர் – மூன்று குழந்தைகளுக்குத் தந்தை – ஆரம்பக்கல்வி மட்டுமே படித்திருந்த தன் மனைவியிடம் ஒருநாள், “திடீரென்று நான் மௌத்தாயிட்டா நீ என்ன செய்வே?” என்று கேட்க, பதறிப் போனார் மனைவி!

“ஏன் இப்படி அமங்கலமாப் பேசுறீங்க?” என்று அவர் பாசத்துடன் கடிந்துகொள்ள, மனைவியை சமாதானப் படுத்திய அவர், மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார்!

“மௌத் மனிதனுக்கு எந்த நேரத்திலும் நேரலாம்… அதை எதிர்கொள்ள ஒரு முஸ்லிம் எல்லா வகையிலும்- எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் …குடும்பார்த்தக் கடமைகளை ஒத்தி போடாமல், முடிந்தவரை முடித்துக் கொள்ள வேண்டும் …நம்முடைய தொழிலை உருவாக்க நான் பட்ட கஷ்டத்தை நீ அறிவாய் ! அந்தத் தொழில் எனக்குத் திடீரென ஏதாவது நிகழ்ந்துவிட்டாலும் தொடர்ந்து நடக்க வேண்டும்! திறம்பட நிர்வகிக்கப் பட வேண்டும் – அதனால்தான் கேட்கிறேன்… அப்படியான ஒரு சந்தர்ப்பம் நேரிட்டால், நீ என்ன செய்வாய்?”

“என்னால் என்ன செய்ய முடியும்? போதிய படிப்பில்லை….. உலக அனுபவம் இல்லை… செல்வச் சூழலில் செல்லமாய் வளர்க்கப் பட்டவள்… உங்களுக்கு வாழ்க்கைப் பட்டபிறகும் அதே மகிழ்ச்சியான – வசதியான வாழ்க்கைச் சூழ்நிலை… என்னால் ஒன்றும் செய்ய முடியாது…. குழந்தைகளும் சிறியவர்கள் …… ஊருக்குப் போய்விட வேண்டியதுதான் ..” அந்தக் குடும்பத் தலைவி கலக்கத்துடன் சொன்னார்.

ஆயிரம் முறை அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மானசீகமாக இறைவனிடம் இறைஞ்சிக்கொண்டார்.

“அப்ப இந்தத் தொழில்…? ரத்தம் சிந்தி உருவாக்கிய தொழில்..? உடனே சரிந்து போவதா? கூடாது! அதை அனுமதிக்கக் கூடாது!”

“எப்படி?”

“வழியிருக்கிறது – அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன் இன்ஷா அல்லாஹ்! அதற்கு நீ ஒத்துழைக்க வேண்டும்”

புரியாமல் கனவணையே உற்றுப் பார்த்தார் அவர்.

“ஏன் இவர் இப்படிப் பேசுகிறார்? என்னால் எப்படி இந்தத் தொழிலைக் காப்பாற்ற முடியும்? எனக்கு என்ன அனுபவங்கள் இருக்கின்றன?”

அவருக்கு அழுகை அழுகையாக வந்தது!

கணவர் விவரித்தார்.

குஜராத்தின் மொத்த வியாபாரிகளிடமிருந்து அவர் குழந்தைகள் – பெண்களுக்கான உடைகளை மொத்தமாக ஜித்தாவுக்கு இறக்குமதி செய்கிறார். அவற்றிற்கு ஜித்தாவிலேயே எம்பிராய்டரி – நீடில் வொர்க் டிஸைன்களை சீஸனுக்கு ஏற்றபடி செய்துகொள்கிறார். அதற்காக ஒவ்வொரு பீஸுக்கும் 15 முதல் 20 ரியால் வரை செலவழிக்கிறார். பிறகு விற்பனை செய்கிறார்.

