Categories

Archives

A sample text widget

Etiam pulvinar consectetur dolor sed malesuada. Ut convallis euismod dolor nec pretium. Nunc ut tristique massa.

Nam sodales mi vitae dolor ullamcorper et vulputate enim accumsan. Morbi orci magna, tincidunt vitae molestie nec, molestie at mi. Nulla nulla lorem, suscipit in posuere in, interdum non magna.

இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 8,834 முறை படிக்கப்பட்டுள்ளது!

உணவுப் பொருட்களை பாதுகாக்க சில எளிய வழிகள்

போன மாசம்தான் வாங்கின பருப்பு… அதுக்குள்ள வண்டு விழுந்திடுச்சு…”,

”புளி கெட்டுப் போச்சு… இனி அடுத்த சீஸனுக்குத்தான் புதுப்புளி கிடைக்கும்…”

– சமையலறைகளில் அடிக்கடி கேட்கும் புலம்பல்கள் இவை. வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி, அவற்றைப் பராமரிக்காமல் விட்டால்… இந்தப் புலம்பல்கள்தான் மிஞ்சும்.

”பண்டைய தமிழர்கள், உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் வல்லவர்கள். பரண், குலுமை, கருவாடு, உப்புக்கண்டம், ஊறுகாய் என்று அவர்களின் பாரம்பரியம் எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மலையேறி வருகின்றன. இருந்தாலும், இன்றைய அவசர சூழலில் உணவுப் பொருட்களை சேமிக்க, பாதுகாக்க சில எளிய வழிகள் உள்ளன. பெரிய பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில், ஆஃபர்களில் பொருட்கள் வாங்கிக் குவிப்பதில் காட்டும் ஆர்வத்தோடு, கொஞ்சம் மெனக்கெடலும் சேர்ந்தால் பணத்தையும் பொருட்களையும் வீணாக்காமல் சேமிக்கலாம்!”

– இப்படி பெண்களுக்கான அவசிய அடுக்களை ஆலோசனைகள் வழங்க முன்வந்தார், நாகர்கோவிலில் ‘ஆர்கானிக் பசுமையகம்’ என்ற இயற்கை விளைபொருள் அங்காடியை நடத்தி வரும் சாகுல் ஹமீது.

”அரிசியில் இருந்து ஆரம்பிப்போம். பொதுவாக அரிசியை மண்டிகளில் இருந்து மொத்தமாக சாக்குகளாகத் தூக்குவதுதான் பெரும்பாலான வீடுகளில் வழக்கம். ஒரு பத்து நாள் வெளியூர் சென்று வந்து பார்த்தால், சின்ன சின்னதாகப் பூச்சிகள் வந்திருக்கும். இதைத் தடுக்க, கடையில் இருந்து சாக்கு அல்லது பையில் வாங்கி வரும் அரிசியை, உடனடியாக அண்டா, தூக்குவாளி என்று பெரிய எவர்சில்வர் பாத்திரத்துக்கோ, பிளாஸ்டிக் டப்பாவுக்கோ மாற்றி மூடி வைத்துவிட வேண்டும். அரிசியின் மேற்புறமாக கொஞ்சம் வேப்பம் தளிர் அல்லது காய்ந்த மிளகாய் வற்றல்களைப் போட்டு வைத்தால், பூச்சி… வண்டு எதுவும் அண்டாது.

avl22bஅரிசிக்கு மட்டுமல்ல… பருப்பு, தானிய வகைகளைச் சேமிக்கும்போது அதன் மேற்புறமாக வேப்பந்தளிர், காய்ந்த மிளகாய் வற்றல்களைப் போட்டு வைக்கலாம். வண்டு விழாமல் இருக்க பயறு, மொச்சை இவற்றை வறுத்து, அதன் பின் ஸ்டாக் பண்ணலாம். சிறுபயறு வாங்கும்போதே ஈரத்தன்மை குறைவாக, உலர்ந்த நிலையில், கடித்தால் ‘கடுக் கடுக்’ என்று சத்தம் கேட்கும் பதத்தில் வாங்க வேண்டும். அந்தப் பதத்தில் உள்ள பயறுதான் சேமிக்க ஏற்றது.

