Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

February 2011
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,392 முறை படிக்கப்பட்டுள்ளது!

மரணக்காடு

2002 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொள்ள முதலிடமாகவும் இன்று இரண்டாவது இடமாகவும் திகழ்கிறது ஒரு மரணக்காடு. ஜப்பான் நாட்டில் உள்ள ஃபுஜி மலையின் (MOUNT FUJI) அடிவாரத்தில் அமைந்துள்ள இக்காட்டின் பெயர் ’அஓகிகாஹாரா’ (AOKIGAHARA). படத்தில் கீழ்ப்பகுதியில் இடதுபுறம் அமைந்துள்ளது.

கற்கள் மற்றும் பனிப்பாறைகள் நிறைந்துள்ள இக்காட்டின் சில பகுதிகள் சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. மத்தியப் பகுதியை உயர்ந்த மரங்கள் சூழ்ந்திருப்பதாலும் வன விலங்குகளின் நடமாட்டம் இல்லாததாலும் இக்காடு திகிலூட்டும் அளவுக்கு மயான அமைதியாக இருக்குமாம். இக்காடு எரிமலை கற்கள் நிறைந்திருக்குமாம். அதோடு இக்காட்டினுள் நுழைபவர்கள் காட்டிலேயே வழிதெரியாமல் சிக்கி கொள்ள அதிக வாய்ப்பும் உள்ளதாம். இக்காட்டில் தற்கொலை செய்துகொண்ட பிரேதங்களைத் தேடும் பணியில் ஈடுபடுபவர்கள், வந்து சென்ற இடங்களில் சில தடயங்களை எப்போதும் விட்டுச்செல்வர். அத்தடயங்கள் சுற்றுப்பயணிகள் உள்ளே செல்லவும் காட்டினுள் சிக்கியவர்கள் திரும்புவதற்கும் துணையாக உள்ளன. ஆயினும் சில கிலோமீட்டருக்குப் அப்பால் இக்காடு அதன் இயற்கை தன்மையிலேயே; மனித வருகையின் தடங்கள் குறைந்த அளவிலேயே இருக்குமாம்.


1950 ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட 500 பேர் தங்களது உயிரை அக்காட்டிலேயே துறந்துள்ளனர். அதில் சிலர் வழிதெரியாமல் சிக்கியவர்; பலர் தற்கொலை செய்துகொண்டவர். 1970 தொடங்கி ஆண்டுக்கொருமுறை காவல்துறை படையினரும் சில தன்னார்வளர்களும் பிணம் தேடச் செல்கிறார்கள். அதன் வாயிலாக கிடைத்த புள்ளிவிவரம்படி 1998 இல் 73 உடல்கள், 2002இல் 78 உடல்கள் என இருந்த எண்ணிக்கை 2003இல் 100 என உயர்ந்துள்ளது. அதன் பின்னர், இவ்விடம் தற்கொலைக்காகப் புகழ்ப்பெறுவதைத் தவிர்க்கவும் தற்கொலைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிண எண்ணிக்கையை வெளியிடுவதில்லை.


இக்காட்டில் நிகழ்ந்த தற்கொலைகளை மையமாகக் கொண்டு தி ஃபோரெஸ்ட் (the forest) என்ற ஆங்கிலப் படமும் JYUKAI என்ற ஜப்பானியப் படமும் வெளிவந்துள்ளன. இக்காட்டை ஜுகாய் என்றும் அழைக்கின்றனர். கரு மரங்கள் கொண்ட கடல் என்பது அதன் பொருளாகும். இக்காடைப் பற்றி விவரங்கள் சேகரிக்கையில் பல புதிய செய்திகள் கிடைத்தன. அவற்றனைத்தையும் இங்கே சொல்ல இயலாது. ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் நடக்கின்றன. வேலையின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தூக்கு, தொடர்வண்டி முன் குதித்தல், உயரமான பகுதியிலிருந்து குதித்தல், மாத்திரைகளை உட்கொள்ளுதல் மூலம் இவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். தற்கொலை செய்துகொள்ளும் நுணுக்கங்களைப் பற்றி WATARU TSURUMI என்பவர் ‘the complete manual of suicide’ என்று புத்தகமே வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் தற்கொலைக்கான வழிவகைகள் இல்லை. தற்கொலை செய்பவர் கையாளும் உத்திகளினால் அவருக்கு ஏற்படும் வலி, உயிர் மாய்ந்த பின்னர் உள்ள அவ்வுடலின் நிலை போன்ற செய்திகளைத் தொகுத்துள்ளார்.

சரி நாம் காட்டுக்கு வருவோம். அஓகிகாஹாரா காட்டில் தூக்கு மாட்டியும் உயரத்திலிருந்து குதித்தும் உயிர் துறக்கின்றனர். இப்போது அக்காட்டின் நுழைவாயில் அருகிலேயே பிணவறையும் உண்டு. இதில் பிணங்களை காவல் காக்கவும் ஆள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவலுக்கு ஆள் இல்லையெனில் அப்பிணவறையிலிருந்து கதறல் சத்தம் கேட்டுகொண்டே இருப்பதாகவும் பிணங்கள் நகர்வதாகவும் அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள்.

இக்காட்டில் தற்கொலை புரிய வருபவர்களின் மனதை மாற்றுவதற்காக சில நம்பிக்கை வாசகங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் CNN கூற்றுப்படி 2009 வரை 2645 தற்கொலைகள் இக்காட்டில் நடந்துள்ளன. கோல்டன் கேட் பாலத்திற்கு அடுத்து உலகிலேயே அதிகமான தற்கொலை நடக்குமிடமாக (இரண்டாவது நிலையில்) இக்காடு திகழ்கிறது.

பொறுமையாகப் படித்தவர்களுக்கு மேலுமொரு தகவல்…அதிகமான தற்கொலை நிகழும் இடங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தைத் தவிர 4,5,6,7 ஆம் இடம் வரை அனைத்துமே பாலங்கள்தான்.

திலகுமரன் – மனிதம்