Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,674 முறை படிக்கப்பட்டுள்ளது!

உல்லாசப் பயணம்

நசீர் அந்த ஊருக்குள் வந்தபோது பத்து மணி இருக்கும். சின்னம்மாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. அவனைப் பார்க்க அவள் ஊருக்கு வந்திருந்தபோதே, பஸ் ஸ்டாண்டில் இறங்கி எப்படி எப்படி வளைந்து தன் வீட்டுக்கு வர வேண்டும் என்று பாதை விவரம் சொல்லியிருந்தாள்!

கதவைத் தட்டியதும் சின்னத்தாதான் கதவைத் திறந்தார்! அவரை நசீர் அதற்குமுன் நேரில் பார்த்ததில்லை. ஒரு திருமண குரூப் போட்டோவில், ஒரு மூலையில் நின்றவரைச் சுட்டிக்காட்டி ‘இதுதான் உங்க சின்னத்தா; சலீமா சின்னமாவோட மாப்புள்ள’ என்று அவனது அம்மா அடையாளம் காட்டியிருந்தது இப்போது உதவியது!

ஒடிசலான, குள்ளமான உருவம் நீண்ட மூக்கு; சற்று வளைந்த முதுகுப்புறம;் ஒட்டிய கண்கள்! சில நாட்கள் ஷேவ் செய்யாத தாடி மீசை; முகத்தில் கூட ஒருவகையான கடுகடுப்பு!

“யாரைப் பார்க்கனும்?” என்று கேட்டபடியே பாதையை மறைத்துக் கொண்டு நின்றார் அவர்!

அவன் புன்னகைத்தான்! அதற்குக் கூட முறையான பதில் சமிக்ஞை இல்லை அவரிடமிருந்து!

“நான் பூங்குடியில இருந்து வர்றேன், சின்னத்தா! எம்பேரு நசீரு!” என்றான் அவருக்குத் தெளிவுபடுத்தும் முயற்சியில்!

அதன் பின்னரும்கூட அவரது முகத்தில் ஒரு கலகலப்பு -நேசமனப்பான்மையின் பிரதிபலிப்பு தெரியவில்லை.

“வா! என்று ஒற்றை வார்த்தை! நசீருக்கு அது என்வோ போலிருந்தது.

அதற்குள் அரவம் கேட்டு சின்னம்மா ஓடிவந்து விட்டாள்!

“அத்தா நசீரு! வாத்தா! வா! உள்ளே வந்துடு” என்று பரபரத்தாள்! “இந்தாங்க, புள்ள நசீரு எவ்வளவு பெரிய ஆளாய் போச்சு பாத்தியலா?” என்று அவள் பாணியில் அறிமுகம் செய்தாள் கணவனுக்கு!

அதற்கும்கூட “ஹும்..” என்ற ஓர் உறுமல்தான் பதில்! சின்னம்மா நல்ல அழகி! கட்டுக்கோப்பான உடல் ஆகிருதி! கலகலப்பான நடைமுறை ஜனரஞ்சகமான பழக்கவழக்கங்கள்! இந்த நோஞ்சான் சின்னத்தாவுக்கும் அவளுக்கும் உடல் ரீதியாக மட்டுமல்ல, எந்த வகையிலும் ஒற்றுமை இருப்பதாகப்படவில்லை நசீருக்கு.

ஹாலில் உட்கார வைத்துவிட்டு சின்னம்மா உள்ளே ஓடினாள். பரபரப்பாக உபசரித்தாள்! அவனுக்குப் பிடித்த மூக்குளிப் பணியம் – வட்டலப்பம் என்று செய்து கொடுத்தாள்! திண்ணையின் ஒரு ஓரத்தில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு ‘உம்மென்று’ உட்கார்ந்திருந்தார் சின்னத்தா!

“என்ன செய்றே மலேசியாவுல?”

“தொழிலெல்லாம் எப்படியிருக்கு?”

“அத்தா, அம்மா, அண்ணன், தம்பி எல்லாம நல்லாயிருக்காங்களா?” என்று ஏதாவது கேட்கக்கூடாதா?

வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிக்கும் சராசரி நாகரீகம் கூடவா இந்த மனுசனுக்குத் தெரியாது? நசீருக்கு அவரை கட்டோடு பிடிக்கவில்லை!

அப்படியும் அம்மா, தன் தங்கச்சிபுருஷனுக்காக அடிக்கடி சாமான்கள் வாங்கியனுப்பத் தவறமாட்டாள்! கிராமத்தில் உள்ள தன் ஒரே தங்கச்சிக்கும் அம்மாவுக்கும் பயணம் சொல்லிக்கொள்ள வரும் உறவினர்களிடம் ஏதாவது கட்டி அனுப்பிவைத்து விடுவாள்!

