Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,707 முறை படிக்கப்பட்டுள்ளது!

ப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்து சென்றதைப் பற்றி நாம் பெருமையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க மக்கள் அனைவரும் ஒரு தமிழரைப் பற்றி வியப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம்தானே!

அந்தத் தமிழர் பெயர் கே.ஆர். ஸ்ரீதர். இவர், சாதாரண தமிழர் அல்ல.. மின்சாரத் தமிழர். சற்று பீடிகையாக இருந்தாலும் மேலே படியுங்கள்… நீங்களும் பாராட்டத் தொடங்கி விடுவீர்கள்…

உலகம் முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை என்பது தவிர்க்க முடியாத நிலையாகிவிட்டதால், மின் உற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என அனைத்து நாட்டு வல்லுநர்களும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருவர் தனது வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வீட்டில் வைத்தே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற அறிவித்ததோடு,செயலிலும் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் கே.ஆர். ஸ்ரீதர். ஆச்சரியம்தானே?

1960-ம் ஆண்டு பிறந்த கே.ஆர். ஸ்ரீதர், திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த 1982-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியல் பயின்றார். தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் அணு பொறியியல் பட்டம் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்ற கே.ஆர். ஸ்ரீதருக்கு, உடனடியாக வேலையைக் கொடுத்தது நாசா நிறுவனம். செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஆராய்ச்சிப் பணியில் தனது சகாக்களுடன் ஈடுபட்டு வந்தார் கே.ஆர். ஸ்ரீதர்.

ஆனால், இந்த ஆராய்ச்சியை அமெரிக்க அரசு திடீரென நிறுத்தியதால் சற்று அதிர்ச்சியடைந்த கே.ஆர். ஸ்ரீதர், தற்செயலாக ஒரு பணியில் ஈடுபட்டார். அதுவே அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஏதோ ஒரு சக்தியில் இருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக, ஆக்ஸிஜனை வைத்து அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியைச் சேர்த்தால் என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஸ்ரீதர்.

என்ன ஆச்சரியம்! ஆக்ஸிஜனும், இயற்கை எரிவாயுவும் சேரும்போது மின்சாரம் உருவாவதை உணர்ந்த ஸ்ரீதர், மேற்கொண்டு சில மாற்றங்களைச் செய்து உருவாக்கியதுதான் “ப்ளூம் பாக்ஸ்’ என்ற மின்சார உற்பத்திப் பெட்டி.

தனது தொழில்நுட்பத்துக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்ரீதர், அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜான் டூயரை நாடினார்.

இந்த ஜான் டூயர் சாதாரண ஆள் கிடையாது. நெட்ஸ் கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தொடக்கத்தில் முதலீடு செய்தவர் என்ற பெருமைக்கு உரியவர்.

ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஒப்புக்கொண்ட ஜான் டூயர் செய்த முதலீடு 100 மில்லியன் டாலர். இந்திய மதிப்புப்படி, ஏறத்தாழ |490 கோடி. ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்பதால் இந்த முதலீடை ஜான் டூயர் செய்தார்.

குறிப்பாக, ஸ்ரீதரின் கண்டுபிடிப்பான “ப்ளூம் பாக்ஸ்’ மூலம் மின்சாரம் தயாரிக்கும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத அளவுக்கு தொழில்நுட்பம் இருந்ததால், பொதுமக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதிகத் தொகையை முதலீடு செய்ததாக ஜான் டூயர் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்தியைப் பொருத்தவரை நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை மின் இழப்புதான். உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து பயனாளிகளுக்குச் சென்றடைவது வரை ஏறத்தாழ 30 முதல் 45 சதம் வரை மின்சாரம் இழப்பு ஏற்படுவதாகத் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்ரீதர் கண்டுபிடித்துள்ள “ப்ளூம் பாக்ஸில்’ மின் இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றே கூறலாம்.

“இந்தப் பெட்டியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்த தொலைவிலேயே பயன்படுத்துவதால் மின் இழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

ஏறத்தாழ 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள “ப்ளூம் பாக்ஸ்’ என்ற மின்சார உற்பத்தி இயந்திரம். இந்தப் பெட்டிக்குள் ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் சில நிமிஷங்களில் நமக்குத் தேவையான மின்சாரம் தயாராகிவிடும்.

இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச் சாண வாயுவையோ அல்லது சூரிய ஒளியைச் செலுத்தியோ மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளலாம். மேலும், இந்தப் பெட்டியை கட்டடத்துக்குள் அல்லது வெட்டவெளியில் கூட வைத்துக் கொள்ளலாம்.

ஒரு “ப்ளூம் பாக்ஸ்’ இருந்தால் அமெரிக்காவில் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரமும் இந்தியாவில் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரமும் கிடைத்துவிடும்’ என்கிறார் ஸ்ரீதர்.

தற்போது, அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூகுள் நிறுவனம் “ப்ளூம் பாக்ஸ்’ மூலம் 400 கிலோவாட் மின்சாரத்தை தயாரித்து வருகிறது.

வால்மார்ட், பெட் எக்ஸ், இபே, கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் போன்ற பல நிறுவனங்களும் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.

பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தி வரும் “ப்ளூம் பாக்ஸ்’ சாதாரண மக்கள் பயன்படுத்த இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகலாம். ஆனால், விலை ஏறத்தாழ 3,000 டாலர் (இந்திய மதிப்பின்படி 1.40 லட்சம்) வரை இருக்கும் என்றே கூறப்படுகிறது.

வீட்டுக்கு வீடு மின்சார உற்பத்திப் பெட்டியைக் காணும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.

நன்றி: தினமணி