Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

August 2012
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 14,395 முறை படிக்கப்பட்டுள்ளது!

அலர்ஜி – ஒவ்வாமை

அலர்ஜி என்றால் `ஒவ்வாமை’ என்று பொருள். அலர்ஜி என்ற பெயரை முதலில் வைத்தவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பிர்கியூட். அலர்ஜி என்பது மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக `இம்யூன் சிஸ்டம்’ என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல், இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான்.

உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள் உடலுக்குள் நுழையும் போது எதிர்ப்பு கிளம்புகிறது, அங்கு ஒரு ஒத்துழையாமை இயக்கம் நடைபெறுகிறது. மருத்துவ மொழியில் சொல்ல வேண்டுமானால் ஆண்டிஜென்னுக்கும், ஆண்டிபாடிக்கும் நடக்கும் சண்டை. இந்த விஷப்பொருளை( உடலுக்கு தேவை இல்லாத எல்லாப் பொருள்களும் விசப்பொருட்கள் தான்)  ஹிஸ்டாமின் சீரோடோனின் என்று மருத்துவத்துறையில் சொல்வர். உடலில் எந்தப் பகுதியில் இந்த விஷப் பொருள் தாக்குகிறதோ அந்தப் பகுதியில் அலர்ஜி ஏற்படுகிறது.

இந்த விஷப்பொருள் ரத்தத்துடன் உடல் முழுவதற்கும் செல்கிறது. இதனால் ரத்த நாளங்கள் விரிவடையும். ரத்தம் அதிகமாகி அந்த இடம் சிவந்து விடுகிறது. உடலில் தடிப்பாக அங்கங்கு துருத்தும். சில உணர்வு நரம்புகளை தூண்டி நமைச்சலை ஏற்படுத்துகிறது. சுவாசக் குழாய்களை தாக்க ஆஸ்துமாவையும் உண்டாக்கும் சிலவகை அலர்ஜிக்கள்.

அலர்ஜி என்றால் என்ன

சாதாரணமாக பெரும்பாலானவர்களுக்கு கெடுதல் ஏதும் செய்யாத பொருள், சிலருக்கு ஒவ்வாமல் போதல் அலர்ஜி எனப்படுகிறது. அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள், உணவு, தூசி, செடி கொடி மரங்களிலிருந்து எழும் மகரந்தத்தூள் மருந்து, பூச்சிக்கடி, பூஞ்சனம், வீட்டில் வளர்க்கும் பிராணிகளின் முடிகள் (குறிப்பாக பூனை, முயல், நாய்) பறவைகளின் இறகு, சிகைக்காய்த்தூள் முதலியன. சிலருக்கு ஒரு பொருள் மட்டுமல்ல, பல பொருட்கள் ஒவ்வாமையை உண்டாக்கும்.

சிலருக்கு மாத்திரம் ஏன் அலர்ஜி ஏற்படுகிறது
ஒவ்வாமை உணர்வு பாரம்பரியமாக வருகிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இரண்டாவதாக ஒருவர் ஜுரத்தினாலோ, கர்ப்பமடையும் போதோ, தொற்றால் தாக்கப்பட்டிருந்தாலோ அவர் உடல் பலவீனமாக இருக்கும். அப்போது அவர் சுலபமாக அலர்ஜிக்கு உள்ளாவார்.

இந்த ஒவ்வாமை உணர்வு அல்லது இயல்பு எல்லோருக்கும் ஒன்று போல் இருப்பதில்லை. ஒருவருக்கொருவர் பெரிதும் மாறுபடுகிறது. ஒரே உணவு ஒருவருக்கு ஒத்துக் கொள்கின்ற போது மற்றவருக்கு உடன்படாது போகிறது. பால், குளுக்கோஸ், லேக்டோஸ் போன்ற பால் பொருட்கள் குழந்தைகளுக்குச் சிறந்த உணவாகின்ற போது சில குழந்தைகளுக்கு இது ஒவ்வாமல் வயிற்றுப்போக்கு உண்டாகிறது. சில குழந்தைகளுக்குக் கரப்பான் எனப்படும் அரிப்பு, தோலில் செம்மை நிறம் போன்றவற்றை ஏற்படுவதுடன் தோலில் நீர்வடியும் எக்ஸிமாவையும் உண்டு பண்ணலாம். ஒவ்வாமையைத் தூண்டுகின்ற பொருள்கள் காற்று, நீர், உணவு, ஊசி, மருந்துகள் போன்றவற்றின் மூலம் உடலை அடைகின்றன.

