Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,006 முறை படிக்கப்பட்டுள்ளது!

இஸ்லாம் அறிமுகம்

சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை – தொடர்: 11

மன்னனை இழந்த சோகம் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லை. நடைப்பிணம் போல் களையிழந்து கிடந்த இயல்பு வாழ்கை மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது.

விஜயனின் மனைவி மக்கள் தலை நகருக்குச் சென்று விட்டார்கள். கோட்டை பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

அதன் அருகே யாரும் போகவில்லை. போனால் பழைய நினைவு வரும் என்பதால்.

கால கட்டத்தில் பழைய சம்பவங்களும் அதன் தொடர்பான நினைவுகளும் மங்கிப் போனது.

ஒருநாள் மாலைப் பொழுது. பொழுது புலர்ந்து இடண்டரை நாழிகை இருக்கும்.

காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தத்தமது வேலைகளுக்காகப் புறப்படுவதற்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

எதேச்சையாக கோட்டைச் சுவர் பக்கம் பார்த்த ஒருவர் முகத்தில் கலவரம் தோன்ற பக்கத்தில் நின்றவர்களிடம் கையினால் சைகை செய்து கோட்டைப் பக்கம் சுட்டிக் காட்டினார்.

அவர்களும் பார்த்துக் கலவரமும், பீதியும் நிறைந்தவர்களாக எதுவும் புரியாமல் ஸ்தம்பித்து நின்றார்கள்.

அப்படி என்ன அதிசியத்தை அவர்கள் பார்த்தார்கள்.?

கிட்ட நெருங்கிப் பார்ப்போம்.

சுமார் பத்துப் பனிரெண்டு பேர் கொண்ட ஒரு குழு.

சிவந்த மேனி. உயர்ந்த ஆகிருதி. அளவோடு கத்தரிக்கப்பட்ட தாடி. அமைதியும் சாந்தமும் தவழும் வதனம்.

கழுத்தில் இருந்து கணுக்கால் வரை நீண்ட அங்கி. தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதைச் சுற்றி கருப்புக் கயிறு.

இந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ, அல்லது இதன் சுற்றுப்புற நாடுகளைச் சேர்ந்தவர்களோ அல்ல என்பதை முதல் பார்வையிலேயே தெரிந்து கொள்ள முடிந்தது.

பார்ப்பதற்குத் தேவதை போல் தோன்றுகிறார்கள். ஒரு வேளை வானத்தில் இருந்து வந்தவர்களோ?

தங்களைப் பார்த்து மிரட்சியுடன் சற்று தொலைவில் நிற்பதைக் குழுவில் ஒருவர் பார்த்தார்.

கிட்ட வருமாறு சைகை செய்தார். யாரும் அசையவில்லை. மீண்டும் மீண்டும் சைகை செய்யவே துணிந்து நாலைந்து பேர் முன்னேறி வந்தனர்.

அவர்கள் முகத்தோற்றத்தைப் பார்த்ததுமே குழுவிலுள்ள ஒருவர் தூய தமிழில் பேசலானார்.

“பயப்படாதீர்கள்!. நாங்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். எங்கள் நாட்டில் புதிதாக ஒரு மதம் தோன்றியுள்ளது. அதன் பெயர் “இஸ்லாம்”

அந்தப் புதிய மதம் பல நாடுகளில் பரவியுள்ளது. திரளான மக்கள் தாங்களாகவே முன் வந்து அதில் சேர்ந்து கொள்கிறார்கள்.

ஆனால் இந்த நாட்டில் அது சரியாகப் பரவவில்லை. இதன் கொள்கைகள் பாமரக்களுக்குத் தெரியாததே இதற்கு முக்கிய காரணம்.

எனவே இதன் கொள்கைகளை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறுவதற்காக எங்கள் நாட்டில் இருந்து ஒரு பெரிய பிரச்சாரக் குழு இங்கு வந்திருக்கிறது.

அதன் தலைவர் சுல்தான் செய்யிது இபுறாஹீம் என்பவர் திருநேல்வேலியில் இருக்கிறார். தலைமையகமும் அங்கு தான் இருக்கிறது.

எங்களைப் போல் பல குழுக்கள் பலபகுதிகளுக்கும் சென்றுள்ளது.

இப்பொழுது எங்களுக்கு ஓர் சிறிய உதவி செய்ய வேண்டும்.

இந்தப் புதியமார்க்கத்தின் கொள்கைகளைத் தெளிவாக விளக்கிச் சொல்வதற்கு வசதி செய்து தர வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் இதில் சேரலாம். இதில் நிர்ப்பந்தம் எதுவுமில்லை. ஒரு மணி நேரத்திற்குள் எங்கள் விளக்கத்தை முடித்துக் கொள்வோம்.”

ஊர்த்தலைவருக்குச் செய்தி பறந்தது. முக்கியமான சிலபேர்களை அழைத்து கலந்து ஆலோசனைசெய்தார்.

அவர்கள் என்ன தான் சொல்கிறர்கள் என்று பார்ப்போமே! இதில் தான் நிர்ப்பந்தம் ஒன்றுமில்லையே!” என்று எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

பகல் பொழுது வெயிலின் கடுமை தணிந்திருந்த நேரம். ஊருக்கு மேற்குப் புறமாக உள்ள திறந்த வெளியில் மக்கள் திரண்டிருந்தார்கள்.

