Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

December 2016
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 1,923 முறை படிக்கப்பட்டுள்ளது!

30 வகை மழை, குளிர்கால உணவுகள்! 2/2


நார்த் இண்டியன் வெஜ் ஆம்லெட்

  17  தேவையானவை:  கடலை மாவு – கால் கப், ராகி மாவு – ஒரு கப், தக்காளி – ஒன்று, (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, மிளகு – ஒரு டீஸ்பூன், விருப்பமான காய்கறிகள் (உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை)
– அரை கப் (பொடி யாக நறுக்கியது), பிரெட் துண்டுகள் – 2 (ஓரம் நீக்கி உதிர்த்தது), எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: 
கடலை மாவு, ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். எண்ணெய் தவிர மேற்கூறிய
அனைத்துப் பொருட்களையும் இதில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி,
சூடானதும் மாவை ஆம்லெட் மாதிரி ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.


கார கொள்ளு புட்டு

தேவையானவை: 
16கொள்ளு – ஒரு கப், தேங்காய்த் துருவல் – அரை கப், பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள்,
பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, கடுகு – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு –
தேவைக்கேற்ப.

செய்முறை:
கொள்ளை 10 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இட்லித்
தட்டில் மாவை ஊற்றி, ஆவியில் 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள்,
உப்பு, மஞ்சள்தூள் தாளித்து கொள்ளு புட்டில் சேர்த்து, தேங்காய்த் துருவல் கலந்து
பரிமாறவும்.


கோதுமை ரவை  மினி அடை

தேவையானவை: 
19கோதுமை ரவை – ஒரு கப், சிவப்பரிசி, துவரம்பருப்பு – தலா கால் கப், கடலைப்பருப்பு –
2 டேபிள்ஸ்பூன், முழு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 5, சின்ன வெங்காயம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது), எண்ணெய்,
உப்பு, – தேவைக்கேற்ப.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம்
– ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:
அரிசி, பருப்பு வகைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
கோதுமை ரவையை தனியாக அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய அரிசி-பருப்புக் கலவை மற்றும்
கோதுமை ரவையை தண்ணீர் வடித்து, அவற்றுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து தேவையான
அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாக அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து,
வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, அதை அடை மாவில் சேர்க்கவும். தோசைக் கல்லில்
எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை சின்னச் சின்ன அடைகளாக ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
வெல்லத்துருவல் (அ) அடை அவியலோடு சாப்பிடலாம்.


பட்டாணி  பக்வான்

தேவையானவை:
18காய்ந்த பட்டாணி – ஒரு கப், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), பீன்ஸ் – 4 (பொடியாக
நறுக்கவும்), உருளை சிறியது – ஒன்று (பொடியாக நறுக்கவும்), முட்டைகோஸ் (துருவியது)
– 2 டேபிள்ஸ்பூன், புளி – முழுநெல்லி அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க, இஞ்சி – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கவும்) கடுகு –
அரை டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும். பட்டாணியை 8 மணி நேரம்
ஊறவைத்து, பிறகு, தண்ணீரை வடித்து, அதனுடன் நறுக்கிய பீன்ஸ், உருளை, முட்டைகோஸ்,
உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி
சேர்த்துத் தாளித்து, இதை வேகவைத்த பட்டாணி கலவையில் சேர்க்கவும். பிறகு, சாட்
மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.


மேத்தி கோட்டா

21தேவையானவை: கடலை
மாவு, சோள மாவு – தலா அரை கப், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, வெந்தயக் கீரை – கால் கப்
(பொடியாக நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல், மிளகாய்த்தூள்
– தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
எண்ணெய் தவிர்த்து மேற்கூறிய அனைத்துப் பொருட் களையும் ஒரு பாத்திரத்தில்
சேர்க்கவும். இத்துடன் 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய் விட்டுக் கிளறி, தேவையான அளவு
தண்ணீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெந்தயக்கீரை சேர்த்துள்ளதால் அதுவே தனிச்சுவை கொடுக்கும். அதனால், சைட் டிஷ்
இல்லாமலும் சாப்பிடலாம்.