“பாவம், சலீமா! அவளோட மாப்புள உள்ளுர் சபுராளி! அதுகளுக்கு வேற யார் கொடுத்து உதவுறது?” என்று சொல்வாள்.

சபுரா – நசீரின் அம்மா முப்பது வருஷங்களாக மலேசியாவில் வாழ்ந்தும் மனசு பூராவையும் இந்திக் கிராமத்திலேயே வைத்திருக்கும் ரகம். அந்த முன்னேறிய நாட்டின் நாகரிகம் எதுவும் அவளைத் தொற்றிக்கொள்ளவில்லை. அவள் ஒரு பூங்குடிப் பெண்ணாகவே இருந்தாள். மலாய் மொழிகூட இந்த முப்பதாண்டுகளில் அவளுக்குச் சரியாகத் தெரியாது! பிள்ளைகள் வேண்டுமென்றே அவளைக் கிண்டலடிப்பதுண்டு அதுபற்றி!

ஊரிலிருந்து உம்மம்மா, ஓயாமல் எழுதிக் கொண்டிருந்ததால் நசீரை ஊருக்கு அனுப்பி வைத்தார்- சுல்தான் நசீரின் அத்தா! நசீருக்கு இது முதல் இந்திய விஜயம்! கிரமாத்தில் உம்மம்மா, சின்னம்மாவைப் பார்த்து விட்டு அப்படியே டெல்லி, அஜ்மீர், ஆக்ரா, ஊட்டி, குற்றாலம், கொடைக்கானல் என்று ஒரு டூர் போய்விட்டு, மலேசியா திரும்பும் ஒரு மாத பயணத்திட்டத்தில் வந்திருந்தான் அந்த இருபத்திரண்டு வயது இளைஞன்!

நசீருக்கு சின்னம்மாவின் வீட்டுச்சூழல் பிடிக்கவில்லை. சின்னவீடு. பழைய மோஸ்தரில் முற்றம் வைத்து கட்டப்பட்ட வீடு. சிதிலமடைந்த சுவர்கள். சின்னத்தாவின் பூர்விக வீடாய் இருக்க வேண்டும்!

வறுமை ஒன்றும் பாவமானதல்ல. நசீரின் அத்தாவே கதை கதையா தான் பட்ட கஷ்டங்களைச் சொல்லியிருக்கிறார்.  அந்த செழிப்பான மலேசியாவிலும் கூட அவனுக்கு நினைவு தெரியும் வரை குடும்பத்தில் வறுமைத் தாண்டவம் தான்! ஒரு ஹோட்டலில் சம்பளத்துக்கு வேலை பார்த்து குடும்பத்தை ஓட்டியவர் தான் அவன் அத்தா! ஆனாலும் குடும்பத்தல் கலகலப்பிருக்கும்! கம்பீரம் இருக்கும்! அத்தாவும் அம்மாவம் முன் மாதிரித் தம்பதிக்ள்! அவ்வளவு அன்யோன்யம் பரஸ்பர புரிந்துணர்வு!

ஆனால்… இங்கு?

திண்ணையில் உட்கார்ந்திருந்த சின்னத்தா அமீர், ஒரு மரியாதைக்குக்கூட சொலிக்கொள்ளாமல் விருட்டென்று எழுந்து உள்ளே சென்றார்!

சின்னம்மா அடுப்படியில் வேலையாய் இருந்தாள்! திடீரென்று கொல்லைப்புறத்தில் குழந்தை ‘வீல்’ என்று சத்தம் கேட்டது! அதைத் தொடர்ந்து அமீரின் ஏச்சு! “சனியன்! சனியன்! ளே சலீமா! இந்த மூதேவியக்கட்டிப் போடு! உருண்டு வருது கழுதை!” என்று திட்டி, காதைப்பிடித்து தரதரவென இழுத்து வந்து சின்னம்மாவின் முன் நிறுத்தினார், மூன்று வயதிருக்கும் அந்தச் சிறுமியை!

சின்னம்மாவின் முகத்தில் ஒரு சலனமுமில்லை! பிள்ளையைத் தூக்கி அணைத்தாள். முகத்தைத் துடைத்தாள். அன்பாக ஓரிரு வார்த்தைகள் சொன்னாள். “அத்தாவுக்கு செரமங் கொடுக்க்கூடாது. பேசாம திண்ணையில் உக்காந்திருக்கனும்! இந்தபாரு, நம்ம அண்ணன் வந்திருக்கு ஊர்ல இருந்து! நேத்து சாக்லெட் ரொட்டியெல்லாம் கொண்டாந்து தந்தேன்ல – அண்ணன் உனக்கு புதுச்சட்டையிலாம் கொண்டாந்திருக்கு! அப்புறமாப் போடலாம். அம்மா சோறாக்கிட்டு வர்ற வரைக்கும் அமைதியா உட்கார்ந்திருக்கனும், என்ன?” என்று அவள் கையில ஓரு முறுக்கைக் கொடுத்தாள்!