பிரச்சாரக்குழுவினரைப் பார்த்ததும் ஆச்சரியத்தினால் கண்கள் அகல விரிந்தன. கூட்டம் அமைதி காத்தது.

ஊர்த் தலைவர் எழுந்தார். அவருடைய பார்வை கூட்டத்தைச் சுற்றி ஒரு முறை வலம் வந்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டார்.

பிறகு கணீரென்ற குரலில் “நம் ஊருக்கு வந்திருக்கும் இவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏதோ கூற விரும்புகிறார்கள். அதைக் கேட்ட பிறகு உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளலாம். இதில் நிர்பந்தம், கட்டாயம் எதுவுமில்லை. அவர்கள் வந்த வழியே சென்று விடுவார்கள்.” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.

அடுத்து குழுவில் இருந்து ஒருவர் எழுந்தார். முகத்தில் சாந்தம். கண்களில் காந்தம். உதட்டில் புன்னகை. பார்வையில் கனிவு.

ஒரே பார்வையில் கூட்டம் முழுவதையும் ஆராய்ந்தார். அனைவரின் பார்வையும் நேராகத் தன்னையே நோக்கியிருப்பதைக் கவனித்தார்.

மெளனமாக வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தார். பின்னர் தொனியை சற்று உயர்த்தி “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்ததை கொண்டு துவங்குகிறேன்” என்று குரலில் இனிமை ததும்பக் கூறினார்.

இதைச் செவியுற்றதும் கூட்டம் மொத்தமும் மெய் சிலிர்த்தது. மகுடியின் வசப்பட்ட பாம்பு போல் மெய் மறந்தனர். அவரது பேச்சைக் கேட்க முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு நெருங்கி வந்தனர்.  காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டனர். பேச்சாளர் தொடர்ந்து பேசலானார்.

“அன்புக்குரிய பெரியோர்களே! தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!…

கூட்டத்தினர் மீண்டும் உணர்ச்சி வசப்பட்டனர். ஏதோ காந்தம் தங்களைக் கவர்ந்திழுப்பதைப் போல் – கண்களுக்குத் தெரியாத ஓர் அதீத சக்தி தங்களை முழுமையாக ஆட்கொள்வதைப் போல் – உணர்ந்தனர்.

“உங்கள் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் பலன் தரக்கூடிய ஓரு செய்தியை சுருக்கமாக உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

என்னுடைய விளக்க உரைக்குப் பின் உங்கள் விருப்பம் எப்படியோ அதன்படி நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.

எங்கள் நாட்டில் புதிதாக ஒரு மார்க்கம் தோன்றியிருக்கிறது.  அதனை அறிமுகப்படுத்தியவர் ‘முஹம்மத் (ஸல்) என்பவர்.

இறைவனிடமிருந்து தேவ தூதர் மூலம் வரும் செய்திகளை அவர் மக்களுக்கு உபதேசம் செய்து அவர்களை நேர்வழியில் அழைத்தார்.

இதுவே ‘இஸ்லாம்’ என்னும் பதிய மார்க்கம்.

பற்பல நாடுகளில் இது பரவியுள்ளது. உங்கள் பகுதியில் அதைப் பற்றி விளக்கிக் கூறவே இங்கு வந்திருக்கிறோம்.” என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, அதன் நோக்கம், தத்துவார்த்தம், கடமை ஆகியவை பற்றிச் சுருக்கமாகவும் ஓரளவு விளக்கத்துடனும் கூறி முடித்தார்.

மகுடியில் லயித்திருந்த மக்கள் கூட்டம் தன்னுணர்வு பெற்றது. எல்லோருடைய பார்வையும் ஊர்த்தலைவர் பக்கம் திரும்பியது.

ஊர்த்தலைவர் பார்த்தார். இது தனிப்பட்ட விவகாரம். அவரவர் விருப்பம் போல் நடந்து கொள்ளட்டும். நாம் ஏன் வீணாக இதில் தலையிட வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.

குழுவினர் பக்கம் திரும்பி, “இது ஒரு சிக்கலான விஷயம். அவசரப்பட்டு முடிவுக்கு வர முடியாது. இதைப் பற்றி மக்கள் நன்கு சிந்தித்து முடிவுக்கு வர வேண்டும். அதற்கு அவகாசம். தேவை.

இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்குங்கள். மக்கள் தெளிவான ஒரு முடிவுக்கு வரட்டும். நாளைக் காலை இதே இடத்தில் மீண்டும் சந்திப்போம்.” என்று கூறி விட்டுக் கூட்டத்தினரை நோக்கி, “நாளைக் காலை இதே இடத்தில் மீண்டும் சந்திப்போம். இப்பொழுது கூட்டம் கலையலாம்’ என்று கூறி முடித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அக்காலத்தில் உள்ள மரபுப்படி பள்ளர், பறையர், மறவர், பனிக்கர், சக்கிலியர், இடையர், வெள்ளாளர், செட்டியார், அகம்படியர் என்று பல ஜாதிப் பிரிவினரும் வந்திருந்தனர்.

ஆசிரியர்: சி. அ. அ. முஹம்மது அபுதாஹிர்

சித்தார் கோட்டை –  ஓர் ஆய்வுக்கோவை அட்டவணை சித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை தொடரும்