Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

January 2011
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,633 முறை படிக்கப்பட்டுள்ளது!

இருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்

மத்திய கிழக்கு நாடுகளில் மது அருந்துவது பொதுவாகவே விருப்பத்துக்குரிய ஒன்றல்ல. பல நாடுகள் மது பாவனைக்குத் தடை விதித்துள்ளன. அதே சமயம் வேறு சில நாடுகளில் அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் குடிப் பிரியர்கள் பல வழிகளைக் கையாண்டு தமக்கு வேண்டிய போதையை பெற்றுக் கொள்கிறார்கள். இதன் பொருட்டு ஆபத்தான வழிகளையும் இவர்கள் பின்பற்றத் தவறுவதில்லை.

மனம் போதைக்கு அடிமையானதும் அதை எப்படியாவது பெற்றுக்கொள்ள உடலைத் தூண்டும். விளையாட்டாக ஆரம்பிக்கும் குடிப் பழக்கம் அல்லது போதைப் பொருள் பாவனை பின்னர் வழமையாகி வியாதியாகி விடுகிறது. சவூதியில் போதைப் பாவனையாளர்கள் சிக்கினால் கடுந் தண்டனை கிடைக்கும். எனினும் ரிஸ்க் எடுத்துக் கொண்டு குடிக்கிறார்கள் என்றால், மனிதனை இந்தப் பழக்கம் எவ்வளவு தூரம் பாதித்து விடுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு இந்த உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். இது சென்னையில் நடந்தது. நன்கு படித்த விவரம் தெரிந்த ஒருவர் எப்படி இருமல் மருந்து தரும் போதைக்கு அடிமையானார் என்பதை இச் சம்பவம் விவரிக்கிறது. இதைப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அளவாக இருந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அனாவசியமாக சந்திக்க நேராது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல உதாரணம். எதையுமே அளவுக்கு மீறிச் செய்யும் போது அது போதையாகி விடுகிறது. அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாக இனிப்பு சாப்பிடுதல், புகைத்தல், தூஷண வார்த்தைகளைப் பேசுதல் எல்லாமே ஒரு வகையில் போதைத் தனம் தான்.

மத்திய சென்னையில் பெரிய அளவில் மருந்துக் கடை வியாபாரம் செய்து வருகிறார் செல்வம். வயது 28. திருமணமாகி 2 வருடங்களாகின்றன. குடும்ப வறுமையின் காரணமாக ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு மருந்துக் கடையில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனாக வேலைக்குச் சேர்ந்த செல்வம். கடின உழைப்பாலும், பொறுப்புணர்ச்சியாலும் படிப்படியாக முன்னேறி தனியே கடை வைக்கிற அளவுக்கு மேலே வந்தவர். ராத்திரி, பகலாக உழைத்து இரண்டே வருடங்களில் பத்து கம்ப்யூட்டர்கள், நான்கு ஃபார்மசிஸ்ட், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் என பெரிய அளவில் தொழிலை விரிவுபடுத்தி, கார், சொந்த வீடு என அபார வளர்ச்சி கண்டவர்.

இரண்டு வருடங்களுக்கு முன் இருமலுக்காக தானாகவே பிரபல மருந்தை வாங்கி இரண்டு வேளை, ஒரு மூடியளவுக்கு 3 நாட்கள் எடுத்ததில் இருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. மீண்டும் இருமல் வர தானாகவே மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவர் சொல்லியும் அவர் கொடுத்த மருந்தில் இருமல் சரியாகவில்லை என மீண்டும் அதே மருந்தைக் குடித்திருக்கிறார். அது ஒரு மாதிரியாக தூக்கமும் இல்லாத, மயக்கமும் இல்லாத மந்த நிலையைக் கொடுக்கவே இருமல் இல்லாத நேரங்களிலும்கூடக் குடிக்க ஆரம்பித்தார்.

வேலையில், குடும்பத்தில் சின்ன டென்ஷன் எனும் போதும் அந்த மருந்தைக் குடித்தால் டென்ஷனிலிருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தார். ஒரு கட்டத்தில் சும்மாவே கால் போத்தல் அரை போத்தலாகி என ஒரே மடக்கில் குடிக்கப் பழகினார். ஒரு வருட முடிவில் ஒரு நாளைக்கு பத்து போத்தல்களானது.

