Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2005
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,927 முறை படிக்கப்பட்டுள்ளது!

தகுதி

“நீங்களும் கட்டாயம் கடைக்கு வரனும்” என்று சொல்லிவிட்டாள் ஹாத்தூன், அவரது மனைவி!

“எப்பப்பார்த்தாலும் ஏதாவது ஒரு சாக்குப்போக்குச் சொல்லிட்டு ஒதுங்கிக்கிறீங்க – கூட வந்து நல்ல நாள் பெரிய நாளுக்கு புள்ளைங்களுக்கு டிரஸ் செலக்ட் பண்ணினா என்ன?” என்று அவள் கேட்டபோது, இந்த முறையும் தப்பிக்க முடியாது என்பதால் ஒப்புக் கொண்டார் ஹலீம்!

அந்த ஊரின் பெரிய மளிகை வியாபாரி அவர்! வர்த்தக சங்கத்திலும் நிர்வாகப் பொறுப்பு வகிப்பவர். எப்போதும் நாலு பொதுக் காரியங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு ‘அந்த அதிகாரியைப் பார்க்கப்போகிறேன்’ என்று அடுத்தவர்களுக்காகவே அலைந்து திரியும் ரகம் – ஆனால் சொந்த வேலைக்கு மனைவி கூப்பிட்டால் “நான் எதுக்கு ஹாத்தூன் – நீ போயி வாங்கிட்டு வந்தா பத்தாதா?” என்று நாசூக்காக நழுவிவிடுவார்.

“நான் வர்ரதப்பத்தி ஒன்றுமில்லே ஹாத்தூன்! ஆனா ரொம்ப நேரத்தை விரயம் செய்யப்படாது பாத்துக்க” என்ற கண்டிஷனோடுதான் ஜவுளிக்கடைக்குப் போனார், பெருநாளைக்கு துணிமணி எடுக்க!

ஹலீம் கடைக்குள் நுழைந்தவுடன் தடபுடல் வரவேற்பு -சில்க் ஹவுஸ் மேனேஜர் கல்லாவைவிட்டு எழுந்து ஓடிவந்து வரவேற்றார்.

“இன்னிக்கி கண்டிப்பா மழை பேயும் பாய்! வராத ஆள் வந்திருக்கீங்க!” என்று சிலேடையில் பேசி வரவேற்றார்.

பணியாளர்கள் புதிய புதிய டிசைன்களை அள்ளிக் குவிக்கத் தொடங்கினார்கள்!

ஹாத்தூனும் பிள்ளைகளும் அந்த துணிக் குவியலுக்குள் தங்கள் விருப்பங்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள்!

‘என்னங்க இது ரக்கீபாவுக்கு நல்லா இருக்குமிலலே? – இது பஷீர் கலருக்குப் பொறுத்தமா இருக்கும், ஏன்?’ என்ற ஹாத்தூனின் கேள்விக்கு சுவாரஸ்யமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இப்படிச் சத்தில்லாத விஷயத்தில் எல்லாம் எப்போதுமே அவருக்கு ஈடுபாடு இருந்ததில்லை.

அது ஒரு விசாலமான கடை – கண்களை கடையைச் சுற்றி சுழற்றினார் – குவியல் குவியலாக ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து ஜவுளிகைளைத் தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.

அவ்வப்போது அவரை அறிந்தவர்கள் அருகில் வந்து “என்ன பாய்! பெருநாளைக்கு ஜவுளி எடுக்க வந்தீகளாக்கும்?” என்று ஒரு அசட்டுக் கேள்வியையும் கேட்டு விடடு நகர்ந்தார்கள்.

அவர்களுக்கு அடுத்தாற்போல் அமர்ந்திருந்த தம்பதியர் மீது அவர் பார்வை பதிந்தது.

அந்தப் பையனுக்கு அப்படி ஒன்றும் அதிக வயதிருக்காது – மிஞ்சிமிஞ்சிப் போனால் 30-32 இருக்கலாம். கறுத்த ஒல்லியான மேனி! தலையில் நாகூர் தொப்பி – வெள்ளையில் கட்டம் போட்ட கைலி – அங்கொன்றும் இங்கொன்றுமாக இடைவெளிவிட்டு முளைத்திருந்த தாடி. தொழுது காய்ப்பேறிய நெற்றி!

அவன் மனைவியின் தோற்றத்திலும் எளிமை தெரிந்தது – நண்டுஞ்சொண்டுமாக நாலைந்து பிள்ளைகள் அவர்களைச் சுற்றி!

இந்தப் பெண்ணின் கண்கள் ஆர்வமிகுதியால் கண்ணாடி அலமாரிக்குள் அலைமேதிக்கொண்டிருந்தன – ‘அதை எடு இதை எடு’ என்று பணியார்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு சேலையாக கையில் வாங்கிப் பார்ப்பாள் – துணியைத் தடவிப் பார்ப்பாள் – தன் உடம்பில் போர்த்துப் பார்ப்பாள் – முகத்தில் நிறைவு தெரியும் – அடுத்து விலையைக் கேட்டவுடன் முகம் சோம்பிப் போகும். மனசில்லாமல் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு விட்டு அடுத்த சேலையை எடுத்துப் பார்த்தாள்!