தூதுவளை  ஸ்பாஞ்ச் தோசை

    20தேவையானவை:
தூதுவளை – ஒரு கப் (ஆய்ந்தது), வெந்தயம் – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி-பச்சை மிளகாய்
விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், இட்லி அரிசி – 2 கப், ஆமணக்கு விதை – ஒன்று, முழு
உளுந்து – அரை கப், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஆமணக்கு விதை மற்றும்
வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து  5 மணி நேரம் ஊறவைக்கவும்.
கிரைண்டரில் முதலில் அரிசி – உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். இத்துடன் ஆமணக்கு விதை,
வெந்தயம், தூதுவளை இலை சேர்த்து அரைத்து எடுத்து, மாவை உப்பு சேர்த்துக் கரைத்து 6
மணி நேரம் புளிக்கவிடவும். மாவில் இஞ்சி-பச்சை மிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தோசைகளாக ஊற்றி, இருபுறமும் வேகவைத்து
எடுக்கவும். இதை வெங்காயச் சட்னியுடன் சாப்பிடலாம். வெந்தயம், ஆமணக்கு விதை
சேர்த்துள்ளதால், தோசை ஸ்பாஞ்ச் மாதிரி மெத்தென்று இருக்கும்.


அமெரிக்கன்  சாப்ஸி

23தேவையானவை:
பிளெயின் நூடுல்ஸ் (ஏதாவது ஒரு சிறுதானிய நூடுல்ஸ்) – ஒரு பாக்கெட், வெங்காயத்தாள்
– கால் கப் (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய்  – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக
நறுக்கவும்), முட்டைகோஸ் – 2 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்), கேரட் – 2
டேபிள்ஸ்பூன் (சதுரமாக நறுக்கவும்), இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், சோயா சாஸ்,
டொமேட்டோ சாஸ் – தலா ஒரு டீஸ்பூன், ஃபுட் வினிகர் – ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப்
பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன், மைதா மாவு – 2 டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: 
மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு,
சூடானதும்  அரை பாக்கெட் நூடுல்ஸை பொரித்தெடுக்கவும். மீதமுள்ளவற்றை தண்ணீரில்
வேகவைத்து எடுத்துவைக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய
காய்கறிகள், பச்சைப் பட்டாணி, இஞ்சி-பூண்டு பேஸ்ட், சிறிது வெங்காயத்தாள், உப்பு
சேர்த்து வதக்கி, சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், வினிகர் சேர்த்துக் கிளறவும். அடுப்பை
குறைந்த தீயில் வைத்து, கரைத்துவைத்துள்ள மைதா மாவை இதில் சேர்த்து, பச்சை வாசனை
நீங்கும்வரை கிளறி அடுப்பை அணைத்து, கலவையில் சர்க்கரை தூவவும். அதில் வேகவைத்த
மற்றும் பொரித்த நூடுல்ஸ் சேர்த்துக் கிளறி, மீதமுள்ள வெங்காயத்தாள் தூவிப்
பரிமாறவும்.


சோள ரவை –  உப்புமா கொழுக்கட்டை

22தேவையானவை: சோள ரவை
– ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை –
சிறிது, காய்ந்த மிளகாய் – 3, இஞ்சி – ஒரு டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
விருப்பமான காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, பீட்ரூட் மாதிரி) – கால் கப் (நறுக்கவும்),
தேங்காய்த் துருவல் – கால் கப், நல்லெண்ணெய் – சிறிது, எண்ணெய்,  உப்பு –
தேவைக்கேற்ப.

செய்முறை:
வெறும் வாணலியில் சோள ரவையை வறுக்கவும். துவரம்பருப்பை மிக்ஸியில் ஒன்றிரண்டாக
உடைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய இஞ்சி, காய்கறிக் கலவை, உப்பு
சேர்த்து வதக்கவும். இதனுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிவந்ததும் பெருங்காயத்தூள்,
உடைத்த துவரம்பருப்பு, வறுத்த சோள ரவை, சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி,
கலவை பாதி வெந்த நிலையில் அடுப்பை அணைக்கவும். கைப்பொறுக்கும் சூட்டில் மாவை
கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

இட்லித் தட்டில் வாழை இலை போட்டு நல்லெண்ணெய் தடவி, கொழுக்கட்டைகளை வைத்து 10
நிமிடங்கள் வேகவிட்டு, மீதமுள்ள தேங்காய்த் துருவலில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.