“அந்த 15- 25 ரியால் ஏன் பிறருக்குச் செல்ல வேண்டும்? நான் உனக்கு அந்தத் தொழிலின் நுணுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறேன் … உதவிக்கு ஆட்களை நியமிக்கிறேன்…. கடல் போன்ற பெரிய வீடு இருக்கிறது…. நீ இங்கிருந்தே இதைச் செய்யலாம்! அந்தத் தொகையை நான் உனக்குத் தந்து விடுவேன்…செலவு, உதவியாளர்கள் சம்பளம் போக மீதியை நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்… வீட்டுச் செலவுக்கும் உனக்கான செலவுகளுக்கும் வழக்கம் போல் தந்து விடுவேன்…இது உன் தனிப்பட்ட சம்பாத்தியம்”

“இது சாத்தியமா? … கேட்க நன்றாகத்தான் இருக்கிறது…என்னால் இதைச் செய்ய முடியுமா?”

மனைவியின் சந்தேகம் நீங்குவதாக இல்லை!ஆனால் கணவர் விடவில்லை!
அவரை ஒப்புக்கொள்ள வைத்து திட்டத்தைச் செயல்படுத்தினார்!

அன்று பயந்து நின்ற மனைவி இன்று தன்னம்பிக்கை நிறைந்த குடும்பத்தலைவியாய் ஏராளமான சேமிப்புடன் தலை நிமிர்ந்து நிற்கிறார்! தஞ்சை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் சராசரியாக செல்வச் செழிப்பில் பிறந்து வளர்ந்த பெண், ஒரு சிறந்த “பெண் தொழில் முனைப்பாளர்”ஆன உண்மைக் கதை இது!

அந்த புத்திசாலி – யதார்த்தம் உணர்ந்த குடும்பத் தலைவர் மனைவியுடன் நிற்கவில்லை! +2 படித்த மூத்த மகளை தன் கணக்கு வழக்கு அத்தனையையும் பொறுப்புடன் நிறைவேற்றும் அக்கௌண்டண்டாக உருவாக்கி, அதற்காக நியமிக்கப் பட்டிருந்த பணியாளரை நிறுத்திவிட்டு அந்த ஊதியத்தை தன் மகளுக்கே வழங்கினார்!

ஆறாவது, ஏழாவது படிக்கும் தன் பிஞ்சு மகன்களையும் விட்டுவிடவில்லை அவர். ஆயத்த ஆடைகளுக்கான விலைச்சீட்டை பின் பண்ணும் பனியை ஓய்வு நேரத்தில் வழங்கினார். அதன் காரணமாக அவர்களின் சேமிப்பும் பெருகியது. ஜித்தாவில் இந்த வித்தியாசமான குடும்பத்தைச் சந்தித்த பிறகு பல இடங்களில் இது பற்றிப் பேசியிருக்கிறேன்.

சிலர் இந்த வழியில் தாங்களும் சிறக்க அல்லாஹ் வழியமைத்தான்! இதோ ஊற்றுக்கண் வாசகர்களுக்கும் அந்த உண்மைக் கதை! அந்தப் புத்திசாலி குடும்பத்தலைவராய் நாம் ஒவ்வொருவரும் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கவே இருக்கிறது!

நமக்கு வேண்டியதெல்லாம் வாழ்க்கையைப் பார்க்கும் பார்வையில் கொஞ்சம் மாற்றம்!- தெளிவான சிந்தனை!

குறுகிய வட்டத்தை விட்டு கொஞ்சமும் வெளிவராமலே – குடும்பத்துக்குச் ‘சுமை”ஆகிப் போகாமல் தற்சார்புள்ள குடும்பத் தலைவிகளை – பெண்குழந்தைகளை உருவாக்கும் வலுவான திட்டம்!

அவரவர் வசதிப்படி – சூழ்நிலைகளுக் கேற்ப தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்!
ஒரு புதிய முஸ்லிம் சமுதாய வாழ்வியலை உருவாக்கலாம், இன்ஷா அல்லாஹ்!