இதற்கிடையில் பிள்ளைகள் “அம்மா எனக்கு அந்தப் பாவாடை!”, “அம்மா எனக்கு இந்த டவுசர்”, அம்மா எனக்கு அந்தக் கைலி” என்ற தொன தொனப்பு! “கொஞ்சம் சும்மா இருந்து தொலைங்க சனியன்களா எல்லாத்துக்கும் வாங்கத்தானே வந்திருக்கிறோம்” என்று அடக்கிக் கொண்டிருந்தாள் – அவள் குரலில் எரிச்சல் தூக்கலாகத் தெரிந்தது.

நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது!

துணி எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தவனின் முகத்தில் சோர்வு தெரிந்தது – நேரம் செல்லச் செல்ல  அவன் பொறுமை இழக்கத் தொடங்கினான்.

“சீசன் நேரம்மா! இப்படி ஒருத்தர்கிட்டேயே நாள் பூரா அல்லாடிக்கிட்டிருந்தா எப்படியம்மா நாங்க பிஸினஸ் பாக்குறது? சீக்கிரமாய் பாத்து ஒரு முடிவுக்கு வாங்க!” என்றான்!

அவன் அப்படிச் சொன்னது குடும்பத்தலைவனைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும்!

மனைவியிடமிருந்து பொறுப்பை தானே எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றாகத் தெரிவு செய்ய ஆரம்பித்தான் அவன்! அதை ஒருவித தாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி!

அவளது கண்கள் அவன் வாங்கி வைத்திருக்கும் துணிகளில் இல்லாமல், கண்ணாடி அலமாரிக்குள்ளேயே தவம் கிடந்ததை ஹலீம் உணர்ந்து கொண்டார்! பரிதாபமாக இருந்தது அவருக்கு!

அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று மனம் நச்சரிக்க ஆரம்பித்தது.

ஏற்கனவே இந்த ஆண்டுக்கான ஜக்காத்தை பைசா பாக்கியில்லாமல் கணக்கிட்டுக் கொடுத்திருந்தார் – உபரியாகச் செய்வதால் என்ன வந்து விட்டது? எப்படியாவது உதவ  வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தவராக அங்கிருந்து எழுந்தார் ஒரு முடிவோடு!

நேரே கெளண்டருக்குச் சென்று மேனேஜரிடம் கொஞ்ச நேரம் பேசினார் – பேசி விட்டு வந்து தான் முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

மேனேஜர் அங்கிருந்தபடியே “இந்தா சேகரு! அந்தபில் புக்கை எடுத்துக்கிட்டு இங்கே வா” என்றார்!

அந்த குடும்பத்துக்கு துணி எடுத்துப் போட்டுக் கொண்டிருந்த பணியாள் பில் புக்குடன் மேனேஜரை நோக்கிப் போனான் – மேனேஜர் அவரிடம் ஏதோ சொன்னார்.

தலையை அசைத்துவிட்டு வந்த அவன் முகத்தில் உற்சாகக்களை! ஓரக்கண்ணால் ஹலீமாவைப் பார்த்துக் கொண்டே “விலையபத்தி யோசிக்காம நல்ல சாமானாப் பாத்து எடுங்கம்மா!” என்றான் அந்த பெண்ணைப் பார்த்து.

அதைக்கேட்டு அந்த பெண்ணின் கணவன் ஆச்சரியத்தோடு நிமிர்ந்தான்

“நீங்க  என்ன சொல்றீங்க?’

“இல்லபாய்! அம்மாவுக்கு அந்த சாமான்கள்லாம் புடிச்சிருந்தது. விலை அதிகம்கிறதாலே வச்சுட்டாங்க – விலையத்தபத்திப் பரவாயில்லை – அவங்க கேக்குறதைக் கொடுத்துடு – அட்ஜஸ்ட் பண்ணிக்கலாண்டு மேனேஜர் ஐயா சொல்லியிருக்காங்கா – அதான் சொன்னேன்” என்றான்.

அதைக் கேட்ட அவன் முகம் கடுகடுப்பானது!

“அப்படின்னா?’ என்றான் கடுகடுப்பு மாறாமலேயே.

“ஏன்பாய், புரியலையா? நீங்க கொடுக்க முடிஞ்சதைக் கொடுங்க – பாக்கியை நாங்க போட்டுக்கறோம்”

“எங்களுக்கு எதுக்குய்யா நீங்க போட்டுக்கனும்?” என்றான் கொஞ்சம் குரலை உயர்த்தி.பணியாள் குழம்பினான் – “எனக்குத் தெரியாதுபாய்! மேனேஜர் சொன்னதைச் சொல்லிப்புட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்!” என்றான்.