வெள்ளைப் பூண்டு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இவையெல்லாம் சூட்டில் வெதும்பிவிடும் என்பதால், காற்றோட்டமுள்ள பகுதியில் பரப்பி வைக்க வேண்டும்.

வருடத்துக்கு ஒருமுறை சீஸன் நேரத்தில் மட்டுமே கிடைக்கும் புளியை, அடுத்த சீஸன் வரும்வரை, கிட்டத்தட்ட அந்த வருடம் முழுமைக்கும் சேமித்துப் பாதுகாக்க வேண்டும். அதற்கு புளியோடு கொஞ்சம் கல் உப்பையும் சேர்த்து, ஈரமில்லாமல் நன்றாக உலர்ந்த ஒரு பீங்கான் ஜாடியில் சேமித்தால், அந்தப் புளிக்கு ஆயுள் கெட்டி. புளியை சமையல் பயன்பாட்டுக்கு எடுக்கும்போது, கையில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

தேங்காய் எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்க, கறிவேப்பிலையை நன்றாகக் கழுவி நிழலில் காய வைத்து, பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டு வைக்கவும். தலை முடியும் கருமையாக வளரும்” என்று அறிவுறுத்திய சாகுல்… ”இந்த வெயிலுக்கு மோர், தயிர் எல்லாம் ஒரே நாளில் புளித்துப்போகும். அவற்றில் ஒரு சிறு துண்டு புளியைப் போட்டு வைத்தால், அடுத்தடுத்த நாட்களுக்கும் பயன்படுத்தலாம். அதேபோல வெயிலுக்கு உருகும் கருப்பட்டி, வெல்லக்கட்டியைப் பாதுகாக்கவும் வழி இருக்கிறது. அவற்றை பனைநார் பெட்டியில் வைத்து, கூடவே சிறிது வைக்கோலும் போட்டு வைத்தால்… உருகாமல் இருப்பதுடன், அதன் சுவையும் நீண்ட நாட்களுக்கு மாறாமல் இருக்கும்” என அறிவுறுத்தியதோடு…

”குழந்தைகளுக்குக் கொடுக்கவல்ல சத்து நிறைந்த பழங்கள்… மட்டி வாழையும், நேந்திரன் வாழையும். நேந்திரன் வாழைப்பழம் எல்லா பகுதிகளிலும் எப்போதும் கிடைப்ப தில்லை. இதற்குப் பதிலாக நேந்திரன் வாழை யைக் காயாக வாங்கி, நன்றாகக் காய வைத்து, பொடி செய்து குழந்தைகளுக்குப் பாலில் கலந்து கொடுத்தால், ஆரோக்கியமாக வளர் வார்கள். சீஸன் இல்லாத நேரத்திலும் நேந்திரன் வாழை கொடுத்த திருப்தியும் கிடைக்கும்” என்று ஹெல்த் டிப்ஸும்…

”மழைத் தண்ணீரையும் முறைப்படி சேமித்தால், மாதக்கணக்கில் பயன்படுத்தலாம். மழைக் காலங்களில் பெரிய அண்டா, குவளை, டிரம்களில் தண்ணீர் பிடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி மண் பானையில் ஊற்றி வைத்து மூடிவிட்டால், அதிக நாட்களுக்குப் பயன்படுத்தலாம். சுத்திகரிப்புக்காகப் போடப்பட்ட குளோரின் நெடியுடன் வரும் கார்ப்பரேஷன் தண்ணீரையும்கூட மண்பானையில் ஊற்றி வைத்தால், அதன் ரசாயன குளோரின்தன்மை குறையும், தண்ணீரும் சுத்தமாகும், சுவையாகும்!” என்று தண்ணீர் டிப்ஸும் வாரி வழங்கினார்.

சமையலறையில் இருந்து தொடங்குவோம் சேமிப்பை!

நன்றி: தழிழர்களின் சிந்தனைகளம்