அலர்ஜி தாக்குதல்
நோய்களை இயற்கையாக எதிர்கொண்டு அவற்றை எதிர்க்கின்ற தடுப்பு சக்தியைப் பெறுவது போல் செயற்கை முறையிலும் நோய்களை எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும். இதை இம்யூனேசன் அல்லது தடுப்பாற்றல் பெறுதல் என்கின்றனர். ஆன்ட்டிஜென் என்னும் புறப்பொருட்கள் உடலினுள் சேருகின்ற போது ஆன்ட்டிபாடீஸ் என்ற எதிர்ப்புப் பொருளை நமது உடல் உற்பத்தி செய்து அதன் மூலம் ஒவ்வாத புறப்பொருளை எதிர்க்கிறது. அப்போது நிகழ்கின்ற உடலின் இயல்புக்கு மாறான செயல்பாடுகளை அலர்ஜி அல்லது ஒவ்வாமை என்று அழைக்கிறோம்.

அலர்ஜியுள்ள மனிதன் அலர்ஜி உண்டாக்கும் பொருளை சந்திக்கும் போது இம்யூனிட்டி எனும் எதிர்பாற்றலால் ஆன்ட்டிபாடீஸ் உருவாகிறது என்று சொன்னோம் இவை இம்யூனோ குளோபுலின் இ என்று அழைக்கப்படும் புரதம்.

ஒரு நோய் தீவிரமாக உடலைத்தாக்குகின்ற போது அதனை எதிர்க்கின்ற வகையில் ஏராளமான எண்ணிக்கையில் ஆன்ட்டிபாடீஸ் உடலில் தோன்றுகின்றன. பின்னர் அந்த முயற்சியிலே வெற்றி பெற்று நோய் குணமானதும் அந்த நோயை எதிர்த்த ஆன்ட்டி பாடீஸ் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விடுகின்றன என்றாலும் உடலில் சிறிய அளவில் இவை இருந்து கொண்டே இருக்கின்றன. பிறிதொரு முறை அந்நோய் தாக்க முயல்கின்ற போது இதே ஆன்ட்டி பாடீஸ்கள் கிளர்ந்தெழுந்து நோய்க்கிருமிகளை எதிர்த்து விரட்டி நோய் வரமால் செய்துவிடுகின்றன. நாம் இந்த நோயின் எதிர்ப்பு ஆற்றலை பரம்பரை வழியாகத் தாயிடமிருந்தும், நாமே நோயுற்று அதன் பிறகு பெற்றும், தடுப்பு மருந்துகளின் மூலம் பெற்றும் வளர்த்து கொள்கிறோம். இந்த ஆன்ட்டி பாடீஸ் பல நேரங்களில் நமக்குத் தெரியாமலே நோய்க்கிருமிகளையும், உடலுக்கு ஊறு செய்யும் பிற புறப்பொருள்களையும் போரிட்டு விரட்டி விடுகின்றன. சிற்சில வேளைகளில் புறப்பொருள்களினால் உடல் கூருணர்ச்சி மிகுந்து ஹைபர் சென்சிவிட்டி தாங்க இயலாது போகின்ற போது உடலில் பல மாற்றங்கள் (தும்மல், இருமல், கண், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், அரிப்பு, சிவந்து போதல் போன்றவை) ஏற்படுகிறது. இதையே அலர்ஜி என்றனர். இதை உண்டுபண்ணும் ஆன்டிஜென்களை அலர்ஜென்ஸ் அல்லது ஒவ்வாமை என்றனர்.

