Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 2,981 முறை படிக்கப்பட்டுள்ளது!

நோய் அறியும் கருவியாகும் போன்

நம் கண்களே நம்மை ஏமாற்றும்படியான பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் நமக்கு பரிசளித்துக்கொண்டிருக்கிறது நவீன தொழில்நுட்பம். வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்படும் நவீன வசதிகளுள் ஒன்று, செல்போன்களில் வந்திருக்கும் தொடுதிரை தொழில்நுட்பம் (டச் ஸ்கிரீன் செல்போன்). ஆனால் அதே தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் அடிநாதமான ஆரோக்கியம், மருத்துவம் ஆகியவற்றுடன் கைகோர்க்கும்போது பிரபலமாகிவிடும்.

`கம்ப்யூட்டர் சிப்’பில் ஒரு சோதனைக்கூடம் (lab on a chip model) என்பது நோய் அறியும் மருத்துவ தொழில்நுட்பத்தின் உச்சம் எனலாம். அதாவது, `கம்ப்யூட்டர் சிப்’ போன்ற சிறிய கருவியின் மீது எச்சில், ரத்தம் அல்லது சிறுநீர் போன்றவற்றை வைத்தால், அதிலிருக்கும் நோய் உயிர்குறிகளை (நோய் இருப்பதைக் குறிக்கும் மூலக்கூறு) ஈர்த்து வைத்துக்கொள்ளும். அதன்பிறகு அந்த சிப்பை ஒரு சோதனைக்கூடத்துக்கு அனுப்பி அதன் மூலம் நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த சிப் சோதனைக்கூட மாதிரியை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்குள் பொருத்திவிட்டால் என்ன என்று முயற்சித்ததன் விளைவு, `ஸ்மார்ட் போனின் தொடுதிரை நோய் அறியும் கருவி’ ஆனது என்கிறார்கள் கொரிய ஆய்வாளர்கள்.

நம் விரல் நுனிகளின் தொடுதலை கொண்டு இயங்கும், ஸ்மார்ட் போன்களின் இயக்கத்துக்கு அவற்றின் மின்தேக்குதிறன் தான் அடிப்படை. தொடுதிரைகளின் இந்த பண்பினை விரல் நுனிகளை விட மிக மிக நுண்ணிய மூலக்கூறுகளான டி.என்.ஏ அல்லது நுண்கிருமிகளை ஆய்வு செய்யும் வண்ணம் மாற்றி வடிவமைக்க முடியும் என்று நம்புகிறார்கள் இந்த கொரிய விஞ்ஞானிகள்.

ஏனென்றால், தற்போது விரல் நுனிகளை உணர பயன்படுத்தப்படும் தொடுதிரைகள், இதைவிட நுண்ணிய மூலக்கூறுகளை உணரும் அளவுக்கு பல மடங்கு அதிக திறன் வாய்ந்தவை. மின்தேக்குதிறனில் ஏற்படும் மிகச்சிறிய அளவு மாற்றங்களைக்கூட துல்லியமாக உணரும் திறன் வாய்ந்த தொடுதிரைகளை, நுண்ணிய கிருமிகள் அல்லது நோய் குறிகளை இனம் கண்டறிய பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த முயற்சியின் முதற்கட்டமாக, க்ளாமைடியா என்னும் ஒரு வகை நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாவின் மரபுப்பொருளை, வெவ்வேறு அளவுகள் கொண்ட மூன்று திரவங்களாக தயாரித்தார்கள். ஐபோனின் தொடுதிரை போன்ற ஒரு தொடுதிரையின் மீது இந்த மூன்று திரவங்களையும் வைத்தபோது, அவற்றின் மின்தேக்குதிறன் வித்தியாசங்களின் அடிப்படையில் பிரித்தறிந்தது.