ரைஸ் டிக்கியா  வித் சாஸ்

25தேவையானவை: வடித்த
சாதம் – ஒரு கப், பெரிய வெங்காயம் – கால் கப் (நறுக்கவும்) உருளைக்கிழங்கு, கேரட் –
தலா ஒன்று (வேகவைத்து மசிக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, ஓமம், மல்லித்தூள் (தனியாத்தூள்)
– தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – சிறிது, பொட்டுக்கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு –
தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய்
விழுது, மல்லித்தூள் (தனியாத்தூள்), மசித்த உருளை, கேரட், உப்பு சேர்த்து
வதக்கவும். இதனுடன், மஞ்சள்தூள், ஓமம்,  வடித்த சாதம் சேர்த்துக் கலந்து,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி அடுப்பை அணைக்கவும். கலவை ஆறியதும்
விருப்பமான வடிவங்களில் கட்லெட் செய்து, பொட்டுக்கடலை மாவில் புரட்டி, அரை மணி
நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரிக்கவும். அதிக
எண்ணெயை தவிர்க்க நினைப்பவர்கள், தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, சூடானதும் ரைஸ்
டிக்கியாவை போட்டு, இருபுறமும்  நன்கு வேகவிட்டு எடுத்து, சாஸ் உடன்
சுவைக்கலாம்.


சைனீஸ் ஸ்பிரிங் ரோல்

24தேவையானவை:  மைதா
மாவு – 2 கப், சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

ஃபில்லிங் செய்ய:
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப், செலரி – 2
டேபிள்ஸ்பூன் (மெலிதாக நீளமாக நறுக்கவும்) சில்லிசாஸ், தக்காளி சாஸ் – தலா ஒரு
டீஸ்பூன், காலிஃபிளவர் – 2 டேபிள்ஸ்பூன் (துருவவும்), குடமிளகாய் – 2 டேபிள்ஸ்பூன்
(பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன் (நறுக்கவும்), இஞ்சி –
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஃபில்லிங்குக்கு உரிய பொருட்களை சேர்த்து
வதக்கி, உப்பு சேர்த்துக் கிளறி நன்கு வேகவிட்டு மசாலா தயார் செய்து ஆறவிடவும். 3
டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். மைதா மாவுடன் சமையல் சோடா, உப்பு,
சூடுபடுத்திய எண்ணெய் சேர்த்துப் பிசைந்து, பிறகு தண்ணீர் தெளித்து மிருதுவான
மாவாகப் பிசைந்து (மாவு நீளும்தன்மை பெறும்வரை பிசையவும்), அரை மணி நேரம் ஈரத்துண்டு
போட்டு மூடி வைக்கவும். பிறகு, பிசைந்த மாவை எண்ணெய் தடவி சமையல் மேடையில்
பரோட்டாவுக்கு செய்வது போல நன்கு அடித்துக் கொள்ளுங்கள். பிறகு 2 சிறிய உருண்டைகளை
சப்பாத்திகளாகத் தேய்த்து, ஒரு சப்பாத்தியில் ஃபில்லிங்கை வைத்து, ஓரத்தில் மைதா +
நீர் குழைத்து பசைபோல் தடவி, மற்றொரு சப்பாத்தியால் மூடி, பாய் போல் சுருட்டவும்.
பிறகு 3 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும் (எல்லா ரோல்களையும் இதேபோல் செய்யவும்).
பிறகு, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து, தக்காளி சாஸுடன் பரிமாறவும் (கட்
செய்தும் பரிமாறலாம்).


சுண்டல் வித் கோன்

27தேவையானவை: 
பச்சைப்பயறு – ஒரு கப், பெரிய வெங்காயம் – கால் கப் (பொடியாக நறுக்கவும்), பட்டை –
சிறிது, கிராம்பு – ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தக்காளி – ஒன்று
(பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், எலுமிச்சை – அரை
மூடி (சாறு எடுக்கவும்), எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

கோன் செய்யத் தேவையானவை: மைதா மாவு – அரை கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைகேற்ப.