தலையைஆட்டிக்கொண்டே முறுக்கைக் கடித்தது குழந்தை. ஓரக்கண்ணால் அந்தத் திண்ணையின் மறுகோடியில் இருந்த நசீரையும் அன்போடு,  அதே நேரத்தில் ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

குழந்தையின் மீதுகூட சராசரி அன்பைக் காட்டத் தெரியாத அந்த மூர்க்க குணச் சின்னத்தாவின் மீது நசீருக்கு கடுங்கோபம்!

‘சே? என்ன மனுஷர் இவர்?’

தனக்குள் திட்டிக்கொண்டான்! குளித்துவிட்டு வெறும் டவளை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்த அமீர் ஈரக்கைலியை படீர் படீர் என்று உதறினார். அதிலிருந்து நீர்த்துளிகள் உள் திண்ணையில் இருந்த நசீரின் மீது கூடத் தெறித்தது. முற்றத்துக் கொடியில் அதைக் காயப் போட்டார்! கொடியின் மற்றொரு கோடியில் இருந்த பனியனை எடுத்து உதறினார்! பிறகு அதை உற்றுப் பார்த்தார்! முகம் ஜிவ்வென்று சிவந்தது!

“ளே சலீமா! இந்தப் பனியனைப்பாரு! காக்காக் பீ! துப்புக்கெட்டவளே! ஒரு சின்ன விசயத்தைக்கூட ஒழுங்காகச் செய்யத் தெரியல!’ என்று ஏகமாய்க் கத்தினார்!

அரக்கப்பரக்க ஓடிவந்த சலீமா, “கொடியில் கிடந்தப்ப காக்கா அசிங்கம் பண்ணிடுச்சு போல .. உங்களுக்கு வேற பனியன் தாரேன்!” என்று ஓடிப்போய் எடுத்து வந்து கொடுத்தாள்! அதற்குள் அவர் குதிகுதி என்று குதித்தார். கொச்சையாக பேசினார்.

சின்னம்மாவின் முகம் கறுத்ததை – சோகத்தில் துவண்டதை நசீர் பார்த்தான். அவன் மனம் ரொம்பவே வலித்தது.

“சே! இங்கிதமற்ற ஜடம்! புதியவர்களின் முன் மனைவியை அவமரியாதை செய்யும் இவரெல்லாம் ஒரு மனிதரா? நசீருக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிவிட வேண்டும் போலத் தோன்றியது!

இன்னும் கொஞ்சநேரம் அங்கிருந்தாலே சின்னத்தாவிடம் சண்டைபோட வேண்டி வந்துவிடமளவிற்கு அவன் உணர்வுகள் சூடேறியிருந்தன. பொறுமையின்றி நசீர் தவித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில், “நான் பள்ளிக்குப் போறேன்” என்று பொதுவாக ஒரு வார்த்ததை சொல்லி விட்டு வெளியேறினார் சின்னத்தா அமீர்!

நசீர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டான்.

அவர் வெளியே சென்ற பிறகு அங்க வந்து அவனை சமாதானப்படுத்தி, இறுக்கத்தைக் குறைக்க முயன்றாள் சலீமா!

நசீர் தன் மனதில் உள்ளதைக் கொட்டினான்! “எப்படிச் சின்னம்மா இவரோட உன்னால் வாழ முடியுது? ஆளே ரொம்ப வித்தியாசமா இருக்காரே?” என்றான் ஆதங்கத்துடன்!

வறட்சியாய் ஒரு புன்னகை! அவனுக்கு, அவள் மீது அதிக இரக்கம் சுரந்தது! அதற்கு மேலும் சலனப்படுத்தினால் அவள் மேலும் புண்படுவாள் என்று தெரிந்தும் அடக்கிக் கொள்ள முடியவில்லை. மேலும் மேலும் அவன் அவரைக் குறைசொன்னான்.

“நீ நெனைக்கிற மாதிரி இல்லேத்தா உங்க சின்னத்தா! பச்சைக் குழந்தை மாதிரி அவங்க!” என்று முத்தாய்ப்பாய்ச் சொன்னாள்!

“ஜும்ஆவுக்குப் போய்விட்டு நேரா ஊட்டுக்கு வந்துடு” என்று சொல்லி அனுப்பி வைத்தாள்.