இதற்கும் ஒரு ரத்த மாதிரியிலிருந்து ஒரு நுண் கிருமியை கண்டறிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், தொடு திரையை ஒரு நோய் அறியும் கருவியாக மாற்றுவதற்கான முயற்சியின் முதல் முக்கியமான படி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியில் பல தொழில்நுட்ப சிக்கல்களும் உண்டு. உதாரணமாக, தொடுதிரை கருவிகள் அனைத்தும் வியர்வை அல்லது ஈரப்பதம் ஆகியவற்றால் உண்டாகும் பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் ஒரு மென்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சிக்கலை போக்க, ஒரு நோய் அறியும் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனை உருவாக்க வேண்டும். அதை இயக்கும்போது, பொய் மின்தேக்குதிறன்களை தவிர்க்கும் மென்பொருள் செயலிழந்து போகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும். இந்த சிக்கல்களை எல்லாம் சரி செய்தாலும் கூட, ஒருவர் தன் ஸ்மார்ட்போன் தொடுதிரையைக் கொண்டு மட்டுமே தனக்கு வந்திருக்கும் நோய் பறவைக் காய்ச்சல்தான் அல்லது இன்னதுதானென்று தானே கண்டறிவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கும் என்கிறார்கள் இத்துறை வல்லுனர்கள்.

இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களில் சிலருக்கு, `எல்லாம் சரிதான். நம் எச்சில், சிறுநீர் அல்லது ரத்தம் இதையெல்லாம் நம்ம ஸ்மார்ட்போன் திரைமேல் வைத்துவிட்டு, பிறகெப்படி அதை தொலைபேச பயன்படுத்துவது? கற்பனை செய்வதற்கே சற்று சங்கடமாக இருக்கிறதே’ என்று நினைக்கத் தோன்றும்.

இது உண்மைதான், ஆனால் இதற்கும் ஒரு தீர்வு வைத்திருக்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்.

அதாவது, நோய்க் குறிகளை ஈர்க்கும் ஒரு திரையை நமது ஸ்மார்ட் போன் மீது ஒட்டிவிட்டு, அதன்மீது நம் எச்சில், சிறுநீர் அல்லது ரத்தம் போன்றவற்றை வைத்து பரிசோதனையை முடித்துக்கொண்டு, அதன்பிறகு அந்த திரையை தூக்கி எறிந்துவிட்டால் போதுமே என்கிறார்கள்.

சரிதான், நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது.

புற்றுநோய் அணுக்களை கண்டறிய உதவும் `ஸ்ப்ரே’

புராணத்தில் அந்தாகன் என்றொரு கொடிய அரக்கன் இருந்ததாகவும், உலக மக்களை கொடுமைப்படுத்திய அவனை அழிக்க சிவன் முயன்றபோது அவன் உடலில் இருந்து விழுந்த ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் அவனைப் போன்ற ஒரு அரக்கன் உருவானதாகவும் ஒரு கதை உண்டு. இறுதியில், அந்த அரக்கனை அழிக்கச் சென்ற தேவி, அந்தாகனின் உடலில் இருந்து வெளியாகும் ரத்தத் துளிகள் கீழே விழும் முன் குடித்துவிட, அந்தாகன் அழிக்கப்பட்டான் என்கிறது புராணம்!

கிட்டத்தட்ட, இந்த கதையில் வரும் அரக்கன் `அந்தாகன்’ போலத்தான் கொடிய உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயும்!

எப்படி என்கிறீர்களா?

புற்றுநோயைப் பொறுத்தவரை, அதை தொடக்கத்திலேயே அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிட்டால், அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தி புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்திவிட முடியும். ஆனால், ஒரு புற்றுநோய் நன்றாக வளர்ந்து, பரவும் திறனுள்ள புற்றணுக்களைக் கொண்ட ஒரு கட்டியாக மாறிவிட்டபின் அறுவை சிகிச்சை செய்தால், அதிலிருந்து வெளியாகும் திரவம் அல்லது புற்றணுக்கள் சுற்றியுள்ள ஆரோக்கியமான உயிரணுக்களையும் பாதித்து புற்றுநோயை மீண்டும் உண்டாக்கிவிடும்.

இப்பொழுது புரிகிறதா, எப்படி அந்தாகனும் புற்றுநோயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்று?

இந்த நிலையில் புற்றுநோயை அழிக்க ஒரு புதிய முயற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்கிறார் அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர் ஹிசாடாகா கொபாயாஷி.