ஒவ்வான்கள் தாக்கியவுடன் உடலில் ஹிஸ்டாமினும் செரோட்டானினும் சுரக்கின்றன. அவை உடலைத் தூண்டி எதிர்ப்பாற்றலை உண்டாக்குகின்றன. இரத்தத்திலும் திசுக்களிலும் இயோசினோபில்கள் பெருகுகின்றன. தமனிகள் விரிந்து சுரப்பிகள் மிகுதியாகச் சுரந்து மூக்கின் உட்பகுதியும் தொண்டையும் வீங்கி விடுகின்றன. மூக்கின் உட்பகுதியில் கீழ் வளைவு எலும்பின் மேல்படலம் வெளிர் நிறமாகத் தெரியும். இருபக்க மூக்கும் அடைபடுவதால் நுகரும் திறன் குறைந்துவிடும். மூக்கில் தும்மலாகத் தொடங்கி தொண்டை வீங்கி, நுரையீரலில் சளி சேர்ந்து மூச்சுவிடக் கடினமாவது ஒவ்வாமையின் வெளிப்பாடு.

சருமம்
ஒவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும் உணர்குறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.
செம்மை படர்தல்
டெர்மடைடிஸ்
அரிப்பு/தடிப்பு
கரப்பான்

உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போது கீழ் காணும் கோளாறுகள் ஏற்படலாம். வயிற்றுப் போக்கு, வாந்தி/குமட்டல், இசிவு, வாயு பிரிதல், கண் சிவத்தல், அரிப்பு, நீர் வடிதல், தற்காலிக செவிகேளாமை, செவியில் அரிப்பு, சீழ் வடிதல், மூக்கு, தும்மல், சளி, மூச்சடைப்பு.

உணவு ஒவ்வாமை
உடலில் தோன்றும் பல அறிகுறிகளுக்கு உணவு ஒவ்வாமை தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சாதாரணமாகத் தீங்கில்லாத பல காய்கறிகள், உணவுப் பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையைத் தோற்றுவித்துள்ளன. உருளைக்கிழங்கு, தக்காளி, டீ, காபி போன்ற பொருட்கள் கூட ஒவ்வாமைக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதே போல் பால், பால் பொருட்கள், முட்டை போன்ற உணவு வகைகள் ஒவ்வாமையைத் தோற்றுவித்து ஆஸ்த்துமா, எக்ஸிமா, தும்மல், இருமல், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல அறிகுறிகளைத் தோற்றுவித்துத் தொல்லை தரலாம்.

மருந்து ஒவ்வாமை
மருந்து ஒவ்வாமை அபாயகரமானது. உடனடி சிகிச்சை தேவைப்படும். பெனிசிலின், வைட்டமின் பி, ஆஸ்பிரின், ஐயோடின், டெட்டனஸ் தடுப்பூசி, சில சர்ம களிம்புகள் முதலிய அலர்ஜியை உண்டாக்கலாம்.

ஒவ்வாமையை கண்டுபிடிப்பது
ஒவ்வான்களைத் தவிர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு முன் எவ்வகையான ஒவ்வான்களால் ஒவ்வாமைக்குறிகள் ஏற்படுகின்றன என்பதை முதலில் கண்டுபிடித்துத் தனிமைப்படுத்த வேண்டும். இது சிறிது கஷ்டமான செயல் என்றாலும் இயலாதது அல்ல. இதை இரு விதங்களில் கண்டுபிடிக்கலாம். முதலில் ட்ரையல் அண்ட் எரர் என்னும் முறையில் ஒவ்வொரு உணவுப்பொருளாக நீக்கிக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு நீக்கிக் கொண்டு வருகின்ற போது எந்தப் பொருளால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்று கண்டுகொள்ளலாம். இதே போல் நீங்கள் பயன்படுத்தும் சோப், பவுடர், வாசனைப்பொருள்கள், எண்ணெய் போன்றவற்றையும் ஒவ்வொன்றாக நீக்கிக் கொண்டு வந்தும் அவற்றில் ஏதாகினும் காரணமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