கையில் எடுத்திருந்த துணிகளை பொத்தென்று போட்டு விட்டு மேனேஜரை நோக்கி நடந்தான் அவன்!

அதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிநருந்த ஹலீமுக்கு தர்ம சங்கடமாகி விட்டது. ஒரு வகையான தவிப்பு!

அங்கிருந்தபடியே மேனேஜருக்கு அந்தப் பையனுக்கும் நடந்த உரையாடலை ஊன்றிக் கவனித்தார்!

“என்ன பாய், உங்க சேல்ஸ்மேன் ஏதோசொல்றார்?”

“அதாவது தம்பி நீங்க குடுக்க முடிஞ்சத கொடுங்க அதுக்குமேல வர்ரத எங்களுக்கு தந்திடறதா ஒரு பணக்காரர் சொல்லியிருக்காரு” என்றார்.

“அதுதான்பா, யாரு அவரு? எதுக்காக அவர் எங்களுக்குத் தரணுமுண்டு கேக்கிறேன்!”

மேனேஜரின் முகமும் குழும்புவதை ஹலீம் கண்டு கொண்டார்.

“என்ன தம்பி இது? நோம்புக்குள்ள உதவி ஒத்தாசை ஒருத்தருக்கொருத்தர் செஞ்சுக்கிறது நமக்குள்ள சதாதாரண விஷயந்தானே? இதைப் போயி ஏன் சீரியஸா எடுத்துக்குறீங்க?”

“சாதாரண விஷயமா? எதுங்க சாதாரண விஷயம்? ஜக்காத்தையா சாதாரண விஷயமுண்டு சொல்றீங்க? அது ரொம்ப ரொம்ப பெரிய விஷயமுங்க! அதுக்கு எவ்வளவோ விளக்கங்கள் இருக்கு! இலக்கணங்கள் இருக்கு! அது தெரியுமா உங்களுக்கு?’

மேனேஜர் என்ன சொல்வதென்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்!

ஹலீம் காதுகளைத் தீட்டிக் கொண்டார்!

“ஜக்காத் கொடுக்க வேண்டியவங்க யாரு – எப்படிக் கொடுக்கறதுங்கற முறையெல்லாம் அல்லாஹ்வால் சொல்லப்பட்டிருக்கு! அதேபோல ஜக்காத்தைப் பெறுவதற்கும் தகுதிகள் என்னண்டு விளக்கம் இருக்கு! அதுபடி நடக்காட்டி ஜக்காத்தே நிறைவேறாது – அங்கீகரிக்கப்படாது!

கருணை வேறு – கடமை வேறு! நான் கருணைக்கும் தகுதியில்லாதவன் – ஜக்காத்தென்ற கடமையை அந்தப் பணக்காரர்கிட்ட இருந்து பெறுவதற்கும் தகுதியில்லாதவன் – மலிவான சாமான்களா நான் வாங்குறதுனால நான் ஜக்காதுக்குத் தகுதியுள்ளவண்டு, நீங்க முடிவு கட்டினா அது தவறு! என் வருமானத்துக்குள்ள வாழ வேண்டியது எனக்கு பர்ளு! அது எப்படின்னு எனக்குத் தெரியனும்!

மேற்கொண்டு வர்ர தொகையைத் தர்ரதாச் சொன்ன பணக்காரர்கிட்டச் சொல்லுங்க! அவருக்கு ஆயிரம் ஆயிரமா ஜக்காத் பர்ளா இருக்கலாம்! ஆனால் எனக்கும் ஜக்காத பர்ளா – கட்டாயக் கடமையா இருக்கிற அளவுக்கு சொத்திருக்கு! வருமானமிருக்கு! ஆனா அது ஒரு அற்பத் தொகையாக இருக்கலாம்!

தயவுசெஞ்சு அவசரப்பட்டு இனிமே மனுசனோட தகுதிகளை எடை போடாதீங்க பாய்! இதுல மார்க்கத்தோட விதிமுறைகளும் கொச்சைப்படுத்ப்படக் கூடாது பாருங்க! அதுக்காத்தான் இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டியாயிடுச்சு! மத்தப்படி கெளரவம் பாத்துப் பேசுறேன்டு நினைச்சுடாதீங்க – மார்க்கத்தைத் தெளிவாக எத்திவைக்கிறது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை இல்லீங்களா? கோபிச்சுக்காதீங்க பாய்?” என்று சொல்லி விட்டு நகர்ந்நதான் அவன்!

மேனேஜர் இறுக்கமான முகத்துடன் ஹலீமைப் பார்த்தார்!

ஹலீம் படு ஸீரியசாக துணிகள் செலக்ட் செய்வது போல முகத்தைத் திருப்பிக் கொண்டார்!

நன்றி: முஸ்லிம் முரசு

ஜக்காத் = கட்டாய ஏழைவரி    
 பர்ள் = கட்டாயக் கடமை