செய்முறை:  
கோன் செய்ய: மைதா மாவு, சீரகம், உப்பு சேர்த்து அதில் நெய் சேர்த்து தண்ணீர்
தெளித்து கெட்டியாகப் பிசைந்து சின்ன சப்பாத்தியாக (வட்டமாக) தேய்த்து, கோன் மாதிரி
மடித்து விளிம்பில் மைதா பசை கொண்டு ஒட்டவும். அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து
எடுத்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்க, கோன் ரெடி.

சுண்டல் செய்ய: பச்சைப்பயறை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து
முத்து முத்தாக வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பட்டை,
கிராம்பு, இஞ்சி – பூண்டு விழுது, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி
சேர்த்து வதக்கவும். இதனுடன் வேகவைத்த பாசிப்பயறை சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச்
சாறு சேர்த்து புரட்டிவிட்டு இறக்கவும். இதை கோனில் போட்டு சாப்பிடவும்.

மொறு மொறு ஸ்வாலி

26தேவையானவை: முழு உளுந்து மாவு – கால் கப் (உளுந்தை வறுத்து அரைத்தது), மைதா மாவு – ஒரு கப், வறுத்துப்பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், ஓமம், சீரகம் – தலா அரை டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாக உடைத்தது), ஃபுட்கலர் (விரும்பினால்) – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாகத் தேய்த்து வெயிலில் ஒரு மணி நேரம் வைக்கவும். காய்ந்தவுடன் (ஈரப்பசை நீங்கியவுடன்) ரிப்பன் மாதிரி நீள நீளமாக வெட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


சிவ்டா

29தேவையானவை: பொரி – ஒரு பாக்கெட், அவல் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, பொட்டுக் கடலை – 2 டேபிள்ஸ்பூன், பல்லாக நறுக்கிய தேங்காய் – அரை கப், கறிவேப்பிலை – சிறிது, மஞ்சள்தூள் – சிறிது, எலுமிச்சை – அரை மூடி (சாறு பிழியவும்), எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை (பொரியில் உப்பு இருப்பதால் பார்த்து போட்டுக்கொள்ளவும்).

 

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, தேங்காய்ப்பல், அவலை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், பொரி, வறுத்த வேர்க்கடலை, உப்பு சேர்த்துக் கலந்து, மஞ்சள்தூள், மிளகாய்தூள் தூவி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். கலவையை பெரிய பாத்திரத்துக்கு மாற்றி ஒரு குலுக்கு குலுக்கி எடுத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து விரும்பும்போது சாப்பிடலாம். ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.


கார பிஸ்கட்

28தேவையானவை: மைதா மாவு, கடலை மாவு, கோதுமை மாவு – தலா அரை கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ஓமம் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை: மைதா மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாகச் சேர்த்து மூட்டை மாதிரி கட்டி ஈரமில்லாத, நன்கு உலர்ந்த பாத்திரத்தில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் மாவு இருக்கும் உலர்ந்த பாத்திரத்தை வைக்கவும். பிறகு மூடி 20 நிமிடங்கள் வெயிட் போடாமல் வேகவைக்கவும் (இட்லி பானையிலும் வேகவைக்கலாம்). வெந்ததும் கைகளால் உதிர்த்து மாவைச் சலித்து அத்துடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். நெய்யைச் சூடாக்கி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து, சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து, அரை இஞ்ச் தடிமனில் தட்டி, ஏதாவது மூடி (அ) அச்சு வைத்து வட்டமாக வெட்டி, சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.


மின்ட் – ஜிஞ்சர் டிரிங்

30  தேவையானவை:
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு, புதினா – 10 இலைகள், வெள்ளை மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், தூதுவளை – 4 இலை, துளசி – 3 இலை, துருவிய வெல்லம் – அரை டீஸ்பூன், பட்டை – சிறிது, கிராம்பு – ஒன்று.

 

செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் சீவி தட்டிக்கொள்ளவும். அதனுடன், கழுவிய புதினா, தூதுவளை, துளசி இலைகள், பட்டை, கிராம்பு சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து, அனைத்து சாறும் நீரில் இறங்கி நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டவும். பிறகு, வெள்ளை மிளகுத்தூள் தூவி, வெல்லத்துருவல் சேர்த்துக் கலந்து பருகவும். டேஸ்ட்டி யான, தொண்டைக்கு இதமான ஹெல்த்தி டிரிங்க் இது.

 நன்றி: விகடன்