மருத்துவர்கள், புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றும்போது, ஆரோக்கியமான தசையும் நீக்கப்படுவதை இயன்ற அளவு தவிர்க்கவே முயற்சி செய்வார்கள். ஆனால், ஆரோக்கியமான உயிரணுக்களுடன் கலந்திருக்கும் புற்றணுக்களை இனம் கண்டறிவது மிக மிக கடினமான ஒன்று. இந்த சிக்கல் காரணமாக, புற்றுநோய்க்கான சிகிச்சைகளின் போது பல புற்றணுக்கள் தப்பித்துவிடுகின்றன. இவ்வாறு தப்பித்துவிடும் புற்றணுக்கள் மீண்டும் புற்றுநோய் வளர காரணமாகின்றன.

ஆக, புற்றுநோய் மருத்துவத்தின் தலையாய நோக்கம் புற்றணுக்களை எல்லாம் இனம் கண்டு அழிப்பது. இந்த நோக்கத்துடனான பயணத்தில்தான் புற்றணுக்களை அடையாளம் காட்டும் திறனுள்ள `ஒளிரும் ஸ்ப்ரே’யை கண்டுபிடித்திருக்கிறார் ஆய்வாளர் கொபாயாஷி. அதாவது, ஒரு அறுவை சிகிச்சையின் போது ஒளிரும் தன்மையுள்ள இந்த ஸ்ப்ரேயை, புற்றுநோய் கட்டிமீது தெளிப்பார்கள். இந்த ஸ்ப்ரே தெளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, நோயாளியின் உடலின் எந்தெந்த பகுதியில் புற்றணுக்கள் இருக்கின்றன என்பதை துல்லியமாக அடையாளம் காட்டிவிடும். இதன் மூலம், ஆரோக்கியமான உயிரணுக்களை தவிர்த்து, புற்றணுக்களை மட்டும் அறுவை செய்து அகற்ற முடியும். இந்த ஸ்ப்ரே செயல்படும் விதம் குறித்து எலிகளின் மீது ஆய்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது.

இனி, ஒளிரும் ஸ்ப்ரே எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

புற்றணுக்களில் மட்டும் glutamyl transpeptidase என்றொரு என்சைம் அளவுக்கதிகமாக உற்பத்தியாகிறது. இது ஆரோக்கியமான உயிரணுக்களில் இல்லை. புற்றணுக்களை ஒளிர வைக்கும் ஸ்ப்ரேவில் இந்த என்சைமின் செயல்பாட்டுக்கு தேவையான மூலப்பொருள் இருக்கிறது. புற்றணுக்களிலுள்ள என்சைமுடன் ஸ்ப்ரேவிலுள்ள வேதியியல் மூலப்பொருள் இணையும்போது அந்த புற்றணுவும் ஒளிர்கிறது.

புற்றுநோய் மருத்துவத்தின் இந்த புதிய யுக்திக்கு ஒரேயொரு தடைக்கல் மட்டும் இருக்கிறது. அதாவது, புற்றணுக்களை அடையாளம் காட்டும் இந்த ஸ்ப்ரே மருந்து செயல்படத் தேவையான என்சைமான glutamyl transpeptidase, எல்லா புற்றணுக்களிலும் உற்பத்தியா வதில்லை. மாறாக, மிகவும் வேகமாக வளரும் தன்மையுள்ள புற்றணுக்களில் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் என்ன பிரச்சினை என்று கேட்டால், மிகவும் வேகமாக வளரும் புற்றணுக்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். ஆனால், மெதுவாக வளரும் தன்மையுள்ள, ட் கீஙீஞிஞ்ஹஙுட்ஙீ ஞ்சுஹஙூசூசிக்சிஞ்கூக்ஷஹசூக் உற்பத்தியாகாத புற்றணுக்கள் சிகிச்சையிலிருந்து தப்பித்துவிடும். இத்தகைய பிரச்சினை இருந்தாலும் கூட, சினைப்பை, கருப்பைவாய், குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் களுக்கான சிகிச்சைக்கு, இந்த புதிய வகை ஒளிரும் ஸ்ப்ரே மருந்து மிகவும் பயனுள்ள ஒன்று என்கிறார்கள் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள்!

(ஆச்சரியங்கள் விரியும்…)

நன்றி:  முனைவர் பத்மஹரி — தினத்தந்தி – இளைஞர்மர்