வாழுகின்ற இடங்கள், பணி செய்கின்ற அறைகள் போன்றவற்றில் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதவைகள் எடுத்துக்காட்டாக புத்தகத் தூசி, ரம்பத்தூள், பஞ்சுத்துகள், கடுமையான வாசனைகள் போன்றவைகள் ஏதேனும் உள்ளனவா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சில வாரங்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாதது எது என்று தெரிந்துகொள்ள முடியும். பின்னர் அவற்றைத் தனிமைப்படுத்தித் தவிர்ப்பதன் மூலம் ஒவ்வாமைத் துயரை அறவே போக்கி விடலாம்.

சோதனையில் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருளை சிறு ஊசியின் மூலம் உடலில் செலுத்துகின்றனர். அப்போது உடல் ஏதாவது ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறதா என்று பார்க்கின்றனர். தற்போது உலகம் முழுவதும் அலர்ஜியைப் பற்றிய ஆராய்ச்சிகளும், அதற்கான எதிர்ப்பு மருந்துகளும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த உணவுப்பொருளினால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என்று கருதலாம். ஆனால், நாடித்துடிப்பு 84 க்கு மேல் இருக்குமானால் அதிலும் ஒரு மணி நேரம் உயர்ந்தே இருக்குமானால் அந்த உணவுப் பொருள்தான் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உள்ளது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிந்து கொண்ட பின்னர் அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒதுக்கிவிட வேண்டும்.

கூருணர்ச்சி நீக்கி எதிர்ப்பாற்றல் வளர்த்தல் பண்டைய நாட்களில் பாம்பின் விஷத்தைக் கூடச் சிறுகச் சிறுக உடலினுள் செலுத்தித் துறவிகள் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போன்று கூருணர்ச்சி நீக்க வல்ல வாக்சீன்களை கொண்டு ஒவ்வாமையினால் அவதியுறுவோர் தங்கள் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

இவ்வகை வாக்சீன்கள் 1:500 மற்றும் 1:50 என்ற செறிவில் தயாரிக்கப்படுகின்றன. முதலில் குறைந்த செறிவுடைய வாக்சீனில் 0.1 மி.லி. அளவு எடுத்து தோலின் அடியில் ஊசி மூலம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அளவு என அதிகரித்துக் கொண்டே 10 வாரங்கள் கொடுக்க வேண்டும். பிறகு 1:50 என்ற செறிவுள்ள வாக்சீனை 0.1 மி.லி. அளவில் தொடங்கி ஒவ்வொரு வாரமும் 0.1 மி.லி. அதிகரித்துக்கொண்டே வந்து பத்து வாரங்கள் கொடுக்க வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக எதிர்ப்பாற்றலை மிகுதியாக்கினால் ஒவ்வாமையால் விளைகின்ற துன்பங்களிலிருந்து விடுபட இயலும்.

குறிப்பாக ஆஸ்த்துமா என்னும் மூச்சிழுப்பு நோயினால் துயரப்படுகின்றவர்கள் இம்முறையினால் மூச்சிழுப்பு வருவதைத் தடுத்துக் கொள்ளலாம்.

ஒரு முறை தடுப்பு மருத்துவம் செய்தால் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் நலமாக இருக்கலாம். ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் ஒவ்வான்கள் உடலைத் தாக்குகின்ற போது அதை எதிர்க்கும் வேதியைச் சுரக்கின்றன. தும்மலுக்கும், இருமலுக்கும், மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுவதற்கும் இன்னும் பல கோளாறுகளுக்கும் இந்த ஹிஸ்டாமின் என்னும் வேதியே காரணம். இந்த ஹிஸ்டாமினின் செயல்பாட்டைத் தடைசெய்து நேச்சுரலைஸ் செய்வதற்கென ஆன்ட்டி ஹிஸ்டாமின் எனப்படும் எதிர் ஹிஸ்டாமின்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகளை உட்கொள்ளுகின்ற போது ஒவ்வாமையினால் ஏற்படுகின்ற துயரங்களை மட்டுப்படுத்தவும் குறைக்கவும் செய்யலாம்.