ஞாபக மறதி, எரிச்சல், எதிலும் கவனமில்மை, உடம்பு வலி, உடல் அசதி என கொஞ்சம், கொஞ்சமாக உடம்பைப் பலவீனப்படுத்த, கடையில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்த்தார். வீட்டுக்குப் போனாலும் கேட்பார்களே என காரை எடுத்துக்கொண்டு, தனியே ஆள் நடமாட்டம் அதிகமில்லாத இடங்களில் போய் அந்த இருமல் மருந்தைக் குடித்துவிட்டு, காரிலேயே படுத்திருப்பார். இப்படியே மாதங்கள் ஓடின.

இருமல் மருந்தின் விளைவுதான் எல்லாம் என்பது அவருக்கே தெரிந்தது. எவ்வளவோ முயற்சி செய்து அதிக பட்சம் 3 நாட்களுக்கு நிறுத்தினால், உடல், மனதில் ஏற்படும் உபாதைகள் தாங்க முடியாமல் மீண்டும் ஆரம்பித்து விடுவார். இந்நிலையில் அரைகுறை ஆசாமி ஒருவரின் அறிவுரையின் பேரில் வலி நிவாரணி ஊசி போட்டுக் கொண்டால், இதிலிருந்து வெளியே வந்துவிடலாம் என அதற்கும் பழகினார்.

எந்த வாடையும் வராது என்பதாலும், பொறுப்பானவர் என்பதாலும் குடும்பதாருக்கு ஒன்றரை வருடங்களுக்கு செல்வத்தின் மேல் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

வேலையாட்கள் பணத்தை சுருட்ட ஆரம்பித்து, சப்ளையர்களுக்கு சரியாக பணம் கொடுக்காமல் பல லட்சங்கள் நஷ்டமாகி, கார் ஆர்.சி. புத்தகம், வீட்டுப் பத்திரம் என வைத்துக் கடன் வாங்கியும் திணறியபோதுதான், வீட்டுக்கு விஷயம் தெரிந்தது.

செல்வம் எடுத்துக் கொண்ட இருமல் மருந்து, வலி நிவாரணிக்கான ஊசி இரண்டுமே நார்காட்டிக்ஸ் எனப்படும் மருந்து வகையைச் சேர்ந்தவை. ஹெராயின் எனப்படும் பிரவுன் சுகர் போன்ற போதை மருந்து வகையறாக்கள்தான் போதை மருந்துகள் என அழைக்கப்படும். இவை மருந்தாக, கொஞ்சமாக இருமல் மருந்து மற்றும் வலி நிவாரணிகளில் சேர்க்கப்படும். அளவுக்கு மீறும் போது அமிர்தமே நஞ்சாகி எமனாகிறது. அப்படித்தான் ஆனது செல்வத்துக்கு.

இந்த வகையான போதை அடிமைத்தனம், சாராயம், கஞ்சா வகையறாக்களைவிட மிக ஆபத்தானது. கடுமையான பின் விளைவுகளை உண்டாக்கக் கூடியது.

விஷயம் இறுதியில் வீட்டாருக்குத் தெரிய வரவே அவர்கள் அவரை மனோ வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரது நிலைமையை நன்கு பரிசோதனை செய்த மருத்துவர் போதை மறுவாழ்வு மையத்தில் மூன்று மாத காலம் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தார்.

தான் மூன்று மாதங்கள் வெளியே இல்லாவிட்டால், இந்த பூமியே சுற்றாது என்கிற அளவுக்கு விவாதம் செய்த செல்வம், ஒரு வழியாக ஒரு வாரத்துக்கு ஒப்புக் கொண்டார். ஒரு வார முடிவில் சில மருந்துகள் போய் மூளையில் வேலை செய்ய மீண்டும் 3 மாதங்களுக்கு உள் நோயாளி சிகிச்சையின் முக்கியத்துவம் உணர்ந்து அங்கே இருக்க சம்மதித்தார்.

சிகிச்சை முடிந்து வெளியே வந்ததும், இருப்பதை எல்லாம் விற்றுக் கடனை அடைத்துவிட்டு, மீண்டும் சின்ன அளவில் மருந்துக் கடை ஆரம்பித்திருக்கிறார். மாதம் ஒரு முறை மனைவியுடன் உளவள சிகிச்சைக்காகச் செல்கிறார். இன்னும் இரண்டு வருடங்களில் விட்டதைப் பிடித்துப் பல மடங்கு உயரப் போவதாக உறுதியளித்திருக்கிறார்.