0 0 0 0

ஜும்ஆ முடிந்ததும் அனைவரும் பள்ளிவாசலின் வெளித்தளத்தில் உட்கார்ந்தார்க்ள். ஊர்க் கூட்டமாம்!

ஊரில் ஜமாத் கூட்டங்கள் பற்றி பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான் நசீர். தானும உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை.  ஒரு ஓரமாக உட்கார்ந்தான்!

சின்னத்தாவை அவனது கண்கள் தேடின! ஆளைக்காணோம்! அவர் எங்கே இங்கே இருக்கப் போகிறார்?

சின்னம்மாவிடம் சண்டைபோட இன்னேரம் வீட்டுக்குப் போயிருப்பார் என்று அவன் நினைத்துக் கொண்ட போது “டேய் அமீரு! சீக்கிரமா வந்து தொலையேண்டா!” என்று ஊர்த்தலைவர் கத்தினார்! அப்போது பவ்யமாக, ஒரு சின்ன எழுத்து மேஜை, தடிமனான லெட்ஜர் புக்குகள், ரப்பர் ஸ்டாம்ப் வகையறாக்களைச் சுமந்து வந்து தலைவர் முன் வைத்துவிட்டு, சற்று விலகி, தூணருகில் நின்றார் அமீர்!

நசீருக்கு தூக்கிவாரிப் போட்டது!

அந்த ஜமாஅத்தில் பியூன் – எடுபிடி ஊழியர் அமீர் என்பது புரிந்தது!

எல்லோரும் உட்கார்ந்திருக்க, அவர் மட்டும் நின்று கொண்டு, கண்டவர்கள் எல்லாம் ஒருமையில் அழைக்க, அவ்வளவு கேள்விகளுக்கும் அடக்கமாய், பணிவாய், அன்பாய் பதில் சொல்லிக் கொண்டு…

நசீருக்கு அவரைப்பார்க்கவே பரிதாமாக இருந்தது. கூட்டம் முடிந்து விடுவிடுவென்று விட்டுக்கு வந்தான்! அளவுகடந்த சோகம் அவனிடத்தில்!

“என்னத்தா, நீயும் கூட்டத்துல இருந்து வேடிக்க பாத்தியா? நான் தான் நீ மொதல்லே வந்துருன்னு சொல்லிவிட்டேன்ல?” என்றாள் சின்னம்மா!

அவன் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான்!

எடுப்பார் கைப்பிள்ளை போல எல்லோருக்கும் பணிந்து கிடக்க வேண்டிய பணி செய்யும் தன் கணவனின் இயல்பான கோப உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் ஆகி, சுமைதாங்கியாய் நிற்கும் தன் சின்னம்மாவை பெருமிதத்தோடு பார்த்தான் நசீர்! இவள்தான் எவ்வளவு உயர்ந்தவள்!

மூன்று மணிவாக்கில், வீட்டுக்குத் திரும்பிய அமீர் மீண்டும் சிடுசிடுத்தபோது நசீருக்கு ஆத்திரம் வரவிலிலை! அவனது உல்லாசப் பயணத்துக்காக அவனது அத்தா இருபதாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டிருந்தார். அவன் சின்னம்மாவிடம் சொன்னான்: “சின்னம்மா! இன்னும் ரெண்டு நாள்ல பயணம் பொறப்படுறேன். பயணம் அனுப்ப பூங்குடிக்கு வாங்க. சின்னத்தாவையும் கூட்டிக்கிட்டு வாங்க”

“நான் வர்ரேன்த்தா, சின்னத்தாவால வரமுடியாது. அதான் கூட்டத்துலே பாத்திருப்பேல்ல?” என்றாள்.

“பார்த்தேன்! ஆனா இனிமே அந்தத்தொழில் சின்னத்தாவுக்கு வேணாம் சின்னம்மா! ஊர்லேயே ஒரு கடை கண்ணிய வைக்கச் சொல்லுங்க. அல்லாஹ் நம்மோட ரிஸ்கை நிச்சயமாத் தருவான். மூலதனத்தைப் பத்திய கவல உங்களுக்கு வேணாம். நான் தர்ரேன்!”

இளவயதிலேயே அறிவு முதிர்ச்சியோடு பேசிய தன் அக்காமகனை கண்களில் நீர் பனிக்கப் பார்த்தாள் சலீமா! பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த நசீரின் மனதில் ஊட்டி, காஷ்மீர் என்று ஒரு கோடி ஊருக்கு உல்லாசப்பயணம் சென்று திரும்பிய நிறைவும் குளுமையும் இருந்தது!

நன்றி: சமரசம்

ரிஸ்க் = வருமானம்