பொதுவாக எல்லா ஆன்ட்டி ஹிஸ்டாமின்களும் ஒரு வகையான மயக்க உணர்வையும் தூக்கத்தையும் உண்டாக்க வல்லவை. எனவே, இவ்வகை மருந்துகளை எடுக்கின்ற போது கார் போன்ற வாகனங்களை ஓட்டுவதையும் இயந்திரங்களின் அருகே நின்று பணிபுரிவதையும் தவிர்க்க வேண்டும்.

ஆயுர்வேதமும் அலர்ஜியும்
குறைந்த நோய் தடுக்கும் சக்தியும், உடலில் சேரும் நச்சுப்பொருட்களும் தான் ஒவ்வாமைக்கு காரணம் ஆயுர்வேதம் என்கிறது. எல்லா பொருட்களுமே எங்கு தோன்றினாலும், உடலில் எங்கு வேண்டுமானாலும் ஒவ்வாமையை உண்டாக்க வல்லவை. கப, பித்த தோஷ சீர்கேடுகள், வாத பிரகிருதிகளையும் தாக்கி அலர்ஜியை உண்டாக்கலாம்.

ஆயுர்வேதம் ஒவ்வொரு பருவ காலத்தின் முடிவில், உடலில் சேர்ந்த நச்சுப்பொருட்களை நீக்க வேண்டும், என்கிறது. கப – பித்தங்களை சமனாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் நாளங்கள் (வழிகள்) சுத்திகரிக்கப்பட்டுவிடுவதால் ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தவிர பருவ கால மாற்றங்களால் ஏற்படும் ஒவ்வாமை வராமல் தடுக்கலாம்.

காய்கறி சாறுகள், வாழைப்பழம் இவற்றை உட்கொள்ளலாம். ஆனால் வாழைப்பழம் சிலருக்கு ஆகாது! அந்தந்த ஸீஸனுக்கு ஏற்ப உணவு உட்கொள்வது நல்லது என்கிறது ஆயுர்வேதம். அலர்ஜிக்கு ஆயுர்வேதம், உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது சிறந்த சிகிச்சை என்று கருதுகிறது. அலர்ஜி குழந்தைகளுக்கு பல சர்ம உபாதைகளை உண்டாக்கும்.

வேப்பிலை சிறந்த ரத்த சுக்தி மற்றும் உடலின் நச்சுப்பொருட்களை நீக்கும் மூலிகை. பழங்காலத்திலிருந்தே வேப்பிலையின் விஷமுறிக்கும் சக்தி தெரிந்திருந்தது. எக்ஸிமா, முகப்பரு, உணவு ஒவ்வாமை இவற்றுக்கெல்லாம் வேப்பிலை நல்ல மருந்து.

கற்றாழை உடலின் எதிர்ப்புச்சக்தியில் ஒரு அங்கமான ரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (வெள்ளணுக்கள்) உற்பத்தியை அதிகரிக்கிறது. இதர வெள்ள அணுவான “மானோசைட்” டி – செல்கள், பாக்டீரியாவை ஓழிக்கும் “மாக்ரேபேஜஸ்” இவற்றையும் கற்றாழை ஊக்குவிக்கும்.

தோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.

எல்லாவித அலர்ஜிகளுக்கு மஞ்சள் சேர்ந்த பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன. இவற்றால் அலர்ஜிகளை தவிர்க்கலாம்.

அலர்ஜியைத் தூண்டி விடுவது எது என்று தெரியுமா? உடலுக்குள் இருக்கும் `ஆர்க்கிடோனிக்’ என்ற அமிலம் தான் என்றும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

இணையதளங்களிலிருந்து